Search This Blog

Monday, January 20, 2014

கனவு-அன்று-கனவு அபி



எல்லாம் முடிந்துவிட்டது எனக் 
கடைசியாக வெளியேறிய போது 
கவனித்தான் 
பின்புலமற்ற 
தூய நிலவிரிவு ஒன்றுabi_photobw01 
அவனுக்காகக் காத்திருப்பதை 

கனவுபோன்று இருந்தாலும் 
கனவு அன்று அது 

ஒளியிலிருந்து 
இருளை நோக்கிப் 
பாதிவழி வந்திருந்தது 
அந்த இடம் 

கிழக்கும் மேற்கும் 
ஒன்றாகவே இருந்தன 
தூரமும் கூடத் 
தணிந்தே தெரிந்தது 

தெரிந்ததில் 
எப்போதாவது ஒரு மனிதமுகம் 
தெரிந்து மறைந்தது 
ஒரு பறவையும் கூடத் 
தொலைவிலிருந்து தொலைவுக்குப் 
பறந்துகொண்டிருந்தது 

சஞ்சரிக்கலாம் 
மறந்து மறந்து மறந்து 
மடிவுற்றிருக்கலாம் அதில் 
நடக்க நடக்க 
நடையற்றிருக்கலாம் 

ஆயினும் 
உறக்கமும் விழிப்பும் 
துரத்திப் பிடிப்பதை 
அவற்றின் மடிநிறைய 
தலைகளும் கைகால்களும் 
பிதுங்கிக் கொண்டிருப்பதைப் 
பார்க்கும் நிமிஷம் 
ஒருவேளை வரலாம் 

கனவு அன்று எனத் தோன்றினாலும் 
கனவாகவே இருக்கலாம் 


மாலை - எது 

தூசி படிந்த புளியமர வரிசையை 
வைதுகொண்டே 
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள் 

வண்டுகளும் பறவைகளும் 
தோப்புகளுக்குள் 
இரைச்சலைக் கிளறி 
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன 

இருண்டு நெருங்கி வளைக்கும் 
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில் 
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித் 
ததும்புகிறது 
என் வலி 

பொழுது நிரம்புகிறது 
ஒரு இடுக்கு விடாமல் 


தூசி படிந்த இரைச்சலுக்கடியில் 
சாத்வீக கனத்துடன் 
இது எது? 

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில் 
இடறாத என் பாதங்களினடியில் 
இது எது 
என் சாரங்களின் திரட்சியுடன் 
வலியுடன் 
அலங்கரித்த விநோதங்களை 
அகற்றிவிட்டு 
எளிய பிரமைகளின் வழியே 
என்னைச் செலுத்தும் 
இது எது? 


மாலை - தணிவு 

காடு எரிந்த கரிக்குவியலில் 
மேய்ந்து களைத்துத் 
தணிந்தது வெயில் 
என்னோடு சேர்ந்து 

இதோ இதோ என்று 
நீண்டு கொண்டே போன பாதைகள் 
மடங்கிப் 
பாலையினுள், முள்வெளி மூழ்கச் 
சலனமற்று நுழைந்துகொண்டன 

விவாதங்கள் 
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன 
வழிகளில் 
அறைபட்டுத் திரும்பின 

முடிவுகள் 
அரைகுறைப் படிமங்களாக வந்து 
உளறி மறைந்தன 

பசியும் நிறைவும் 
இரண்டும் ஒன்றாகி 
என் தணிவு 

வேறொரு விளிம்பைச் 
சுட்டிக் காட்டாத 
விளிம்பில் 
தத்தளிப்பு மறைந்த 
என் தணிவு 

நிகழும் போதே 
நின்றுவிட்ட என் கணம் 
குளிரத் தொடங்கியது 
என் தணிவைத் தொட்டு 


மாலை - காத்திருத்தல் 

விஷப்புகை மேவிய வானம் 
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது 

அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு 
மின்னி இடித்து 
வெறியோடு வருகின்றன 
அல்ல அல்ல அல்ல என்று 
பொழிந்து பிரவகிக்க 
அழித்துத் துடைத்து எக்களிக்க 
வருவது தெரிகிறது 

அடர்வனங்களின் 
குறுக்கும் நெடுக்குமாக 
ஆவேசக் காட்டாறுகள் 
பதறி ஓடி 
வாழ்வைப் பயிலும் 

உண்டு-இல்லை என்பவற்றின் மீது 
மோதிச் சிதறி 
அகண்டம் 
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது 


காத்திருக்கிறேன் 
இதுவே சமயமென 
எனது வருகைக்காக 
என் குடிசையில் வாசனை தெளித்து 
சுற்றிலும் செடிகொடிகளின் 
மயக்கம் தெளிவித்து 
அகாலத்திலிருந்து 
இந்த மாலைப்பொழுதை விடுவித்து- 

காத்திருக்கிறேன் 
மறுபுறங்களிலிருந்து 
வெற்றி தோல்வியின்றித் திரும்பும் 
என் வருகையை எதிர்நோக்கி 

விடைகள் 
விடைகள் 
மிகவும் மெலிந்தவை 

ஏதோ சுமந்து வருவன போல 
முக்கி முனகி வியர்வை துளித்து 
நம் முகத்தில் 
திருப்தி தேடுபவை 

தரையில் கால்பாவாது 
நடக்கவும் 
நீரில் நனையாமல் 
நீந்தவும் 
அறிந்தவை 

முந்தாநாள் 
ஒரு விடையை 
எதிர்ப்பட்டேன் 

என்னைப் பார்த்தவுடன் 
அது 
உடையணிந்து 
உருவுகொண்டது 

தன்னை ஒருமுறை 
சரிபார்த்துக் கொண்டதும் 
எங்களைச் சுற்றி 
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு 
என்னை நேர்கொண்டது 

நான் 
ஒன்றும் சொல்லவில்லை 

நெளிந்தது 

கலைந்து மங்கும்தன் 
உருவை 
ஒருமித்துக் கொள்ளக் 
கவலையோடு முயன்றது 

சுற்றிலும் பார்த்துவிட்டு 
ஒருமுறை 
என்னைத் தொடமுயன்றது 

நான் 
எதுவுமறியாத 
பாவனை காட்டியதில் 
ஆறுதலுற்றுக் 
கொஞ்சம் நிமிர்ந்தது 

எதிர்பாராது வீசிய காற்றில் 
இருவரும் 
வேறுவேறு திசைகளில் 
வீசப்பட்டோம் 

திரும்பப்போய்த் 
தேடிப்பார்த்த போது 
சாமந்திப்பூ இதழ்கள் போல் 
பிய்ந்து கிடந்தன 
சில 
சாகசங்கள் மட்டும் 


காலம் - புழுதி 

எங்கிலும் புழுதி 
வாழ்க்கையின் தடங்களை 
வாங்கியும் அழித்தும் 
வடிவு மாற்றியும் 
நேற்று நேற்றென நெரியும் புழுதி 

தூரத்துப் பனிமலையும் 
நெருங்கியபின் சுடுகல்லாகும் 
கடந்தாலோ 
ரத்தம் சவமாகிக் கரைந்த 
செம்புழுதி 

புழுதி அள்ளித் 
தூற்றினேன் 

கண்ணில் விழுந்து 
உறுத்தின 
நிமிஷம் நாறும் நாள்கள் 


காலம் - சுள்ளி 

காடு முழுதும் 
சுற்றினேன் 

பழைய 
சுள்ளிகள் கிடைத்தன 

நெருப்பிலிட்டபோது 
ஒவ்வொன்றாய்ப் 
பேசி வெடித்துப் 
பேசின 

குரலில் 
நாளைச்சுருதி 
தெரிந்தது 

அணைத்து, 
கரித்தழும்பு ஆற்றி 
நீரிலிட்டபோது 
கூசி முளைத்துக் 
கூசின இலைகள் 

தளிர் நரம்பு 
நேற்றினுள் ஓடி 
நெளிந்து மறைந்தது

No comments:

Post a Comment