Search This Blog

Monday, August 18, 2014

பாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன் கவிதைகள்

பாத மலர்
மலரற்ற தார் ரோடில் 
பாதங்கள் விழிக்கு மலர். 
கார் அலையும் தெருக்கடலில் 
பாதங்கள் மிதக்கும் மலர்.vaideeswaran-01 
வெயில் எரிக்கும் 
வெறுந் தரையில் 
வழி யெதிரில் 
பாவாடை நிழலுக்குள் 
பதுங்கி வரும் வெண் முயல்கள். 
மண்ணை மிதித்து 
மனதைக் கலைத்தது, 
முன்னே நகர்ந்து 
மலரைப் பழித்தது 
பாதங்கள்.
மனிதனுக்கு
மேக நிழல் 
மிக மெல்லிய நைலான் துணியாய் 
நிலத்தில் புரளும், 
பகல். 
தார் ரோடில் 
தன் நிழலை நசுக்கி மிதித்து 
வாழ்க்கையின் மூலச்சூட்டால் 
கொதித்தோடும் 
மனித வாகனங்கள் பல. 
வயிற்றின் நிழலாய் 
பசி பின்தொடர 
வாழ்வின் நிழலாய் 
தன்னலம் பதுங்க, 
வறட்சியில் புரட்சி, கட்சி, 
நகரெங்கும் நிழற்கடல்கள், 
அதன் மோதல்கள். 
கணத்திற்குக் கணம் 
தான் காய்ந்து 
பொது நிழல் பரப்பக் 
கிளைகள் வளர்க்கும் 
மரங்களும் உண்டு 
இந்த மனிதனுக்கு.

நன்றி: அரியவை

No comments:

Post a Comment