Search This Blog

Wednesday, October 15, 2014

கருத்தரித்தல்....

குறிப்பு: கர்ப்பிணிகள் இப்பதிவை படிக்க வேண்டாம்....
புற அதிசயங்கள் அனைத்தையும் மிஞ்சும் அதிசயம் ஆகிய உயிர் உருவாதல் பற்றி ஏற்கனவே சில பதிவுகளில் பார்த்தோம். இனி இன்னும் இரண்டும் அல்லது மூன்று பதிவுகளில் அதை பற்றி அலசுவோம். உடல், உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா ஆகியவற்றின் தொகுதியே மனிதன். தான் செய்த நல்வினை மற்றும் தீவினைப் பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றியபடி செல்கின்ற உயிரின் பயணமே வாழ்க்கை. உயிர், பழைய உடலை விடுவது மரணம். புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு. உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது. உயிர் தந்தையின் வழியாகத் தாயின் கருப்பைக்குள் புகுகிறது. இந்த உடல்+உயிர்ச் சேர்க்கையில் இறைவன் ஆன்மாவாகப் புகுந்து அதனை இயங்கச் செய்கிறார். உயிரின் இந்த பயணத்தைப் பற்றி சில கருத்துகளை இப்பதிவில் பார்ப்போம். இவை ரிக் வேதம் ஐதரேய உபநிஷத்தில் வருகின்றன. மூன்றுபிறப்பு பற்றி சொல்லப்படுகிறது. அதாவது முதற்பிறப்பு கருத்தரித்தல், இரண்டாம் பிறப்பு குழந்தை பிறப்பு, மூன்றாம் பிறப்பு கருப்பையின் உள்ளே. இதில் முதல் பிறப்பை பற்றி பார்ப்போம்.
‘(கர்ப்பிணிகள் வெளியேறவும்) மனிதன் ஆரம்பத்தில் ஆணிடம் விந்துவாக இருக்கிறான். விந்து என்பது எல்லா உறுப்புக்களின் ஆற்றல் திரண்டு உருவாகிறது. ஓர் ஆண் இவ்வாறு தன்னில் தன்னைத் (விந்து வடிவில்) தாங்குகிறான். விந்துவை எப்போது பெண்ணில் விடுகிறானோ அப்போது தன்னைக் (குழந்தையாகப்) பிறப்பித்துக்கொள்கிறான். இது அவனது முதற்பிறப்பு’.
இந்த மந்திரமும் இந்த அத்தியாத்தில் தொடரும் மந்திரங்களும் உடலுறவு, கருத்தரித்தல் போன்ற கருத்துக்களைக் கூறுகின்றன. இதிலிருந்து சில உண்மைகளை நாம் அறிந்துக்கொள்கிறோம். ‘கர்ப்பிணிகள் வெளியேறவும்’ என்று ஆரம்பத்தில் வருகிறது. எனவே அரச சபை, பண்டிதர் சபை போன்ற பொது இடங்களில் இந்தக் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன என்பது தெரிகிறது. இத்தகைய எல்லா விவாதங்களிலும் கருத்துப்பரிமாற்றங்களிலும் பெண்கள் கலந்துகொண்டார்கள் என்பது தெரிகிறது. பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கியக் காரனங்களுள் ஒன்றை இங்கே காண்கிறோம். உடலுறவு, கருத்தரித்தல் போன்றவை சபைகளில் விவாதிக்கப்பட்டன. குருகுலத்தில் தகுந்த ஒருவரால் சிறுவயதிலேயே இவை கற்ப்பிக்கபடுவது பற்றி தைத்திரீய உபநிஷதம் கூறுகிறது. உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை கீதை(10.28) தெய்வீகமாகப் போற்றுவதும் இங்கு நினைவுக்கூரத் தக்கது.
இனவிருத்தி என்பது கடவுளின் மிகப் புனிதமான சின்னம்; கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்த பிரார்த்தனை. நல்லதோ, தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரை உலகிற்குக் கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை. இது என்ன வேடிக்கையா? அல்லது வெறுமனே நரம்புகளுக்குத் திருப்தி அளிக்கின்ற செயலா? மிருகத்தனமான உடலின்ப அனுபவமா? இல்லை, இல்லையென்று ஆயிரம் தடவை சொல்கிறான் இந்து. என்கிறார் சுவாமி விவேகானந்தர். வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களான இவைபற்றி உரிய வேளையில், உரிய முறைப்படி சிந்திப்பதும் கற்பிப்பதும் செயல் படுவதும் நல்ல சமுதாயம் உருவாக வழிகோலுகின்றன. இனி மனிதனின் இரண்டாம், மூன்றாம் பிறப்பு பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment