Search This Blog

Monday, August 11, 2014

சப்தரிஷிகள்

கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகள்! (மற்றொரு விதமாகவும் சொல்வதுண்டு).

கச்யபர்: தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே மனித குலம்!

அத்ரி: இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும் அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம்.

பரத்வாஜர்: இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர் என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

விஸ்வாமித்திரர்: இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர். விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு.

கவுதமர்: அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

ஜமதக்னி: துஷ்டர்களை அடக்க அவதாரம் இஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

வசிஷ்டர்: இவரின் ஆன்மிகத் தகவல்கள் இன்றும் பயனுள்ளவையாகப் போற்றப்படுகின்றன. அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும் சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி! ஆவணி மாத வளர்பிறை 5-ம் நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.

No comments:

Post a Comment