Search This Blog

Thursday, July 31, 2014

மீன் வாங்கப்போறீங்களா?...

ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட... மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்... மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக்கூடுதலாக 18முதல் 25கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்புடைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர். நெத்திலி, வாவல்(வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது. மீன்களின் மருத்துவப்பண்புகள் சில... 1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது. 2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. 3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது. 4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது. 5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன. 6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது. 7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. 8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது. 9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது. இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. சரி... இப்படிப்பட்ட மீனை வாங்கும்போது அது நல்ல மீனா?... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது?... மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்... இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்... அவை என்னென்ன?... மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்... தரமான மீன்கள் என்றால்... 1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும். 2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும். 3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும். 4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது. 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும். 7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும். தரம் குறைந்த மீன்கள் என்றால்.. 1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும். 2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும். 3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும். 4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும். 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும். 7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும். என்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா?... அப்புறமென்ன?... இனி முடிந்தவரையிலும் இறைச்சிக்கடைகளின் பக்கம் திரும்பாமல் உங்களது பார்வையை மீன் மார்க்கெட் பக்கம் திருப்பி ஆரோக்கியமான உணவை உண்ணத்தொடங்குங்கள்... மற்றபடி என்ன மீன் வாங்கலாம் என்றெல்லாம் குழம்பாமல் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமிருப்பதால் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி கம கமவென சமைத்து சாப்பிடுங்கள்...

எலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்!

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.

கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.

எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.

இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.

எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.

எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.

ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

ரெசிபி

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

டயட்

பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.

அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

மிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழிகள்(PROGRAMMING LANGUAGE)...


1. Facebook => PHP
2. Youtube = >Flash , Pthython , Java
3. Google => Java (Web) , C++ (Indexing)
4. Yahoo => PHP and Java
5. Microsoft = >.Net
6. Wikipedia = >PHP
7. Blogger = >Java
8. MSN = >.Net
9. Twitter = >Ruby on Rails , Scale , Java
10.AMAZON = >JAVA SCRIPT,JAVA,J2EE, PERL

நுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்

ரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. எதிரே கைகட்டி நின்றவர்கள் யாரென்று தெரியவில்லை இவளுக்கு. வாசலில் சிம்சன், நேசமணி, அருள் இன்னும் மூவர் நின்றிருந்தனர் பயம், பணிவுடன்.
“விசுவாசத்தோடு லெட்டரை கொண்டு போய் குடுய்யா. கட்டாயம் செegbert satchய்வாரு.”
“தயானந்தம் தட்டமாட்டாருபா சேர்மன் ஐயா சொன்னார்னா. நீ போயி மொதல்ல அவர கண்டுனுவா. துட்டு, ஸ்காலர்ஷிப்னா மட்டும் வுடாத வந்து பாருங்க. சர்ச் பக்கம் வந்துராதீங்க.”
”என்னய்யா?”
“இனிமேட்டு தவற மாட்டேங்கயா...”
“ஒழுங்கா ஆலயத்துக்கு வரதுக்கு என்ன? ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும். தெரில? அடுத்த வாட்டி வரும்போது ஒழுங்கீனமா இருந்தனா நானே சொல்லி ஒம் பையனுக்கு ஸ்காலர்ஷிப்ப கட் பண்ணிருவேன், தெரிதா.”
“சரிங்கய்யா....”
தேவன்பு இவள் பக்கம் திரும்பினான், “ஐயா கேட்டார்னா டவுன் சர்ச்சிக்கி போறதா சொல்லிர்ட்டா?”
இவள் பதில் சொல்லவில்லை. ரவுண்ட் பங்களாவைச் சூழ்ந்திருந்த வேலிக் காத்தான்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எல்லோரும் சென்றபின் வராண்டாவில் போய் நின்றான் தேவன்பு தயக்கத்துடன். பையை ஓரமாக வைத்தான். பின்னால் கதவின் மீது லேசாக சாய்ந்து நின்றாள் இவள். ஏரியா சேர்மன் முகம் எழுதிக் கொண்டிருந்த லெட்டர்பாட் மீது கவிழ்ந்திருந்தது.
“என்னா...” ஊழியர் கண்ணடித்தார் தேவன்பைப் பார்த்து. தலையைச் சொறிந்து கொண்டான். “ஐயா வரச்சொன்னீங்க...” சேர்மன் நிமிர்ந்தார். “தோத்தரங்கய்யா”. தோள்களை உயர்த்தி, மார்பைக் குவித்து முன்னால் சரிந்து வணங்கினான்.
“ஐயா நான் சொன்னனங்களெ தேவன்பு, இவந்தாங்க. அவ சலோமி. மகளுங்க.”
முகத்திலிருந்து லுங்கியின் கீழ் தெரிந்த கால்வரை துழாவியது சேர்மன் பார்வை. “நீதானா” மீண்டும் உற்றுப் பார்த்தார் லேசாகத் தலையசைத்தபடி. அவன் சங்கடத்துடன் அசைவது இவளுக்குத் தெரிந்தது. “என்ன வேலையா பாக்ற?”
”பெண்கள் விடுதில தோட்டகாரங்கயா”
“எத்னி வருஷமா?”
“பத்து வருஷங்கயா.” விரல்விட்டு எண்ண ஆரம்பித்தான். “இல்லிங்க... பதிமூணாவதுங்க இந்த கிறிஸ்மஸ் ஐயா...” தலையைச் சொறிந்தான். “கரிக்டா தெரிலங்க..”
“மிஷன்ல வேலை கிடைக்கிறதுக்கு முன்னாலே என்ன செஞ்சிட்டிருந்த?”
”மின்னாடிங்களா...” சிரித்தான். “என்னாலாமோ செஞ்சேங்கயா, எதங்கயா சொல்றது?”
”யோவ், ஐயா என்னா கேக்றாரு, நீ என்னா பதில் சொல்ற? இதுல சிரிப்பு வேற. தென்னேரில இந்தாளு செருப்பு தெச்சிக்கினிருந்தாருங்க.”
“ஆமாங்கய்யா. நம்ம ஐயாதாங்க. யோவ் இதெல்லா வானாய்யா கடவுள் ஒனக்கு வேறோர் வேல வெச்சிக்னிருக்காருனு சொல்லி தேவபுத்ரன் ஐயரு கைல இட்டாந்தாருங்க. அவர் தாங்கயா இந்த வேலைய போட்டுத் தந்தாருங்க.”
“தோட்ட வேலைல இந்தாளு கில்லாடிதாயா. விடுதிய சுத்தி மாமரம், தென்னமரம், பூச்செடிகள்லா வெச்சி ஏதேன் தோட்டம் போல ஆக்கிட்டாங்க. சர்ச்சில்கூட செக்ஸ்டன் எதா தோட்டத்த கவனிக்கிறான். இந்தாளுதா எல்லாத்தியும் பாத்துக்றது.”
“மொட்டக் கடுதாசி எப்பயிருந்துயா எழுத ஆரம்பிச்சிருக்க?”
”ஐயா?”
”அதாயா, பெயர் போடாம எழுதற லெட்டர்.”
”ஐயா?”
“நல்லா நடிக்கறயா. உனை மாதிரி எத்னி பேர பாத்திருப்பேன். ஐயருமாருகல்லாம் உனக்கு கிள்ளுக்கீரைகளாய்ட்டாங்க இல்ல? வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா தேவன்பு?”
“ஐயா என்ன என்னாலாமோ சொல்றீங்களே.. எனக்கு எய்தவே தெரியாதுங்கயா..”
“உனக்கு தெரியாதுன்னு எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட கடிதங்கள் வெறொருத்தர விட்டுத்தாயா எழுதச் சொல்றது வழக்கம். ஒம் பேரென்ன?”
“சலோமி.”
“பிஎட் படிச்சிருக்க. பத்து வருஷத்துக்கு மேலாக இந்த மிஷன் உங்கப்பாவுக்கு வேலை குடுத்திருக்கு. எவ்வளவு நன்றியுணர்ச்சி வேணும்? நீயாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா? ஊழிக்காரங்களை தூஷிக்க சொல்லியாமா வேத புத்தகம் கற்றுத் தருது? இந்த மாதிரி மனுஷனுக்கு போயி நம்ம ஜேம்ஸ் சிபார்சு பண்ண வராப்ல.”
“தேவன்புதான் செஞ்சானு நம்பமுடிலீங்க...”
“நா பொய் சொல்றேனா?”
“அப்டி சொல்லீங்க...”
”சியோன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல கடை எடுத்தவங்க ஒவ்வொருத்தரும் பத்தாயிரம் எனக்கு குடுத்தாங்க. ராஜரத்னம் ஐயரை ஆள்வச்சி அடிச்சேன். பேராயத்ல ஜாதி சண்டைய தூண்டி விடுறேன். இந்த கதைலா உனக்கு யாருய்ய சொன்னாங்க? சலோமிக்கு வேலை தரலைன்னா உங்க பாஸ்ட்ரேட்டுக்கே வரமுடியாதாயா? இதெல்லாங்கூட பரவால்ல. என்னை பல பொம்பளைகளோட சம்பந்தப்படுத்தி வேற எழுதியிருக்கான், அயோக்ய ராஸ்கல்.”
“ஐயா பைபிள் மேல ஆணையா நா செய்லீங்கயா. நா என்னா பாவஞ் செஞ்சேன்... இப்டிலா ஐயா சொல்றாறே சாமி...” சேர்மன் கால்களை அங்கியோடு கட்டிப்பிடித்துக் கொண்டான்.
“சே எழுந்திரியா, எழுந்திரி... ஜேம்ஸ், எழுப்புய்யா இந்தாள...”
அவன் உடம்பு வேகமாகக் குலுங்கிக் கொண்டிருந்தது.
“தேவன்பு... ஏம்பா....” அவன் முழங்கையைப் பிடித்திழுத்தார் ஊழியர்.
இவள் அவன் முதுகைத் தாங்கி நிறுத்தினாள்.
“இட்டுக்னு போம்மா. பேஜாரா பூட்ச்சி.”
“நீங்கதாங்யா எம்மவளுக்கு வேல போட்டுத் தரணும், எட்டு வருஷமா சும்மாயிருக்கிதுங்யா. சத்யமா கைநாட்டுதாங்கயா வெக்கத் தெரியும். வேறொண்ணும் தெரியாதுங்கயா...”
வாசலுக்கு வெளியே போய் நின்றார் சேர்மன் இடுப்புக் கயிற்றைச் சரிசெய்தபடி. போதகர் பைக் கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.
”வாயா அந்தாண்ட” சபை ஊழியர் இவன் முதுகைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்.
போதகர் பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தார்.
“தோத்தரங்கயா.” இவன் கண்களைத் துடைத்துக்கொண்டு கைகூப்பினான் போதகரைப் பார்த்து. ஊழியர் அவனைத் தள்ளிக் கொண்டு பங்களாவின் மறுபுறம் வந்தார்.
“சுத்த பேமானியாக்றிய, ஏங்கைலெகூட இத்த சொல்லலியே நீ?”
“எதங்கயா?”
“மொட்ட கட்தாசிதாயா, காரியமே கெட்டுப்டும் போலிக்கே. காட்வின் ஐயரோட சம்சாரங்கூட அந்த போஸ்ட்டுக்கு ட்ரை பண்ணுது. இந்த நேரத்ல போயி இப்டி செஞ்சிட்டியே.”
“என்னாங்கயா நீங்ககூட சொல்றீங்க. நா எய்தவே இல்லீங்க.”
”பின்ன ஆருய்யா எழுதியிருப்பாங்க?... சரி, சாப்டற நேர்த்ல ஐயா கைல பேசிக்லாம். எத்னி கிலோ கறி எட்தாந்த?”
“ஒன்ற கிலோங்க”
“ரெண்டா எட்திருக்கலாம்ல? பரவால, நீ கெளம்பு, நாழி ஆவ்து. புதினா சட்னி செஞ்சிரு. அதில்லாம சாப்ட மாட்டாரு. வேறென்னயா வாங்கணும்?”
“அதெல்லா நா பாத்துக்கறேங்க.”
“ஏய்யா, ஐயா என்ன வேலைன்னு கேட்டா எல்லாத்தியும் ஒப்பிச்சுருவியா? சாராயம் காச்னது, ஏரில திருட்டுத்தனமா மீன் புட்சி வித்தது. வுட்டா இதெல்லாகூட சொல்லியிருப்பல்ல? சரியான நாட்டுப்புறத்தான்யா” மண்டையில் அடித்துக் கொண்டு சென்றார்.
லெவல் க்ராஸிங் அருகே வந்ததும் நின்றான் தேவன்பு. “மறந்துட்டம் பாத்தியா, கல்லக்கா பைய... நீ வூட்டுக்குப் போம்மா. நா போயி ஐயா கைல பைய குட்துட்டு, விருந்துக்கு வேற ஏற்பாடு பண்ணனும். நீ கெளம்பு.”
“என்னாத்துக்கு நீ சேர்மன் கால்ல வுழுந்த?”
அவன் எதுவும் பேசவில்லை.
“சுகிர்தாம்மாட்டர்ந்து அரிசி திருடிக்னு வந்து பிரியாணி செய்யணுமா? அந்தம்மாவுக்கு தெரிஞ்சா ஒ வேலப்டும்.”
“அதெல்லா ஒண்ணும் ஆவாது. கடவுள் பாத்துக்குவாரு. ஆவட்டும். நீ கெளம்பு. மூணு மணிக்கா செங்கல்பட்டு, மதுராந்தகம்லா போவணும்.”
கருவாடு கழுவிக் கொண்டிருந்த ஞானம், “பாத்தியா? என்ன சொன்னாரு?” வழிந்தோடிய அழுக்குத் தண்ணீரைப் பார்த்தபடி நின்றாள் இவள். “செய்றேனாரா இல்லியா?”
”அப்பா மொட்ட கட்தாசி எய்தியிருக்றதா சேர்மனு சொல்றாரு.”
”மெய்யாலுமா?”
“வண்ட வண்டையா அவர பத்தி எய்தினா எப்டி செய்வாரு?”
“அட இன்னாவா அதுக்கு? அந்தாளு ரொம்ப யோக்யன்றாரா? சாமுவேலு பொண்ணை வெச்சினிருக்காரே தெரியாதா? பெர்சா அங்கி போட்டுக்னு வந்தா செஞ்சது மறஞ்சிருமா? வேடலுமேரி இல்ல, அவ கைல கேட்டா புட்டு புட்டு வெப்பா அந்தாளப் பத்தி.”
“அதெல்லா நமக்கெதுக்கு? வேல குடுக்றீங்களா இல்லியானுதான கேக்கணும். அவ்ரு எப்டி போனா என்ன, கடவுளுக்கு கணக்கு குட்துட்டு போறாரு.”
“ஆமாமா நல்லா குட்தாரு. அடச்சே போ அந்தாண்ட” கோழியை விரட்டினாள். “எதா உங்கப்பாவ?”
“ஊழியரு வூட்டாண்ட சேர்மனு, ஐயருக்லா விருந்து செய்றாரு.”
“தொரைகளுக்கு விருந்து போடப்ப்டாரா விருந்து. பேமானி, வூட்டுக்கு எதுனா செய்னா செய்வாரா? ஊழியரு ஐயா, ஊழியரு ஐயானு அந்தாளு வூட்லியே குந்திக்னு கெடக்றாரு.”
இவள் குடிசைக்குள் சென்றாள். எலிசபெத் வரலாறு படித்துக் கொண்டிருந்தாள் சப்தமாக. ப்ரீடாவைக் காணவில்லை. டிரங்க் பெட்டியிலிருந்து 150 ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
“இந்தா. துட்ட எங்க வெக்க?”
“என்னாத்துக்குடி, எனக்கொன்னும் வானாம். பாங்க்ல ஒம்பேர்ல போட்டு வெய்யி. கல்லாணத்துக்கு ஒதவும். கரஸ்பாண்டன் கைல சொல்லி எறநூறா குடுக்கச் சொல்லலாம்ல? நூத்தம்பது ரூவாவ போயி துட்டுனு குடுக்றார என்னா நாயம்?”
பெட்டியில் மீண்டும் பணத்தை வைத்தாள். ஃப்ரீடா வந்தாள். தலை சீவி யூனிஃபார்ம் அணிவித்தாள். சாப்பிட்டு, தங்கைகள் ஸ்கூலுக்குக் கிளம்பிச் சென்றதும் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டாள். ஐந்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இருந்த மீனாட்சியின் கடிதத்தைப் பிரித்தாள். “உனக்கு என்றதும் அப்பாவுக்கு பூரண சம்மதம். எதற்கும் ஒருமுறை வீட்டைச் சென்று பார்த்து வருமாறு கூறினார், நர்சரி நடத்த உகந்ததுதானா என்று. ரஞ்சிதம் வீட்டில் சாவி இருக்கிறது. உனக்காக நானும் பிரார்த்திக்கிறேன். நிச்சயம் உன்னைக் கடவுள் கைவிட மாட்டார். வாடகையைப் பற்றிக் கவலைப்படாதே. இடத்தைப் பார்த்து உன் முடிவை எழுதவும். காயத்ரி, சதீஷ் சௌக்கியம். காயத்ரி முன்னைவிட படுசுட்டி. அடுத்த வருஷம் ஸ்கூலுக்கு அனுப்பணும். ‘சனங்களின் கதை’ வித்தியாசமாக இருந்தது. அனுப்பியதற்கு நன்றி. ‘யாரோ ஒருவனுக்காக’ கொண்டு வருகிறேன். வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது. குழந்தைகள் இல்லையென்றால் என்றோ செத்துப் போயிருப்பேன். வீட்டின் மூலையில் சமையலறை படிக்க வேண்டும் போல் உள்ளது. எடுத்து வைக்கவும்.”
இரண்டரைக்கு அவசரமாக வந்தான் தேவன்பு. பிரியாணிப் பொட்டலத்தை ஞானத்திடம் கொடுத்தான். “நீயே துன்னு. அந்தாளு வூட்டுக்குப் போவாம தூக்கம் வராதா ஒனக்கு. பிரியாணியாம், தூ”. மூலையில் போய் விழுந்தது பொட்டலம்.
“என்னா நீ, நா சொல்றது தெரில? என்னாலா பேசுனான் என்ன பத்தி பஸ் ஸ்டாண்டுல வச்சி. அவ வூட்டுக்கு போறிய. சூடு சொரணக்கிதா ஒனக்கு? இருந்தா அன்னிக்கு தேவடியாள்னு அவன் சொன்னதுக்கு மரமாட்டம் நின்னுக்கினிருப்பியா? பொட்டப்பய. ஒனக்லா என்னாத்துக்யா பொஞ்சாதி புள்ளிக...”
“சர்டிபிகேட்லா கூட எட்த்க.”
வெளியில் வந்தனர். ஞானம் பாத்திரங்களை விட்டெறிந்து கொண்டிருந்தாள்.
பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பாலாற்றின் வெற்றுமணல் வெகுதூரம் வரை வெயிலில் வெறிச்சிட்டுத் தெரிந்தது. எப்போதோ ஓடிய தண்ணீர் இழுத்துக் கொண்டு வந்து போட்ட மணல்.
செங்கல்பட்டு ஆஸ்பத்திரியைத் தாண்டி என்.ஜீ.ஓ.காலனிக்கு நடந்தனர். பெஞ்சமின் வேதநாயகம் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தார்.
“என்ன தேவன்பு, என்ன விஷயம்?”
”ஐயா எம்மவ பிஎட் பட்சிருக்காங்க, ராஜம்பேட்டைல வேல ஒண்ணு காலியாக்துங்க. நாளைக்கி மீட்டிங்ல எம்பொண்ணுக்கு நீங்க தாங்க சிபார்சு பண்ணனும்.”
”நீ இஞ்ச வந்து பார்த்து ஒண்ணும் பிரயோஜனமில்ல. என்னைலா பிடிக்காதுல உங்க ஊர்க்காரனுங்களுக்கு. நாவர்கோயில்காரனுவல்லா நாடார்களா? என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது? இப்பம் என்ன செய்றது? சேர்மன் அவருக்கு வேண்டிய ஆளுக்கில்லா சப்போர்ட் பண்ணுவார்... ஐசக்க தெரியுமால உனக்கு?”
“தெரியுங்கயா, கருங்குழிலக்றாருங்க.”
“ஆ, நீ அவர போயி பாரு. ஏரியா செக்ரட்டில அவரு. அப்பம் பொறப்படு. இனி இங்கன நீ நிக்றதப் பார்த்தா ஒனக்கு டேன்ஜர்ல. தாமஸ் வரான். ஏரியா சேர்மன் சித்தப்பா.”
எதிர்வீட்டில் சைக்கிளை நிறுத்திக் கொண்டிருந்தவர் இவனை உற்றுப் பார்த்தார்.
மதுராந்தகத்திற்கு பஸ் ஏறினர் வில்ஃபிரட்டைப் பார்ப்பதற்கு. வில்ஃபிரட் வீட்டில் இல்லை. ஸ்கூலுக்குச் சென்றனர்.
அடர்ந்த மீசையைத் தடவிக் கொண்டான் வில்ஃபிரட். “இந்த வேல ஒனக்குதா. சர்தானா? நாடாருக ஆராச்சும் இருந்தாதா பிரச்னை. சேர்மன் அவுங்களுக்குதா சப்போர்ட் பண்ணுவான். இதுல அந்த பிரச்னை இல்ல. என்னை மீறி எதுவும் செய்ய மாட்டாயா, செய்யவும் முடியாது.” குவிந்த இருபுற கன்னங்கள், சிரிக்கிறான் என்பதைக் காட்டியது இவளுக்கு.
”காட்வின் ஐயிரு பொஞ்சாதி கூட மனு போட்டிருக்குங்கயா.”
“அவனா, ஒடுக்கப்பட்ட மக்கள் வாரிய இயக்குநர்தானயா. அவன்லா ஒன்னமில்லயா. காததூரம் ஓடுவான் எங்கள கண்டாலே. நீ பொறப்படு. ஏம்மா நாளைக்கி சாயந்திரம் ஒனக்கு ஆர்டர் கையெழுத்தாவ்தா இல்லியானு பாரு, பால் ஜோசப் சார விசாரிச்சேன்னு சொல்லுபா.”
“இதுக்கோசரம் ஏம்பா அலையற? நா பாத்துக்றம்பா.” இவளைப் பார்த்துச் சிரித்தான். முந்தானை இழுத்துவிட்டுக் கொண்டாள் வலப்புற மார்பில்.
“ஐசக் ஐயாவ பாக்கட்டுங்களா?”
“பாரு, பாக்றதுல தப்பில்ல... அந்தாளு ஒரு மாதிபா. வில்ஃபிரட்ட பாத்துட்டல்ல அது போதும். அவன் சும்மா போயி மீசைல கைவெச்சுன்னு நின்னாலே போதும் ஐயிருக நடுங்குவாங்க. இந்த வாட்டி கெடச்ருயா பாப்பாவுக்கு. பாவம் அஞ்சாரு வாட்டி அப்ளை பண்ணி அப்ளை பண்ணி வேஸ்ட்டா போயிரிச்சில்ல...? இந்த சேர்மன தூக்கறதுக்கு இருக்காங்க. வில்ஃபிரட்டுக்கு பயங்கர சப்போர்ட்கிது. நீ ஒண்ணும் கவலப்படாத. வாலிபர் சங்கத்த அமெரிக்கா அனுப்ற விஷயத்ல வேற செமையா மாட்டிக்னிருக்காரு சேர்மன். அடிக்றதுக்கே ஆள் செட் பண்னிக்னிருக்காங்க.”
“அப்டிங்களா?”
“அதனாலதா சொன்னேம்பா கவலப்படாதனு... சரிப்பா பிரியாணி சாப்ட்டு ரொம்ப நாளாவுது. எப்ப வச்சுக்லாம்? பாப்பாவுக்கு சமைக்கத் தெரியுமா?” தலையாட்டினாள் தெரியுமென்று.
