Search This Blog

Thursday, June 12, 2014

சீதையின் பிறப்பு இரகசியம்


சீதா தேவி பூமியிலிருந்து பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஜனக மகாராஜா நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த போது சீதா தேவியைக் கண்டறிந்துள்ளார். எனவே, அவரை தன்னுடைய மகளாக தத்தெடுத்துக் கொண்டார். வடமேற்கு பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் கதைகளில், ஜனகரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மேனகையின் தெய்வப் புதல்வியாக சீதா தேவி சொல்லப்பட்டு வருகிறார். சில நூல்களில் ஜனகரின் உண்மையான மகள் சீதா தேவி என்றும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான கதைகளில் சீதா தேவி வயல் வரப்புகளில் நிலத்திலிருந்து கண்டெடுக்கப் பட்டதாகவே சொல்லப்பட்டுள்ளது.
வேதவதியின் கதை
வேதவதியின் மறுஅவதாரம் தான் சீதா தேவி என்று சொல்லும் கதைகளும் உள்ளன. இராவணனால் துன்புறுத்தப்பட்ட பிராமண பெண்ணின் பெயர் தான் வேதவதியாகும். இராவணன் தன்னை அவமானப்படுத்தியவுடன், அவள் தன்னை சிதையில் ஏற்றிக் கொண்டு, வஞ்சம் தீர்க்கும் விதமாக மீண்டும் சீதையாக பிறந்தாள் என்று சொல்கிறது இந்தக் கதை.
இராவணனின் மகள்
உத்தர புராணத்தின் படி, அழகாபுரியின் இளவரசியான மனிவதியின் மேல் இராவணன் தவறான வகையில் ஆசை கொண்டிருந்தார். இதற்காக அவள் இராவணனைப் பழிவாங்க எண்ணினாள். பிற்காலத்தில், இராவணன் மற்றும் மண்டோதரி தம்பதியரின் மகளாக மீண்டும் பிறந்தாள். ஆனால், அந்தக் குழந்தை இராவணனின் சாம்ராஜ்யத்திற்கு பேரழிவைக் கொண்டு வரும் என்று சோதிடர்கள் குறிப்பிட்டார்கள். எனவே, இராவணம் அந்த குழந்தையைக் கொன்று விடுமாறு தன்னுடைய பணியாளிடம் சொல்லி விட்டார். ஆனால், அந்த பணியாள், குழந்தையைக் கொல்லாமல், ஜனகர் சீதையைக் கண்டெடுத்த மிதிலாவில் புதைத்து விட்டான்.
இராவணன் தன்னுடைய மகளை கைவிடுதல்
சமணர்களின் இராமாயணக் கதைப்படி, சீதை இராவணனின் மகளாகப் பிறந்தார். எனினும், இராவணனின் சாம்ராஜ்யத்தை அந்த குழந்தை அழித்து விடும் என்று சோதிடர்கள் சொன்னதால், இராவணன் தன்னுடைய பணியாட்களை அழைத்து சீதையை தொலைதூரத்தில் உள்ள நிலப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்து விடுமாறு கட்டளையிட்டார். அப்பொழுது தான் சீதை ஜனகரால் கண்டெடுக்கப்பட்டாள்.

No comments:

Post a Comment