Search This Blog

Wednesday, August 15, 2012

குடும்ப வன்முறை



எங்கள் பிரதேசங்களில் பல வெளிநாட்டு உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்கள் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகத் தங்கள் வேலைகளை முன்னெடுப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். 'எங்களால் முடியும்' (றுந உயn) என்கின்ற பிரச்சாரம் ஒக்ஸ்பாம் என்னும் நிறுவனத்தினால் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதில் பங்குபற்றியிருக்கிறீர்களா? அப்படியானால், குடும்ப வன்முறையைப் பற்றிய விளக்கம்  உங்களுக்குத் தெரிய வந்திருக்கும். குடும்பம் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வதனாலும், வன்முறை என்பது என்ன என்று விளங்கிக் கொள்வதனாலும், நாங்கள் குடும்ப வன்முறை என்னும் சமூகப் பிரச்சினையின் மூலத்தை அறிந்து கொள்ளலாம்.
குடும்பம்
அந்தக் காலம் என்றால் என்ன, இந்தக் காலம் என்றால் என்ன, மனித இனம் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழவேண்டுமானால் அது இரண்டு கடமைகளை அவசியமாகச் செய்ய வேண்டும். ஓன்று, மனிதர்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றை பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வது என விபரிக்கலாம். அடுத்தது, அவர்கள் தாங்கள் தொடர்ந்து வம்சங்களாக வாழ்வதற்கான மறு உற்பத்தியில் ஈடுபடவேண்டும். இதனை, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது தொடர்பான சகல கடமைகளாக விளங்கப்படுத்தலாம். எங்கள் சமூகக் கட்டமைப்புக்களும் கலாசார வெளிப்பாடுகளும் எல்லாமே எப்பொழுதும் இந்த 'உற்பத்தி', 'மறு உற்பத்தி' என்னும் இரு முக்கியமான உறவுகளைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
உற்பத்தி உறவுகள் என்றால் என்ன? உற்பத்திக்குத் தேவையான வளங்களை (மூலதனம், தொழில்நுட்பம், நிலம் போன்ற இயற்கை மூலங்கள்) உற்பத்தியில் ஈடுபடும்; மனிதன் எப்படி எடுத்துக் கொள்கின்றான் என்பதெல்லாம் உற்பத்தி உறவுமுறைகளுக்குள் அடங்கும். மறு உற்பத்தியின் உறவுகளானவை, பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக சமூகம் தன்னைக் ஒழுங்கமைத்துக்கொண்ட நடைமுறைகளாகும். முதலில் நாங்கள் தின்று குடித்து உயிர் வாழ்ந்தால் அப்புறந்தானே எமது மறு உற்பத்தி பற்றிச் சிந்திக்கலாம்? எனவே மனிதர்களின் வயிற்றுப் பிழைப்பென்பது அவர்களின் இருப்பின் அல்லது வாழ்க்கையின் முதன்மையான செலுத்திகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆகவே எங்கள் பொருளாதாரக் கட்டமைப்புக்கள்தான் பின்பு எங்களின் சமூக உறவுகளைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றது என்று கூறலாம்.
கீழே ஒரு அட்டவணையில், ஆதிகாலம் தொட்டு மனித சமுதாயத்தில் நிலவிய பிரதானமான உற்பத்தி உறவு முறைகளையும் அவற்றுடன் தொடர்பாக உருவாகிய மறு உற்பத்தி உறவு முறைகளையும் தருகின்றோம். அதனை ஆராய்ந்து படிப்பதன்மூலம் உற்பத்திக்கும் மறு உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்புகளை நீங்கள் இன்னும் நன்றாக அறிந்து கொள்ளலாம்.