“அம்மா இல்லிங்களா?”
“இல்லப்பா. ஊருக்கு போய்ர்ச்சி பசங்களோட. என்ன... அடுத்த சனிக்கிழமை வரட்டா?”
“வாங்கயா. சுகிர்தம்மாகூட நாளைலேர்ந்து லீவ்ல போறாங்க.”
”நல்லதாப் போய்ரிச்சி. ஜாய்சு எப்டிக்றா?”
தேவன்பு தோள்மீது கை போட்டு சில அடிகள் அழைத்துச் சென்று பேசினான். இவளுக்குக் கேட்கவில்லை. பாக்கெட்டிலிருந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான் தேவன்பிடம். திரும்பி வந்தனர்.
“கவலப்படாத, அடுத்த வாரம் ராஜாம்பேட்ட ஸ்கூல்ல கையெழுத்து போட்றா. பாப்பாவுக்கு வயசாய்ட்டெ போவ்தபா. எப்போ கல்யாணம்?” இவள் இடுப்பின் மீது பார்வை நின்றது.
“பூந்தமல்லில தொரசாமி பையன் ஒர்த்தன் வாத்யாராக்றாங்க. இவ வேலைக்கி போய்ட்டா ஒடனே கட்டிக்றேன்றாங்க.”
“அப்ப வச்சிருய்யா. இனி இன்னா? பஸ் வந்திரிச்சி, வரட்டா. சனிகிழம பாக்கலாம்மா. பிரியாணி ரெடி பண்ணு.”
கருங்குழி சர்ச் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த படத்தில் இரண்டு மாட்டு வண்டிகள் நின்றன. ஒரு வண்டிமாட்டின் கழுத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கழுத்தின்மீது பதிந்திருந்த நுகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று தெரியவில்லை. அருகில் சென்றாள். சாத்தான் என்றிருந்தது. வண்டி மீதிருந்த பாரங்கள் - வறுமை, வியாதி, பாவப்போராட்டம், பிசாசின் வேதனைகள், அதே பாரங்களுடன் நடந்த மற்றொரு வண்டி மாட்டின் நடையில் உற்சாகம் தெரிந்தது. நுகத்தின்மீது சிவப்பில் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தை இருந்தது. படத்தின் கீழ் விளிம்பில் மத்தேயு 11:29 வசனம் எழுதப்பட்டிருந்தது. ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.’
ஐசக் பெருங்கோபத்துடன் பேசினார். “டயசிஸ்ல நீ வேலை பார்க்றனா அது எத்தனையோ பேருக்கு கிடைக்காத சிலாக்கியம். அதுக்கு நீ தகுதி வாய்ந்தவனா இருக்கியா? நியுமிகின் துரை அந்த காலத்ல தென்னேரி வட்டாரத்துல சுவிசேஷ நற்செய்தி பிரசங்கித்ததாலதான் உங்கப்பா கிறிஸ்துவைப் பற்றி அறிய முடிஞ்சிச்சி. உனக்கு, அவரோட பக்தி, விசுவாசம், அடக்கம் இதெல்லாம் வச்சிதா இந்த தோட்டக்கார வேல கெடச்சிச்சி, ஆனா நீ கடவுளுக்குப் பயந்து நடக்காம பாவமான வழியில போய்ட்டிருக்க.”
”ஐயா நா ஒரு தப்புஞ் செய்லீங்க.”
“தெரியாதுனு நெனைக்காதயா. உங்க பாஸ்டரேட் எக்ஸ் ட்ரஷரர் பால்ஜோசப்போட சேர்ந்துக்னு ஏரியா சேர்மனுக்கு ஆபாசமான லெட்டர் எழுதியிருக்கியே, அதுக்கு என்ன சொல்ற?”
“சேர்மனு ஐயாகூட அப்டிதா சொன்னாருங்கயா. நா செய்லிங்கயா.”
“சே, சும்மா பொய் சொல்லாதயா சர்ச் வாசல்ல நின்னுக்னு. நீ என்ன ஆளு? இன்னிக்கி இவ்ளவு வளர்ச்சி சபைகள்ல ஏற்பட்டதுக்கு யார் காரணம்னு உனக்கு தெரியுமாயா? என்னமோ பேசுறியே.. உங்க பாஸ்டரெட்ல ஒரு எலிமண்டரி ஸ்கூல் அப்கிரேட் ஆனது, போர்டிங் வந்தது, ஆஸ்பத்ரில ஜெர்மன் எய்டோட ஐ டிபார்ட்மெண்ட். இதெல்லாம் ஏரியா சேர்மன் இல்லைனா வந்திருக்குமாயா. உண்மையும் உத்தமருமான ஊழியக்காரங்களை அவமானப்படுத்துனா ஆண்டவர் சும்மா இருக்க மாட்டாரு.”
“ஐசக் தம்பி.” ஜிப்பாவில் வயதானவர் நின்றிருந்தார்.
“வாங்க பிரதர். உங்களுக்குதா வெய்ட் பண்றோம்.” உள்ளே சென்றனர் இருவரும்.
இவள் படத்திற்குக் கீழே அமர்ந்தாள் தேவன்புடன். படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரை மணிக்குப் பிறகும் ஐசக் வரவில்லை. உள்ளே எட்டிப் பார்த்தாள். மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. முன்வரிசையில் ஐசக் தெரிந்தார்.
”வா போலாம்” தேவன்புடன் கிளம்பினாள். பஸ்ஸில்.... உட்கார்ந்தனர். “ஐசக் ஐயா சொன்னது நெஜமா?”
“இன்னாமா நீகூட நம்ப மாட்டேங்ற. வூட்டுக்கு போயி பைபிள எட்து குடு. சத்யம் வேண்ணா பண்றேன்.”
”ஞானப்பிரகாசத்தண்ட துட்டு எதுக்கு வாங்கன?”
“செலவுக்கில்லன. குட்தாரு.”
”அந்தாளுகூட ஒன்னும் நீ பழக்கம் வெச்சிக்க வானாம்.” அவன் பேசாமலிருந்தான். ஜன்னல் வழியே இவள் வெறித்துப் பார்த்தாள். வெளியே முற்றிலும் இருட்டி விட்டிருந்தது.
பதினோரு மணிக்கு மேல் தூக்கம் வராமல் பிரசங்கி முழுவதும் வாசித்தாள். கால்களை அகலவிரித்து வாயைப் பிளந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள் ஞானம். எலிசபெத், ஃப்ரீடா கருப்பை சிசுக்கள் போல் சுருண்டு கிடந்தனர். சங்கீத புத்தகத்தில் முதல் அதிகாரத்திலிருந்து தூக்கம் வரும்வரை விடாது வாசித்துக் கொண்டிருந்தாள். உடல் வியர்த்துக் கொண்டேயிருந்தது.
வண்டியை இழுக்க முடியாது திணறிக் கொண்டிருந்தாள். பாதை முழுதும் வேலிக்காத்தான் முட்கள். பாதத்தில் முள்குத்தி ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. எங்கும் பாதத்தின் ரத்தச் சுவடுகள். இழுக்கவே முடியாதா? இதென்ன கழுத்தில்? பாம்பின் அருவருப்புடன் நுகத்தடியாய் கருப்புக் கயிறு இறுக்கிக் கொண்டிருந்தது கழுத்தை. கடவுளே!... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே! ... வண்டி நகரவே மறுத்தது. கழுத்தில் வலி தாங்க முடியவில்லை. கத்தினாள். சப்த அதிர்வுகள் குரல்வளைக்குள்ளேயே அறுந்து தொங்கின. கயிறு இறுகிக் கொண்டே இருந்தது. இன்னும் இன்னும்...
விழிப்புத் தட்டியது. தொண்டைமீது அழுத்திக் கொண்டிருந்த பைபிளை எடுத்து வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள். வெளியே தேவன்பு கத்திக் கொண்டிருந்தான்.
“குட்காம எங்கயா போய்ருவ.... ரவுண்ட் பங்களா வர தேவல... மூஞ்சிய மூடிக்வியா, ம்?... நல்லாயில்ல.. அ... சொல்லிட்டேன்.. குட்துரு.... அங்கி போட்ருக்க... ஏழை வய்த்ல அடிக்காத, வானாம்... சொல்லிட்டேன்... குட்துரு... அங்கி விசுவாசம் அவ்ரு எய்தலியா... பிஷப் மேலயே, பெரிய்ய எடம்.. என்னாச்சி? ... ஐயிரு வேல குட்தீங்க அவம் பையனுக்கு... நீ... உன்ன பத்தி சொல்லட்டா... ஆர்ஆருக்கு எய்தினனு லிஸ்டு குடுக்கட்டா... வானாம் சொல்லிட்டேன்... பாவிய காப்பாத்து.. நா பாவி நா பாவி... சாமி என்ன மன்னிச்ரு...”
“உள்ள வர்ரியா  என்ன?” இவள் தேவன்பைப் பிடித்து இழுத்தாள்.
”ம்? செய்வாருன்றியா... ஆமா. செய்வாரு... அங்கி போட்ருக்காரு... சத்யம் பண்ணுவாரா... ஆமா பைபிள் மேல பைபிள்மேல பண்ணனும்... செய்ல, கர்த்தர் தண்டிப்பார். அங்கி போட்ருக்காரு... ஆமா...”
“சரி. வா.”
”ம்?... ம், எதா உங்கம்மாவ... லா... லா பேசுவா. லா... தேவ்டியா மவ... எதா... ஏ... வெளிய வாடி.. இல்லியா போய்ட்டாளா ஸ்டான்லியாண்ட...”
”வூட்டாண்ட வந்து கத்றிய பேமானி. போ ஒ ஊழியர் கைல போயி கத்து.” இடுப்பில் கைவைத்து நின்றாள் ஞானம். முந்தானை கீழே கிடந்தது.
“ஏய்... என்னாடி... ஸ்டான்லி இல்ல... படுத்ருக்கானா.... வூட்டுக்குள்ள... டேய்...”
“போடா பொட்டப்பயலே.” தோளைப் பிடித்துத் தள்ளினாள். வாழைமரத்தில் மோதிக் கீழே விழுந்தான் தேவன்பு.
இவள் அம்மாவை இழுத்துக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை மூடினாள். அழுகையை அடக்க முடியவில்லை. கதவருகே உட்கார்ந்துவிட்டாள். தங்கைகள் விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
