Search This Blog

Friday, October 17, 2014

பிரிவுகள்,சினேகிதனின் தாழ்வான வீடு - கலாப்ரியா

கலாப்ரியா
பிரிவுகள்
நாளை இந்தக் குளத்தில் 800px-Kalapriya
நீர் வந்து விடும் 
இதன் ஊடே 
ஊர்ந்து நடந்து 
ஓடிச் செல்லும் 
வண்டித் தடங்களை 
இனி காண முடியாது 
இன்று புல்லைத்  
தின்று கொண்டிருக்கும் 
ஆடு, நாளை 
அந்த இடத்தை 
வெறுமையுடன் 
சந்திக்கும் 
மேலே பறக்கும் 
கழுகின் நிழல் 
கீழே 
கட்டாந்தரையில் 
பறப்பதை 
நாளை பார்க்க முடியாது 
இந்தக் குளத்தில் நாளை 
நீர் வந்து விடும்
*****
கலாப்ரியா

சினேகிதனின் தாழ்வான வீடு

kalapria
கறுப்பேறிப் போன 
உத்திரம், 
வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு 
கையெட்டும் உயரத்தில். 
காலேஜ் படிக்கும் அண்ணன் 
அதில் அவ்வப்போது 
திருக்குறள், 
பொன்மொழிகள் 
சினிமாப் பாட்டின் 
நல்லவரிகள் - என 
எழுதியெழுதி அழிப்பான் 
எழுதுவான். 
படிப்பை நிறுத்திவிட்டு 
பழையபேட்டை மில்லில் 
வேலை பார்க்கும் அண்ணன் 
பாஸிங்ஷோ சிகரெட்டும் 
தலைகொடுத்தான் தம்பி 
விளம்பரம் ஒட்டிய 
வெட்டும்புலி தீப்பெட்டியும் 
உத்திரத்தின் 
கடைசி இடைவெளியில் 
(ஒளித்து) வைத்திருப்பான். 
அப்பா வெறுமனே 
பத்திரப்படுத்தி வந்த 
தாத்தாவின் - பல 
தல புராணங்கள் 
சிவஞானபோதம் 
கைவல்ய நவநீதம் 
சைவக்குரவர் சரித்திரங்கள் 
பலவற்றை, 
வெள்ளையடிக்கச் சொன்ன 
எரிச்சலில், பெரிய அண்ணன் 
வீசி எறியப் போனான். 
கெஞ்சி வாங்கி 
விளக்கு மாடத்தில் அடைத்ததுபோக 
உத்திர இடைவெளிகளில் 
ஒன்றில் தவிர 
அனைத்திலும் 
அடைத்து வைத்திருப்பாள் 
அவன் அம்மா. 
முதல்ப்பிள்ளையை 
பெற்றெடுத்துப் போனபின் 
வரவே வராத அக்கா 
வந்தால்- 
தொட்டில் கட்ட 
தோதுவாய் - அதை 
விட்டு வைத்திருப்பதாயும் 
கூறுவாள். . . . . . . . . . . . . 
நின்றால் எட்டிவிடும் 
உயரம் 
என்று சம்மணமிட்டு 
காலைக் கயிற்றால் பிணைத்து - 
இதில் தூக்கு மாட்டித்தான் 
செத்துப்போனார் 
சினேகிதனின் 
அப்பா.
* * * * *

No comments:

Post a Comment