அட்டவணை
உற்பத்தி உறவு முறைகள் உற்பத்தி உறவு முறைகளுடன் தொடர்பான மறு உற்பத்தி உறவுமுறைகள்
1. மனிதன் உருவாகி முதல் 30,000 வருடங்கள்

பெண்கள் காய்கிழங்கு கனி பொறுக்குவதும் ஆண்கள் காட்டு மிருகங்களை வேட்டையாடுவதும் உற்பத்தி தொடர்பான தொழிலாக இருந்தது..
ஓரிடத்தில் உணவு மூலங்கள் முடிந்து விட்டால் அடுத்த பிரதேசத்துக்கு குடி பெயரும் நாடோடி வாழ்க்கை. சொத்து என்று கூறிக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாம் எல்லாருக்கும் பொதுவென வாழ்ந்த காலம்.
ஓற்றுமையாக ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக வாழ வேண்டிய நிலைமை என்பதனால் மக்கள் குடிகளாகவும் குழுக்களாகவும் வாழ்ந்த காலம்.
பெண்களும் ஆண்களும் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்த காலம். ஒரு ஆணுடன் வாழ்வது என்பது என்ன என்று அறியாத பருவம். பெண்கள் பிள்ளைகளைப் பெற்றவுடன் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்து வளர்த்தெடுத்தனர். இங்கு சமூக மத்தியில்தான் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர் என்று கொள்ளலாம். ஆண்களுக்கு தங்கள் பிள்ளைகள் யாரென்று தெரியாததோடு அவர்கள் பிள்ளை வளர்ப்பிலும் ஈடுபடவில்லை.

குழாமுக்கு மிக அவசியமான மனித உயிர்களை உற்பத்தி செய்பவர்கள் என்கின்ற அடிப்படையிலும், சாஸ்வதமான உணவுப்பொருளாக இருக்கின்ற கிழங்கு கனிகளை குழுவுக்கு வினியோகிப்பவர்கள் என்கின்ற அடிப்படையிலும், குடிகளின் சமூக வாழ்க்கையில் பெண்கள் முதன்மை ஸ்தானத்தில் வைக்கப்பட்டார்கள். இச்சமூகத்தைத் தாய்வழி சமூகங்கள் என்று ஆய்வாளர்கள் விபரிப்பார்கள்.
2. மனிதனின் அடுத்த 10,000 வருடங்கள்

மனிதர்கள் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். உபரி உற்பத்தி அதிகரிக்க குடிகளுக்குள் செல்வம் பெருகியது. உபரி உற்பத்திகள் பண்ட மாற்றுச் செய்யப்பட்டு வர்த்தகம் பெருகியது. பெண்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டதனால் ஆண்களே கால்நடை மேய்ப்பதிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர்.   அயல் குடிகளின் கால்நடைகளை அபகரிப்பதற்கு அவர்கள்; போரிடவும் தொடங்கினர்.
ஆண்களின் கைகளில் சொத்து சேரத் தொடங்கியது. முதன்முதலாக உலகத்தில் தனியுடைமை தோன்றியது.


ஆண்கள் தங்களுடைய சொத்தைக் கொடுக்க தமக்கென வாரிசு வேண்டுமெனக் கருதத் தொடங்கினர். ஒரு குடும்பத்தின் சகோதரர்கள் அனைவரும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் வழக்கம் வந்து அதிலிருந்து ஒரு பெண் ஒரு ஆணுக்கு மட்டும் சொந்தமாகும் ஒருதார மணம் உருவாகிற்று. தனியுடைமையுடன் நாங்கள் அறியும் மணவாழ்வு நடைமுறைக்கு வந்தது. ஆண்கள் பெண்களின் மீது பிரயோகித்த அதிகாரமே திருமணம் என்னும் சடங்கு என்றால் மிகையாகாது. இத்துடன் பெண்களின் சமூக அந்தஸ்து சரியலாயிற்று. குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பு ஆரம்பமானது.
3. மனிதனின் அடுத்த 5,000 வருடங்கள்

பாரிய அளவில் விவசாயப் பொருளாதாரம் உருவாகியது. வுpவசாயம் மனித குலத்துக்கு இதுவரை காணா பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்தது.  நகரங்களும் நாடுகளும் உருவாகின. கலைகளும் கல்வியும் வளர்ந்தன.


ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைகின்ற குடும்பம் நிலைபெறுகிறது. சொத்துடைமை ஆணின் கைகளில் பூரணமாகத் தேங்குகிறது. ஒரு குடும்பத்தின் உரிமையாகும் நிலத்தைத் துண்டாடுவது விவேகமில்லையாதலால், நிலத்தை ஒன்று சேர்க்கும் கூட்டுக்குடும்ப முறை நிலவியது. அதாவது சகோதரர்கள் எல்லாருமே ஒன்றாக வாழ்கின்றனர்.  இதன்மூலம் ஒரு குடும்பம் முழுவதுமே கூட்டாகத் தங்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்தார்கள், தங்களுக்குள் திருமண பந்தங்களையும் வைத்துக்கொண்டு தங்கள் சொத்துக்களைப் பிரிய விடாமல் பாதுகாத்தார்கள்.


4. மனிதனின் அடுத்த 300 வருடங்கள்

தொழில் நுட்ப விரிவாக்கத்தினால் தொழிற்சாலைகள் எழுந்தன.  மனிதர்கள் தங்கள் தங்கள் நிலத்திலிருந்து பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் தனியே உழைப்பை மட்டும் சொந்தம் கொள்ளும் தொழிலாளிகளாக மாறினர்.






மனிதர்கள் நிலத்தை அண்டிப்பிழைப்பவர்களாக இல்லாமல், தொழில் எங்கே உள்ளதோ அங்கு போய் அத்தொழிற் துறையுடன் வாழுபவர்களாக இருந்தார்கள். அதாவது எங்கே தொழில் இருந்ததோ அங்கே வாழும் தொழிலாளிகளாக இருந்தார்கள். கூட்டுக்குடும்பம் உடைந்தது. அப்பா அம்மா பிள்ளை என வாழும் தனிக்குடும்பங்கள் தோன்றின. இங்கும் ஆண்தான் பிரதானமான உழைப்பாளியாகக் கருதப்பட்டான். பெண்கள் குறைந்த வருமானம் பெறும் உழைப்பாளிகளாக இருக்கின்றனர்.
5. மனிதனின் அடுத்த 30 வருடங்கள்
(சமகாலம்)

மூலதனம், தொழில்நுட்பம் இவை மூலமாக உற்பத்தி, ஆகியன சுதந்திரமாக நாட்டுக்கு நாடு தாவும் உலகமயமாக்கல் பொருளாதார அமைப்பு உருவாகின்றது. உற்பத்தி துண்டாடப்பட்டு கண்டம் விட்டுக் கண்டம் தாவுவதுபோல (ஒரு சப்பாத்தின் அடிப்பக்கம் கொரியாவிலும், மேற்பக்கம் சீனாவிலும் லேஸ் இந்தியாவிலும் அதன் முழுமையான உருவம் அமெரிக்காவிலும் செய்யப்படுதல்)  உழைப்பும் கண்டம் விட்டுக் கண்டம் தாவுகின்றது. தொடர்பாடல் புரட்சி ஏற்பட்டு உலகின் தூரங்கள் குறைக்கப்படுகின்றன.




மலிவான உழைப்பைத் தேடி உற்பத்தி துண்டாடப்படுவதனால்  பெண்கள் பிரதான உழைப்பாளிகளாக மாறுகின்றனர். திருமணம் என்பது அவசியமில்லாத பந்தமாக மாறுகின்றது. தனிக்குடும்பங்கள் உடைகின்றன. ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் (அதாவது வாழ்நாளுக்குரிய பந்தமாக இல்லாமல்) ஒன்றாக வாழும் சமூகக் கட்டமைப்பு உருவாகின்றது. இவர்கள் தங்கள் குலத்துக்குள்ளோ இனத்துக்குள்ளோ மட்டும் பார்ட்னரைத் தேடாமல், உலகளாவிய ரீதியில் சர்வதேச பார்ட்னர்களைத் தேடத் தொடங்குகின்றனர்.