காலையில் வெளியில் வந்தபோது தேவன்பு குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். லுங்கியை சரியாக இழுத்துவிட்டாள்.
குளித்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்றாள். கரஸ்பாண்டன்ட், ஆசிரியைகள் மட்டும் வந்திருந்தனர். நோட்ஸ் ஆஃப் லெசன் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். ரோட்டரி கிளப் போட்டிக்கு ஐந்தாம் வகுப்பு மல்லிகாவுக்கு Reforestation கட்டுரை எழுதி கரஸ்பாண்டன்டிடம் காண்பித்தாள். இலக்கணப்பிழை இல்லாமைக்குப் பாராட்டினாள். இவளை போயம் நடத்தச் சொல்லி பிற ஆசிரியைகளை அப்சர்வ் பண்ணச் செய்தார். சுகுணா டீச்சர் மட்டும் சிரிப்பது தெரிந்தது. பாரதியார் பிறந்த நாளன்று அண்ணா அரங்கத்தின் கேட் அருகே சுகுணா டீச்சர் பேசியது நினைவுக்கு வந்தது. “திராவிட நாடு ஆதிதிராவிடருக்கே. நம்ம கரஸ்பாண்டன்ட் கூட இடஒதுக்கீடு செய்றாரு, பாரு. அதுக்லா ஃபிகர் வேணும்னு இனிமேட்டு பொறந்தா எஸ்ஸியாத்தாண்டி பொறக்கணும். பிஸி, எஃப்ஸியா பொறக்கவே கூடாது.”
”ரெண்டு மணிக்கா போலாம்மா?”
“ஒண்ணும் போக வானாம்.”
பீடியை வீசிவிட்டு இவளருகில் வந்தான். “போகலைனா எப்டிமா? வேல போட்டுத் தராங்களா இல்லியானு பாக்க வானாவா? ஆர்டரு போட்டாக்க கைலியே வாங்கியாந்தரலாம்ல?” இவள் எதுவும் பேசவில்லை. “ஏம்மா, இத என்னானு பாரு.” குடிசைக்குள் சென்று ஞானத்துடன் வந்தாள்.
“சலோமி, போய்ட்டுதான் வாம்மா.... ஒவ்வோர் வாட்டியும் இப்டியே ஆவ்துனு பாக்குது புள்ள... நீ வேற சும்மாயில்லாம, புத்திகெட்ட மனுஷன், என்னாத்துக்கு மொட்ட கட்தாசி எய்தின?”
“தப்புதாம்மா...” தலைகுனிந்து நின்றான். “பால் ஜோசப் ஐயா தா சொன்னாரு, இப்படி பயமுறுத்தினாதா வேல கெடைக்கும்னு.”
”அவர கண்டாதா ஐயிரு, சேர்மனுக்கு ஆவாதுனு தெரியும்ல. பின்ன அவரு கைல போயி நின்னா? எத்தியாவது உருப்படியா செய்றியா? இவ்ளோ வருஷமா மிஷன்ல வேல பாக்ற, உங்களுக்கு ஒரு வேல வாங்க இல்ல.”
“இப்ப என்ன செய்றது?”
“ம்? அந்தாளு சேர்மன்தான் எல்லாத்துக்கும். போயி அவர பாத்து மன்னிப்பு கேட்டுக்கோ.”
“அவரு கைலியா.... கோவிச்சுக்குவாரெ...”
“இந்த புத்தி மொதல்ல எங்க போச்சி? வேற வழி ஒண்ணும் இல்ல. செஞ்சதுக்கு உண்மையா மன்னிப்பு கேட்டாக மன்னிக்காம புடுவாரா? ஏம்மா நீ எனக்கோசரம் போய்வாம்மா... இந்தவாட்டி உறுதியா கெடைக்கும்னு தோணுது...”
ஐந்தரைக்கு ஏரியா சேர்மன் வீட்டை அடைந்தனர். “நீ போயி கண்டுக்னு வா. நா இங்கியே நிக்றேன்.” இவள் கேட்டுக்கு வெளியில் நின்று கொண்டாள்.
சேர்மன் எதிரே தேவன்பு நிற்பது தெரிந்தது ஜன்னல் வழியே. கையாட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஓரமாக வந்த ரிக்ஷாவுக்கு வழிவிட்டு மீண்டும் பார்த்தாள். தேவன்பைக் காணவில்லை. சேர்மன் குனிந்தார். தேவன்பு கீழிருந்து நிமிர்ந்தான். அவன் முதுகை சேர்மன் தட்டிக் கொடுத்தார் சிரித்தபடி.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு இவளிடம் வந்தான் தேவன்பு. “ஐயா மீட்டிங்ல பேசுறேன்னாருமா. மின்னாடியே ஐயாவ பார்த்திருக்கணும், பால் ஜோசப் ஐயா பேச்சக் கேட்டது தப்பா பேய்ரிச்சி. வூட்டுக்கு போலாமா?”
“மீட்டிங் முடிஞ்சப்புறம் போலாம்.”
“சர்தாம்மா.”
பஸ்ஸ்டாண்ட் ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு சர்ச் நோக்கி நடந்தனர். இருட்டி விட்டிருந்தது. சாலையில் இடைவிடாத கார், பஸ்களின் இரைச்சல். நின்று கொண்டிருந்த டவுன் பஸ்களைக் கடந்து சர்ச் வளாகத்திற்குள் சென்றனர். பக்கவாட்டில் மூன்றாவது கதவு வாசலில் உட்கார்ந்தனர். சர்ச் மையத்தில் 15, 16 அங்கத்தினர்கள் இருந்தனர். முதல் வரிசையில் ஐசக், ஞானப்பிரகாசம். கடைசி வரிசையில் வில்ஃபிரட், பெஞ்சமின். இரண்டாவது வரிசையில் போதகர்களின் வெண்ணங்கிகள் ஐந்தாறு தெரிந்தன. எல்லோருக்கும் முன்னால் நின்றிருந்தார் ஏரியா சேர்மன். ஆல்டரில் பெரிய மரச்சிலுவை குழல்விளக்குப் பின்னணியில் வெளிச்சக் கீற்றுடன் கம்பீரமாக நின்றது. ஆல்டரின் வெளிவிளிம்பு அரைவட்டத்தில் ‘நானே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்’ என்ற வசனம்.
“வில்ஃபிரட் ஐயா சொன்னது போல டிரான்ஸ்பர்களையும், புதிய நியமனங்களையும் இந்த ஏரியா எலிமென்டரி எஜூகேஷன் கமிட்டியில் வைத்துதாங்க உங்க அப்ரூவல் வாங்கணும். சில சந்தர்ப்பங்கள்ல நாங்களே முடிவெடுத்திருக்கோங்க. ஐயா சொல்வது போல அது தவறுதாங்க. இனிவரும் சந்தர்ப்பங்களில் அப்படி நடக்காது. இந்த அப்பாய்ன்மெண்ட்ட அதனாலதா கமிட்டியில வச்சிருக்கேன். செக்ரட்டரி ஐயா...” ஐசக் ஒரு சிவப்பு ஃபைலைக் கொடுப்பது தெரிந்தது இவளுக்கு.
”ராஜாம்பேட்டை இடத்துக்கு நான்கு பேர் விண்ணப்பித்து இருக்காங்க. அதுல ரெண்டு பேர் நான் கிறிஸ்டியன்ஸ்...”
“வீ நீட் நாட் கன்சிடர் தெம்.” ஒரு போதகர் சொன்னார்.
“மற்ற இரண்டுல... ஒன்று தேவன்பு சாமுவேலின் மகள் சலோமிரோஸ், இன்னொன்று ரெவ்ரென்ட் காட்வின் துணைவியார் திருமதி ரஞ்சிதம்... காட்வின் வரலையா?”
“அவர் சம்பந்தப்பட்ட விஷயம்னு வரலீங்கயா.” ஐசக் குரல் கேட்டது.
“அப்படியா..”
“கமிட்டி மெம்பர்ஸ் என்னங்கயா சொல்றீங்க?” கறுப்புக் கயிற்றை இழுத்துவிட்டுக் கொண்டார் சேர்மன்.
”பேராயத்தின் திருச்சபைகள் வளர்ச்சிக்காகவும், சுவிசேஷப் பணிக்காகவும் கடவுளின் பிள்ளையாகிய அருட்திரு காட்வின் ஐயர் அவர்கள் புரிந்திருக்கும் ஊழியம் மிகவும் பாராட்டுக்குரியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மட்டுமல்ல, ஆண்டவரின் ஊழியக்காரர்களைத் தாங்கும் பெரிதான பொறுப்பு சபையாராகிய எங்களுக்கு இருக்கிறது. ஆகவே ரெவரெண்ட் காட்வின் துணைவியாருக்கு இந்த வேலையைக் கொடுப்பதே உத்தமமானடு என்று நான் நினைக்கிறேன்.”
வில்ஃபிரட் எழுந்து நின்றான். “ஐசக் ஐயா சொல்வது விநோதமாக இருக்கு.” அங்கத்தினர்களைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். “மாதந்தோறும் சபையார் காணிக்கையிலிருந்து குறைந்தபட்சம் மூணாயிரமாவது அஸஸ்மென்ட்டா ஒவ்வொரு பாஸ்டரேட்டுக்கும் கொடுக்குதே எதுக்குங்க? ஐயருமாராக ஊழியத்துக்கு ஊதியம்... என்னங்கயா?” சேர்மன் முகத்தில் புன்னகையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. “அப்படியிருக்கும்போது ஊழியரைத் தாங்குதல் என்ற பிரச்னைய இந்த போஸ்டிங்ல இழுப்பது அர்த்தமற்ற காரியம். கமிட்டியில் எந்த பிரச்சனைக்கும் ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை எடுக்கும்படியான திசைதிருப்பும் பேச்சுக்களைக் கண்டிப்பாக சேர்மன் அனுமதிக்கக் கூடாது.” ஐசக் பேச எழுந்தபோது சேர்மன் தோளை அழுத்தி அமரச் செய்தார். “இந்த நேரத்ல மனுதாரர்களுடைய கல்வித்தகுதி, குடும்பப் பொருளாதார நிலைகுறித்த விவரங்களை அறிவிக்கும்படியாக சேர்மன் ஐயாவைக் கேட்டுக் கொள்கிறேன்.”
சேர்மன் ஃபைலைப் புரட்டினார். “ திருமதி ரஞ்சிதம் பிஎஸ்ஸி பிஎட். விருப்பப் பாடங்கள் ஆங்கிலம், ஃபிஸிகல் சயன்ஸ், குமாரி சலோமி ரோஸ் பிஏ., எட். வரலாறு, ஆங்கிலம் விருப்பப் பாடங்கள்.”
