Search This Blog

Monday, April 28, 2014

தரிசனத்திற்கு கூட தகுதியற்றவனா நான்..!

நீ எனக்கு
மனைவி ஆக வேண்டாம்..!
காதலி ஆக வேண்டாம்..!
தோழியாக வேண்டாம்..!
வழக்கம் போல்
கொஞ்சம்
முகம் காட்டிவிட்டு
மறைந்து போயேன்..!
தரிசனத்திற்கு கூட
தகுதியற்றவனா நான்..!
‘உன் அருகில்
நான் வேண்டும்’
என்பதிலிருந்துதானே
தொடங்குகிறது
அத்தனை உறவுகளையும்
துவக்கி வைக்கும் புள்ளி..!
தாயாக..
சகோதரியாக..
மகளாக..
எப்படி வேண்டுமானாலும்
நான் உன்னை ஏற்பேன்..!
நான் தேடுவது
உன் அருகாமையை
உன் அருகாமை
அள்ளிக்கொடுக்கும் உனதன்பை..!
என் பேராசை
ஒருபோதும் விரக்தியடையாது..!
ஒரு தராசின்
இரண்டு தட்டுகளைப் போல
நடக்கும் என்றால் பேராசையும்
நடக்காது என்றால்
ஆசையாகவும் மட்டுமே
அதனை அடக்க முடியும்..!
சரி இது கேள்..!
உன் அருகில்
நான் இருக்கும் உறவினையா..?
என் அருகில்
நீ இருக்கும் உறவினையா..?
எதனை எனக்கு நீ
தரப்போகிறாய்..?
எதனையும் இல்லையா..?
எதனையும் இல்லையென்று
உன் விழிகள் சொல்வதாய்
என்னால் நம்ப முடியவில்லையே
என்ன செய்ய..?
மீண்டும் ஒருமுறை
இந்த ரோசக்காரனை
வார்த்தைகளால்
உன்னால் விளாச முடியும்
என்றால்
நான் அதனை
நம்ப வேண்டிய
கட்டாயம் நிகழ்ந்தே தீரும்..!
அப்படி நிகழ்ந்து விடக்கூடாது
என்பதற்காகவே
உன்னுடனான
என் இரண்டாவது
உரையாடலை,
குழம்புகிற மனநிலை
தரும் சந்தோசமாவது
மிச்சமிருக்கட்டுமே
என
முதல் உரையாடலுக்கு
முன்பிருந்த
ஆயிரம் தயக்கங்கள் போல
லட்சோப லட்சத்தோடு
தவிர்த்துக் கொண்டே போகிறேன்..!
என் கனவெல்லாம்
நீ வரும் என் கனவுகள்
பலிக்க வேண்டும்
என்பதை விட
நீ வரும் என் கனவுகளும்
பலியாகி விடக்கூடாதே
என்பதில்தான் இருக்கிறது..!
-யோவ்

No comments:

Post a Comment