இதிலிருந்து, ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் உறவுமுறை, அல்லது குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பு இவை பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தையே குறியாக வைத்து தோற்றுவிக்கப்பட்டன என்பதைக் காணலாம். அத்துடன், தங்களுடைய சொந்த வாரிசுகளாக பிள்ளைகளைப் பெறுவதற்கெனவும் இது ஏற்படுத்தப்பட்டது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். இந்த அதிகாரமானது ஒரு குடும்பத்தின் பல அங்கத்தவர்களினால் வௌ;வேறு நிலைகளில் பிரயோகிக்கப்படுகின்றது. உதாரணமாக, குடும்பத் தலைவனின் தாய் என்கின்ற உறவு தருகின்ற அதிகாரத்தில் மாமியார் மருமகளைக் கொடுமை செய்யும் நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறே மாமனார், கணவனின் சகோதரர்கள், மூத்த சகோதரனின் மனைவி என்று படிப்படியாக இந்த அதிகார உறவு முறைகள் அடுக்கப்பட்டிருக்கும்.  ஆகவே, ஆதிக்க உறவு முறைகளின் ஊற்றாக நாம் குடும்பத்தைப் பார்க்கலாம். குடும்பங்களில் அதிகார உறவுமுறைகளுக்குப் பழக்கப்பட்டு அவற்றை ஏற்றுக்கொள்கின்றபோது, அதே மாதிரியான அதிகார உறவுமுறைகளை சமூகத்திலும் அரசியலிலும் ஏற்றுக்கொள்ள மனிதர்கள் பழகுகிறார்கள். அப்படித்தான் ஒடுக்குமுறை சமூக அரசியல் கட்டமைப்புக்கள் எங்கள் மத்தியில் நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்கின்றது.
வன்முறை
எந்த மேலாதிக்க உறவும் ஒருவருடைய விருப்பங்களையும் தீர்மானங்களையும் இன்னொருவர் மீது திணிக்கும் நடைமுறையாகும். இந்த உறவு வன்முறையின் மூலம்தான் தக்கவைத்தக்கொள்ளப்படலாம். இப்படியான வன்முறைகளுக்கு இரு நோக்கங்கள் உண்டு. முதலாவது, பயமுறுத்தி அல்லது சிறுமைப்படுத்தி அடிபணிய வைப்பதன் மூலம் எதிர்ப்பையே இல்லாமல் செய்வது, இரண்டாவது, எதிர்ப்பிற்கான தண்டனையைக் கொடுத்து அடுத்த முறை எதிர்ப்பு எழாமல் செய்வது. முன்னையது அனேகமாக உள ரீதியான செயற்பாடாகும். பின்னையது உடல் ரீதியான செயற்பாடாகும். பெரும்பாலான குடும்ப வன்முறைகள் (90 வீதமானவை என்று கூறலாம்) ஆண்களினால்தான் செய்யப்படுகின்றன. தங்களின் தேவைகளைக் கவனிக்கவென மட்டும் தங்கள் குடும்பத்தை வடிவமைக்கவும், வேறு ஆடவனுடன் தங்கள் பெண்கள் போகாவண்ணம் (இந்தப் பயம் பெரும்பாலான ஆண்களுக்கு உள்ளுர இருக்கின்றது) தடுக்கவும் கூடிய தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டவே அவர்கள் வன்முறையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுகின்றனர். பொதுவாகக் கணவன்மார், தந்தையர், பாட்டாமார், அதற்குப் பின்பாக மாமன்மார் என்று இந்த வரிசையில்தான் குடும்ப வன்முறையாளர்கள் தோன்றுவதைக் காணலாம்.
தங்கள் கணவன்மார்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதனால்தான் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று அனேகமான பெண்கள் தவறாக விளங்கிக் கொள்ளுகின்றனர். குடிபோதை வன்முறையில் ஈடுபடுவதற்கான தெம்பைக் கொடுக்கின்றதேயொழிய, வன்முறையில் ஈடுபடுவதற்கான லைசன்ஸ் முழுக்க ஆண்களுக்கு மேலாதிக்கத்தினை வழங்கும் எங்கள் சமூகப் பண்பாட்டினால்தான் கொடுக்கப்படுகின்றது. எனவே, குடிப்பழக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டால்தான் குடும்ப வன்முறையை முற்றாக ஒழிக்கலாம்.