”பிஎட் எப்பங்க முடிச்சாங்க?”
“தொன்னூறுல காட்வின் சம்சாரம் முடிச்சிருக்காங்க. சலோமி எண்பத்தி மூணு.”
“காட்வின் ஐயா குடும்பப் பொருளாதார நிலைபற்றி எங்களுக்கு தெரியுங்க. சலோமி தகப்பனார் பற்றி மனுவில் என்ன இருக்கு?”
”அங்கத்தினர் பலருக்கும் அவனைப் பற்றியும் தெரியும். பெண்கள் விடுதில தோட்டக்காரன், தேவபுத்திரன் ஐயர் அவனுக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்காரு. ஐயா... என்ன?” பால்ராஜ் ஐயர் எழுவதைக் கவனித்தான். “தேவன்பின் பாஸ்டரேட் போதகர் என்கிற காரணத்தால் ஒரு காரியம் சொல்லப் பிரியப்படுகிறேன். மிஷனில் பணியாற்றும் தேவனுடைய பிள்ளைகளுக்கு பிறரைக் காட்டிலும் சில பிரத்யேகக் கடமைகள் இருக்கு. அவற்றில் தலையாயது ஆவிக்குரிய வாழ்க்கை. திருச்சபைக்கும் ஒவ்வொரு கிறிஸ்துவனுக்கும் இருக்கும் அன்னியோன்யத் தொடர்பு. சகோதரர் தேவன்பு ஆலயத்திற்கு ஒழுங்காக வருவது இல்லை. மேலும் சமீப காலமாக திருச்சபைக்கு விரோதமானவர்களோடு சேர்ந்து கொண்டு காணிக்கை போடுவதைக்கூட நிறுத்தி இருக்கிறார் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சபைக்கு விரோதமாக போகிறவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” போதகர் யாரென்று இவளுக்குத் தெரியவில்லை. “ஐயருமார்கள் ரொம்ப கோபப்படுறாங்க. ” வில்ஃபிரட் மீசையைத் தடவிக் கொண்டான். ”காணிக்கை, ஆராதனைக்கு வருதல் இதையெல்லாம் அபாய்ண்ட்மென்டுக்கு அடிப்படையா வைக்கிறீங்கனா எத்தனை நியமனங்களுக்கு இதையே அடிப்படையா வச்சி பாரபட்சமில்லாம நடந்திருக்கீங்கனு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஜெயபால் ஐயா சர்ச் பக்கம் வந்து பதினஞ்சி வருஷமாவுது. அவுருக்கு மெடிக்கல் போர்ட்ல முக்கிய போஸ்ட் குடுத்திருக்கீங்க. நம்ம பால்ராஜ் ஐயர் சேகரத்துல ஒரு கிராம சபை ஊழியர் இரவு ஏழுமணி ஆயிட்டா போதையிலேதா இருப்பாரு. லெந்து நாட்களில் சாயந்தர சர்வீஸ்களை போதையோடுதான் நடத்துவாரு. ஐயரால மறுக்க முடியாதுனு எனக்குத் தெரியும்.”
“வில்ஃபிரட் ஐயா அதெல்லாம் வேண்டாங்க. லெட் அஸ் கன்ஃபைன் டு திஸ் அபாய்ன்மென்ட்.”
”அப்ப அவங்க கல்வித் தகுதியை பொருளாதார நிலைய அடிப்படையா வச்சுப் பாருங்க. சலோமிதா செலக்ட் பண்ணப்பட வேண்டியவ. சலோமி தகப்பனாருக்கு முன்னூறு ரூபாய் கூட நம்ம மிஷன் சம்பளமா குடுக்காது. இந்த சம்பளத்ல மகள அவரு படிக்க வெச்சது மிகப் பெரிய அற்புதந்தாங்க. இதுக்கெல்லாம் மேலாக சலோமி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவ.”
“வில்ஃபிரட் ஐயாவுக்கு தெரியும்னு நெனைக்கிறேன். காட்வின் ஐயர், அவர் துணைவியார்லா பிராமணர் இல்லைன்றது.”
“ஐசக் ஐயாவுக்கு அது மட்டுந்தா ஞாபகத்துக்கு வந்திருக்கு. ரெவரண்ட் காட்வின் நம் பேராயத்தின் ‘ஒடுக்கப்பட்ட மக்கள் வாரியத்தின்’ இயக்குனர் என்பதும், அவர் நடத்தின பல ஊர்வலங்கள்ல ஐயாவே இந்த வயசுலகூட வேகமா கோஷம் போட்டுக்னு போனார் என்பதும் எப்படியோ மறந்து போயிரிச்சி. பரவால்ல. எந்த குறிக்கோளுக்காக போராடினார்னு யோசிக்கனுங்க. சலோமி கிறிஸ்தவளாய்ட்டதால எஸ்ஸிக்கான அரசாங்க சலுகை பெற முடியுங்களா? சபை மூப்பர்கள் எத்னியோ பேர் தங்க பிள்ளைகளுக்கு எஸ்ஸி ஹிண்டுனு எழுதி சலுகை வாங்கறது வேற விசயங்க... இன்னிக்கு ஒரு போஸ்ட் விலை முப்பதாயிரம் நாப்பதாயிரம் ரூபாங்க. நீங்களும் நானும் எஸ்ஸி கிறிஸ்டியன் - பிஸி ஆயிட்ட அவருக்கு கொடுத்து உதவ முடியற அளவுக்கு குறைஞ்ச தொகையா? எட்டு வருஷம். காட்வின் ஐயருக்கு சம்பளம், மருத்துவப்படி, கல்விபடி எல்லாம் சேர்த்து ரெண்டாயிரத்துக்கு மேல வரும். பார்ஸனேஜ் வேற போற இடத்ல எல்லாம். வாடகை இல்லை... இவ்வளவு சலுகைகள் சபையார் பணத்லங்க. அத”
“நாங்க சம்பளத்துக்கு வேலை செய்றோம்னு சொல்றீங்களா?”
“இருங்கயா, என்ன தப்பு? கடவுளுக்கு நாங்க தரும் காணிக்கைல தான் உங்க ஊழியத்துக்கான சம்பளமும் அடங்கி இருக்கு? எனவே எவ்வித வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத சலோமிக்கு இந்த வேலையைக் கொடுத்துவிட்டு, இனிவரும் வாய்ப்பை காட்வின் ஐயர் துணைவியாருக்கு அளிக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.”
“காட்வின் ஐயர் துணைவியாருக்கே இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்.”
“ஐயருக்கு ஐயருமாருக சப்போர்ட்டா?”
“சபையார் ஊழியர்கள அவமானப்படுத்தறப்போ நாங்க அதைத்தான் செய்ய வேண்டி வரும். எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரனாக இருந்து வழி நடத்தி வரும் ஏரியா சேர்மன் அவர்களை மிகவும் ஆபாசமான முறையில் வேலை கேட்டும் சலோமியின் தந்தை ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.” ஒரு காகிதத்தை உயர்த்திக் காண்பித்தார் ஒரு போதகர். “தம்பி வேணாம்பா.” சேர்மன் அவரிடம் வந்தார் வேகமாக.
“இல்லை அண்ண. இந்த விஷயம் சாதாரணமானதல்ல. சபையாருக்கு முதலில் ஊழியர்களை மதிக்கத் தெரிய வேண்டும்.” ... “சேர்மன் என்ற போர்வையில் திரியும் அந்தி கிறிஸ்துவே... உனக்கெல்லாம் எதற்குடா அங்கி...?”
கடிதம் பாதி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மெம்பர்கள் எழுந்து ஆத்திரத்துடன் கத்தினர். வெற்று நாற்காலிகள் அவர்கள் ஆத்திரத்தை அங்கீகரிப்பது போன்று தெரிந்தது இவளுக்கு. தேவன்பு கைகட்டி, தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். வெஸ்ட்ரி அருகே சிலர் வேகமாக வந்து நிற்பது தெரிந்தது.
வில்ஃபிரட் கையைப் பிடித்து தாமஸ் ஐயர் வெளியே கூட்டி வருவதைக் கவனித்தாள். வெஸ்ட்ரி அருகே நின்றவர்கள் இருட்டிலிருந்த மேடைக்கு நடந்தனர். பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார் போதகர். வெஸ்ட்ரி விளக்கொளியில் படித்தான் வில்ஃபிரட். முடித்ததும் போதகர் கை கொடுத்தார். “அடுத்த மாசம் பத்தாந்தேதி ஃப்ளைட். உனக்கு ஸ்ட்ராங்கா ரெக்கமன்ட் பண்ணது சேர்மன்தாம்பா. இல்லனா வுட்ருவியா என்ன? இண்டியன் கிறிஸ்டின் யூத் குறித்து அமெரிக்கன் சர்ச்சஸ்ல நீதாம்பா பேச வேண்டி வரும்.”
“சரிங்க ஐயரே, ரொம்ப தாங்க்ஸ். பசங்க வெய்ட் பண்றாங்க... நீங்க கெளம்புங்க.”
மேடையை நோக்கி நடந்தான் வில்ஃபிரட். போதகர் ஆலயத்திற்குள் வந்தார்.
ஏரியா சேர்மன் எழுந்து நிற்பது தெரிந்தது. “போதகர்களுடைய கோபத்துல, நியாயம் இருந்தாலும், தகப்பனார் செய்த தவறுக்காக மகளை தண்டிக்க நான் பிரியப்படலிங்க. அடுத்த வாய்ப்பு வரும்போது சலோமி ரோசை நாம் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். ஐயர் தீர்மானத்தை எழுதிக்கோங்க. ராஜாம்பேட்டை காலியிடத்தில் திருமதி ரஞ்சிதம் காட்வின் அவர்களை...”
இவள் எழுந்தாள்.
“எதாமா?ஐயரை பாத்துக்னு போலாம்மா?”
“நீ பாத்து, கால்ல வுழுந்து எந்திரிச்சி வா. நா மீனாட்சிய பாக்கணும். ஸ்கூலு வெக்ற விஷயமா. இவுங்க தயவு ஒண்ணும் இனி தேவல்ல எனக்கு.”
சர்ச் வளாக வாசலுக்குள் வேகமாக நடந்தாள் சலோமி. இவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
*****
தட்டச்சு : சென்ஷி

