Search This Blog

Thursday, May 15, 2014

மேட்டுர் அணையில் பெருங்கற்காலக் கல்வட்டங்கள்` கண்டுபிடிப்பு.


தருமபுரி மாவட்டம் மிகவும் பழமையான வரலாறு உடையது. தொல்லியலாளர்களின் சொர்கம் என்றால் மிகையல்ல. தமிழ்நாட்டிலேயே இம்மாவட்டத்தில்தான் வரலாற்று காலத்திற்கும் முந்தைய கற்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் அதிகம் கிடைக்கின்றன.
முக்கியமாக கற்திட்டைகள்,குத்துக்கற்கள், கற்பதுக்கைகள் வட்டப்புதைகுழிகள் என பெருங்கற்கால நாகரீகத்தின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கின்றது எனில் அவை ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும்தான் என்பது உண்மை.
தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் முனைவர் தி.சுப்ரமண்யன் தலைமையில் திரு. சுகவன முருகன், திரு.வி.ராஜன், திரு.அர்சுணன் ஆகிய ஆய்வாளர்கள் மேட்டூர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டனர். இவ்வாய்வில் தருமபுரி பகுதியில் அதாவது மேட்டூர் அணையின் நீர்தேங்கும் பிரதேசங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவ்வாய்வின் போது 3000 வருடங்கள் பழமையான கற்திட்டைகளுடன் கூடிய கல்வட்டங்களும் கற்திட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
பாண்டவன் திட்டு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்திட்டை மிகவும் பழமையானது ஆகும். தமிழகப் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றான இடத்தைப்பெறக் கூடிய ஒன்றாகும். இக்கற்திட்டையின் மூடுகல் மட்டும் சுமார் 80 டன்கள் இருக்கும் என்பது இதன் பிரம்மாண்டத்தைக் காட்டுவதாகும். அது மட்டுமல்ல இக்கற்திட்டையின் இடுதுளை கிழக்குப் பக்கம் உள்ளது. அரைவட்ட வடிவில் இருப்பதும் இதன் பழமையைக் காட்டுகிறது.

ஆய்வின் ஒரு பகுதியாக மலையனூர் திட்டு என்ற இடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஏராளமான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கல்வட்டத்தின் நடுவே ஈமப்பதுக்கை இருப்பதும் அறியப்பட்டது. சுமார் 20ற்கும் மேற்பட்ட ஒவ்வொரு பாறாங்கல்லும் ஒருடன் எடையுள்ள கற்களால் இக்கல்வட்டம் இருப்பதும் அபூர்வமான ஒன்றாகும்.இடுதுளை ஒன்று இருந்திருக்கும் என்று யூகம் செய்ய மட்டுமே முடிகிறது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேட்டூர் அணையில் நீர் வற்றும் போது காவிரி காயும் போது வெளித்தெரியும் நந்தியும் வீரபத்திரன் கோயிலும் சுமார் 800 ஆண்டுகள் மட்டுமே பழமையானவை. சர்ச் கோபுரங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானவை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருங்கற்கால நாகரீகத்தைச் சேர்ந்த இந்த ஈமச்சின்னங்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். புதையல் வேட்டையாளர்களும் அரியபோருள் திருடர்களும் பேராசைக்காரர்களும் தங்களது அறியாமையால் இரவில் குழி தோண்டி இச்சின்னங்களை சூறையாடி வருகின்றனர். அழிவிலிருந்து இவற்றைக் காப்பாற்ற முன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.






No comments:

Post a Comment