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.

வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மென்பொருள் தறவிரக்க முகவரி :

http://www.lightworksbeta.com/

இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

சக்தி ஜோதி கவிதைகள்

முத்தங்களினால் 
தன்னை நிரப்பிக்கொண்டிருப்பவளின்
தனிமை
இருளின் நிழலைப்போல
அடர்த்தியானது 

சிலசமயம் இருள் இனிமை என்கிறாள்
சிலசமயம் இருள் துயரம் என்கிறாள்
சிலசமயம் இருள் அமைதி என்கிறாள்
உண்மையில்
தனிமையிலிருப்பவளின்
இரவின் நினைவை ஆராய்வதும்
விதையின் ரகசியத்தை ஆராய்வதும்
அத்தனை எளிதில்லை என்று நினைக்கையில்
இரவு அவள்மீது கவிகிறது .
Courtesy : Painting - Maya N


கிட்டத்தட்ட பகல் முடிந்த நேரம்
காமத்தின் அடுக்குகளுக்குள்
புரண்டு கூரை தொடும்
தன்னுடைய அந்தரங்க எண்ணங்களை
யாரிடமும் பகிர்தல் செய்யவியலாத நிலையில்
தன்னைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்
அன்றாடத்தின் பாடுகளுக்குள்
தன்னைப் புகுத்திக் கொண்டிருக்கும் ஒருத்தி

அவள்
தாங்கவியலாத இன்பமும்
உணர்ந்தவளில்லை
தாங்கவியலாத துன்பமும்
பகிர்பவளில்லை

நேசிப்பின் வலியைப்
புலப்படுத்தும் சொற்களுக்கு
வலுச்சேர்க்கவியலாமல்
இருளுக்கும் சுடருக்கும்
இடையே தன்னைக் கரைத்துக் கொண்டிருகிறாள் .

Photo: கிட்டத்தட்ட பகல் முடிந்த நேரம்
காமத்தின் அடுக்குகளுக்குள்
புரண்டு கூரை தொடும்
தன்னுடைய அந்தரங்க எண்ணங்களை
யாரிடமும் பகிர்தல் செய்யவியலாத நிலையில்
தன்னைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்
அன்றாடத்தின் பாடுகளுக்குள்
தன்னைப் புகுத்திக் கொண்டிருக்கும் ஒருத்தி

அவள்
தாங்கவியலாத இன்பமும்
உணர்ந்தவளில்லை
தாங்கவியலாத துன்பமும்
பகிர்பவளில்லை 

நேசிப்பின் வலியைப்
புலப்படுத்தும் சொற்களுக்கு
வலுச்சேர்க்கவியலாமல்
இருளுக்கும் சுடருக்கும்
இடையே தன்னைக் கரைத்துக் கொண்டிருகிறாள் .

நிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி

தமிழ்ச்சூழலில் இயங்கும் பெண் படைப்பாளிகளில் சக்தி ஜோதி தனித்துவமானவர். காதலை முன்வைத்து அவர் எழுதும் கவிதைகள், பெண் மனதின் பல நூற்றாண்டு ஆவலையும் வேட்கையையும் ஆவேசத்தையும் நளினமாக காட்சியாக்குபவை. வெறுப்பு வார்த்தைகளை அழுத்தமாக உச்சரிப்பதிலோ, எதிர் பாலை இகழ்வதிலோ இல்லை பெண் விடுதலை... பெண்ணுக்கான சுயமரியாதையின் வேரில் இருந்தே அது தொடங்குகிறது என்பது சக்திஜோதியின் எழுத்து நிறுவும் கருத்து. ‘நிலம் புகும் சொற்கள்’, ‘கடலோடு இசைத்தல்’, ‘எனக்கான ஆகாயம்’, ‘காற்றில் மிதக்கும் நிலம்’, ‘தீ உறங்கும் காடு’, ‘சொல் எனும் தானியம்’ (புத்தகச் சந்தை வெளியீடு) ஆகியவை சக்தி ஜோதியின் வீரியமான வெளிப்பாடுகள்!

தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக அறியப்படும் சக்தி ஜோதிக்கு இன்னொரு முகமும் உண்டு... சமூகப் பணியாளர்! பெண்களின் பொருளாதார சுயசார்புக்காகவும் சூழலியல் மேம்பாட்டுக்காகவும் ‘ஸ்ரீ சக்தி டிரஸ்ட்’ என்ற நிறுவனத்தின் கீழ் தொடர்ந்து செயலாற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி ஜோதியின் பின்னால் 46 ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை நிர்வகிக்கிறார்!

‘‘பொருளாதார தன்னிறைவும் சமூக அங்கீகாரமும்தான் பெண்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத்தரும் என்பது என்னோட பட்டனுபவம். ஒரு படைப்பாளியா எனக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியை விடவும் ஒரு சமூகப் பணியாளரா இன்னும் கூடுதலா இயங்க விரும்புறேன். வெளியுலக ஞானமில்லாத, அடுப்பங்கரையே உலகமாக நினைச்சுக்கிட்டு தன்னோட சுய தேவைகளைக் கூட குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்து தியாகியா வாழ்ந்து கரையுற பெண்கள்தான் எனக்கு முன்மாதிரி. காலம் கற்றுத்தந்த பாடங்களும் சுயமரியாதையும் என் பாதையை வேறு திசைக்கு மாத்தியிருக்கு.

அப்பா பாண்டியன் மின்வாரியப் பொறியாளர். அம்மா சிரோன்மணி இல்லத்தரசி. அம்மா 8ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. பொதுவா பெண் பிள்ளைகள் அம்மாவைப் பாத்துதான் வளருவாங்க. அம்மா தன் வாழ்க்கை மூலமா நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்காங்க. முதன்மையானது, தன்னம்பிக்கை. மூணு சகோதரி கள். ஒரு அண்ணன். ஒவ்வொருத்தருக்காகவும் பார்த்துப் பார்த்து உழைக்கிற அம்மா... ஒரு நொடியைக் கூட வீணாக்க மாட்டாங்க. நல்லா ஓவியம் வரைவாங்க... சித்திரத் தையல் (எம்பிராய்டரி) செய்வாங்க. எனக்கும் இதில் ஆர்வம் உண்டு. அண்ணன் நிறைய வாசிப்பார். மெல்ல மெல்ல நானும் வாசிக்கப் பழகினேன்.

ஒரு கட்டத்துல வாசிப்பார்வம் எழுதவும் தூண்டுச்சு. நானும் சக்திவேலும் சாதி மதம் கடந்து திருமணம் செஞ்சுக்கிட்டோம். காதல், குடும்பத்தில இருந்து எங்களை விலக்கி நிறுத்துச்சு. விளிம்புல இருந்து, சுயமா கரம் ஊன்றி வாழ்க்கையை தொடங்க வேண்டிய நிலை. படிப்பு தற்காலிகமா தடைப்பட்டு நின்னுச்சு. சக்தி வளமான குடும்பத்தில பிறந்தவர். எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தார். அவரோட சிரமத்துல நானும் பங்கெடுத்துக்க விரும்பினேன். தையல், அது இது என எனக்குத் தெரிஞ்ச வேலைகளை செய்யத் தொடங்கினேன்.

அம்மா கத்துக் கொடுத்த விஷயம்தான் எல்லாம். சந்தோஷமோ, துயரமோ... நமக்கு நடக்குற எல்லாத்தையும் தூர தள்ளி நின்னு வேடிக்கை பாக்கணும்... அப்போதான் அதிலயிருந்து பாடம் படிக்க முடியும். அனுபவம் நிறைய பாடங்களை எனக்குக் கத்துக் கொடுத்திருக்கு. எவ்வளவு அழுத்தத்துக்கு இடையிலயும் வாசிக்கிறதை நிறுத்தல. அது வேறொரு வெளியில என்னை இளைப்பாற வச்சுச்சு. எங்க ஊரில் தென்னை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள்தான் வாழ்வாதாரம். தட்டி முடையறது, விளக்குமாறு கிழிக்கிறதுதான் தொழில். ஒரு பெண் காலையில உட்கார்ந்து தட்டி பின்ன ஆரம்பிச்சா, சாயங்காலத்துக்குள்ள 150 தட்டி கூட முடைஞ்சு போட்டுடுவாங்க.

ஓரளவு வருமானம் கிடைக்கும். அதனால திருமணமாகிப் போன பெண்கள் கூட வேலைக்காக திரும்பவும் தங்கள் வீட்டுக்கே வந்து தங்குற நிலையும் உண்டு. ஒரு பயிற்சி முகாம் நடத்தி விழிப்புணர்வு ஊட்ட முடிவு செஞ்சு அதற்கான முயற்சியில இறங்குனேன். அதிலயும் தோல்வி... சோர்ந்துட்டேன். பல பேருக்கு முன்மாதிரியா இருக்கிற ஆட்சிப்பணி அதிகாரி உ.சகாயம் எங்களுக்கு குடும்ப நண்பர். அவர்கிட்ட இந்தச் சூழலை சொல்லி வருத்தப்பட்டேன். ஒரு தனியாளா நீ எதைச் செஞ்சாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போய் சேராது. ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கு.

அதன் மூலமா நீ செய்ய வேண்டியதைச் செய்... அப்போ எல்லாமே எளிதா இருக்கும்னு அவர்தான் ஆலோசனை சொன்னார். மனசுக்குள்ள புதுசா ஒரு கதவு திறந்த மாதிரி இருந்துச்சு. உண்மையைச் சொல்லணும்னா தொண்டு நிறுவனம்னா என்னன்னு கூட அப்போ எனக்குத் தெரியாது! காந்தி கிராமம் பல்கலைக்கழகம் தந்த தகவல்களின் அடிப்படையில் படபடன்னு செயல்ல இறங்குனேன். சுய உதவிக்குழு திட்டம், மிகப்பெரிய வாழ்வாதாரத் திட்டம். பெண்களை ஒருங்கிணைச்சு அவங்க சக்தியை அவங்களுக்கு உணர வைக்கிற திட்டம். 

Monday, July 28, 2014

How to Read Palm Lines


மங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி

மங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை .

புகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான் புகைப்படங்களும் தான்.

காமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு என பல காரணங்களினால் புகைப்படம் தெளிவில்லாமல் போகலாம்.


காமிரா போன் யுக்த்தில் உங்கள் வசமே கூட இப்படி பல் புகைப்படங்கள் இருக்கலாம்.

இதை தான் ஸ்மார்ட்டிபிலர் அக்கறையோடு கேட்கிறது.

மங்கலான புகைப்படங்கள் உங்கள் வசம் இருந்தால் அவற்றை ஒரே கிளிக்கில் இந்த தளம் சரி செய்து தருகிறது.

இணையத்தளத்திற்கு செல்ல:http://smartdeblur.net/

போட்டொஷாப் தெரிந்தவர்கள், சாதாரண புகைப்படங்களில் கூட வண்ணங்கள் மற்றும் இதர அம்சங்களை திருத்தி அந்த புகைப்படத்தை அப்படியே மேம்படுத்தி தருவார்கள்.

அதே போல இந்த தளம் தன்னிடம் சமர்பிக்கப்படும் மங்கலான புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி தருகிறது.

இதற்காக உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருக்கவும் வேண்டாம் .

இதில் உள்ள சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும்.

பணச் செலவில்லாத விவசாயம்...!

நம் இந்திய நாட்டில் நிலத்தை நம் தாயோடு ஒப்பிடுகின்றோம். மேலும் அதை உயிரோட்டம் உள்ளதாகவும், வளமானதாகவும், அதில் செய்யும் வேளாண்மையை ஒரு புனிதமான தொழிலாகவும் கருதுகின்றோம். விவசாயம் செழிக்க நிலம் வளமானதாக இருக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக நாம் இரசாயண உரம் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி மண்ணை மலட்டுத் தன்மைக்கு கொண்டு வந்துவிட்டோம்.
மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக “பசுமை புரட்சி” என்ற பெயரில் நவீன இரசாயண முறைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் மண்ணின் அமைப்பும் அதில் உள்ள நீரும் விஷமாக மாறுகின்றது. இரசாயண பூச்சிக் கொல்லிகளை பயிர்களுக்குத் தெளிப்பதால் அது காற்றில் பரவி அதை சுவாசிக்கும் மனிதனுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற வியாதிகளை உருவாக்குகின்றன. செயற்கை உரங்களை இடுவதால் பயிர்கள் பசுமையாக, மிருதுவாகப் பூச்சி எதிர்ப்பு திறனின்றி வளர்கின்றன. பயிர்கள், பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த பூச்சிகளை அழிக்க மீண்டும் இராசயணப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றோம். இதனால் மண் கார அமிலத் தன்மை அவ்வப்போது மாற்றப்படுகின்றது. மண்ணில் உள்ள பயன்தரக் கூடிய நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் மண் வளம் குறைந்து உப்பு மண்ணாக மாறி வளம் குறைந்து பலனற்ற மண்ணாகி மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் குறுகிய கால நன்மைக்காக இரசாயண உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்த முன் வரவேண்டும். இயற்கை உரம் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் அற்ற, உயிராற்றல் கொண்ட, நீண்ட நாள் பயன்தரக்கூடிய இயற்கை விவசாய வாழ்வு முறை கிடைக்கும்.
வேளாண் பயிர்களில் ஏற்படும் பூச்சிகள் அவைகளை எதிர் கொள்ளும் விதம் பற்றி இனி காண்போம்.
பூச்சிகள், கரையான்கள் மற்றும் புழுக்கள் முதலியன தாவரங்களுக்கு பாதிப்பை விளைவிக்கின்றன. எனவே இவைகள் பெஸ்ட் (Pest) எனப்படும். மனிதனின் இயல்பான சுகாதாரத்தையும், பொருளாதார நிலையையும், தாவர வளர்ச்சியையும் குறைக்கின்ற பூச்சியினங்கள் ‘பெஸ்ட்ஸ்’ என வரையறுக்கலாம். இவைகள் உற்பத்தியின் அளவையும், அதன் தன்மையையும் குறைக்கின்றன. தானிய உற்பத்தியில் 30% பூச்சிகளின் செயல்களினால் அழிக்கப்படுகின்றது.
மேலும் பூச்சிகள் வேளாண் பயிர்களை உணவிற்காக நாடுகின்றன. இவைகளை 3 வகையாக பிரிக்கலாம்.
1. கடித்து மற்றும் மென்று தின்னும் வாயுறுப்புகளுடைய பூச்சிகள்.
2. துளையிட்டு உணவை உறிஞ்சும் வாயுறுப்புகளையுடைய பூச்சிகள்.
3. நோய் கிருமிகளைப் பரப்பும் பூச்சிகள்.
மேற்கண்ட பூச்சி வகைகள் தாவரங்களின் பல பாகங்களில் அழிவை உண்டு பண்ணுகின்றன. அதாவது விதைகள், தாவரத்தின் தண்டுகள், வேர்கள், மலர், மொட்டுகள், கனிகள் ஆகிய பாகங்களில் தாவர வளர்ச்சியை சிதைக்கின்றன.
பயிர்களுக்கு சேதத்தை உண்டுபண்ணும் இவ்வகைப் பூச்சிகளை அழிக்க நாம் பொதுவாக இரசாயண பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றோம். (உ.ம்.) டயல்டிரின், எண்ட்ரின், ம்ம்வீ, யக்ஷிளீ, டயாசினோன், பெனிட்ரோதியான், பென்தியான், டெமக்ரான், எக்காளஸ், மானோ குட்டபாஸ், டைத்தீன், செவீன் பவுடர், எண்டோசல்பான் இன்னும் எத்தனை வகையோ...
பயிர்களுக்கு இரசாயண பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மூலிகை மூலம் “பூச்சி விரட்டி கசாயம்” பயன்படுத்துவது மிகவும் நல்லது. அவை தயாரிப்பது மிகவும் எளிது, சிக்கனமானதும் கூட, பக்க விளைவு இல்லாத அற்புத வீநுஹிணூளீ ஆகும்.

பூச்சி விரட்டி :-
தேவையான பொருட்கள் : (1) ஆடா தொட இலை (2) நொச்சி இலை (3) வேம்பு இலை (4) எருக்கு இலை (5) காட்டாமணக்கு இலை (அ) புங்கன் இலை.
செய்முறை : மேற்கண்ட இலைகளை வகை வகையாக எடுத்து ஒரு உரலில் போட்டு நன்கு இடிக்க வேண்டும். நன்கு மசிந்த பிறகு அவைகளை ஒரு மண்பானையில் போட்டு இவைகளுடன் பசுமாட்டு ஹோமியத்தையும் கலந்து (20 லிட்டர்) ஊறல் போட வேண்டும். மண்பானையை துணியால் வேடு கட்டி நிழலில் வைத்து தினமும் காலை மாலை நன்கு கலக்கிவிட வேண்டும். (வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக சுமார் 10 முறை) கலக்கி வர வேண்டும். 1 வாரத்திற்கு பிறகு பசும்பால் அல்லது மோர் ஊற்றலாம். 21 நாட்களுக்கு பிறகு மண் பானையில் உள்ள கரைசலை நன்கு வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பிறகு கிடைக்கும் அந்த ‘கரைசலுக்கு’ பூச்சி விரட்டி அல்லது பயிர் வளர்ச்சிக்கான வீநுஹிணூளீ எனப்படும்.
பயன்படுத்தும் முறைகள் :-
10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் கரைசல் கலந்து ஸ்பிரேயர் மூலம் பயிர்களுக்கு தெளிக்கலாம். நெல், கடலை, எள், உளுந்து, முந்திரி, பழ வகை மரங்கள் இவைகளுக்கு பயன்படுத்தலாம்.
பயன்கள் :-
1. இக் கரைசலை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிவதில்லை.
2. பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகள் விரட்டியடிக்கப்படுகின்றன.
3. பயிர்க்கு இக் கரைசல் உரமாகவும் பயன்படுகின்றது. (75% தாழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து; 25% பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது)
4. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.
5. பயிர் கருமையாகவும், விளைச்சல் அமோகமாகவும் இருக்க இக் கரைசல் உதவுகின்றது.
6. மண் வளம் பாதுகாக்கப்பட்டு நஞ்சு இல்லாத உணவு கிடைக்கின்றது.
7. இரசாயண பூச்சி கொல்லி மருந்து செலவைவிட இக் கசாயம் தயாரிக்க செலவு மிகவும் குறைவு.