அடுத்து, பெண்கள் தங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பற்றி வெளியில் குறைகூற வெட்கப்படுவதனாலும், தமக்கு நிகழும் வன்முறையைப் பற்றி சொல்லுவதில்லை. இது யாருக்குமே உதவாத வரட்டு கௌரவமாகும். ஒரு தவறு நடக்கும்போது அதைப் பற்றி வெளிவெளியாக நாங்கள் பேச ஆரம்பிக்கத் தொடங்கும்போதே அத்தவறுக்கான மாற்று நடவடிக்கை 50வீதம் செயற்படுத்தப்படுகிறது. எப்படி என்கிறீர்களா? நாங்கள் வாய்விட்டுப் பேசும்போது அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தைரியத்தையும் எங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பேசக்கூட முடியாவிட்டால் தைரியம் எங்கேயிருந்து வரும்? மேலும், மற்றவர்களுடன் பேசப்பேசத்தான் பிரச்சினையும் தெளிவாக எங்களாலேயே விளங்கிக் கொள்ளப்படுகின்றதுளூ உங்கள் பிரச்சினையை அறிந்தால்தான் ஏனையோர் உங்கள் உதவிக்கு வரலாம். இவ்வாறாக மக்கள் பலரின் மனஉறுதி ஒன்றுபடும்பொழுது அங்கு தீர்வு உருவாகி செயற்படுத்தப்படுகின்றது. எங்கள் மத சாத்திரங்கள்கூட சொல்லின் சக்தியைப் பற்றி எங்களுக்கு கூறுகின்றன. உங்களுடைய சொல் வாக்கியங்களின் சக்தியை எனிதாக எடை போடாதீர்கள்.
குடும்ப வன்முறைக்கெதிராக செயற்படுவது பற்றி....
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிபர், அவருக்கு பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வேலைத் திட்டங்கள் கொஞ்சமும் பிடிக்காது. 'தேவையில்லாமல் வெளிநாட்டு நிதிகளைக் கொண்டு எங்கள் சமூகத்தின் கலாசாரப் பண்பாடுகளை மாற்றுகிறீர்கள்.. குடும்பங்களைப் பிரிக்கிறீர்கள்...' என்று குற்றஞ் சாட்டி அத்தகைய செயற்திட்டங்களுக்கு அவர் அனுமதி கொடுப்பதில்லை.
ஆம், குடும்ப வன்முறையை ஒழிக்க, ஏன் பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் ஒழிக்க, நாம் பாடுபடும்பொழுது நிச்சயமாக குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பினுள் மாற்றங்களைக் கொண்டுவந்தேயாக வேண்டும். அங்கு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவமான அதிகாரங்களைக் கொண்டுவரவேண்டும். அதைவிட, குடும்ப அங்கத்தவர்கள் தங்கள் நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி மற்றவர் மீது மேலாதிக்கம் செலுத்தாமல் கவனமாக இருக்கும் விழிப்புணர்வினை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக, 'இது என்டை பிள்ளை நான் என்ன வேணுமானாலும் செய்யலாம்...' என்று பல பெற்றோர்கள் சொல்லுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இது முற்றிலும் தவறான கருத்தாகும். எம்மில் தங்கி வாழும் எமது சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு அந்தப் பிள்ளையை ஆட்டி வைக்க முடியாது, அதற்கு இம்சைகள் புரிய முடியாது. அந்தப் பிள்ளைக்கு தனது உணர்வுகளினதும் அறிவினதும் பிரகாரம் நடப்பதற்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. தங்கள் பிள்ளைகளின் கருத்துக்களுக்கும், அது ஐந்து வயதாக இருந்தாலும் கூட, சமமான மரியாதை கொடுத்து இயங்கும் குடும்பங்களில் வன்முறை நிகழ மாட்டா.
எனவே மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் அரச அதிபர் உண்மையைத்தான் கூறினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகார முறையான ஏற்றத் தாழ்வும், வன்முறையைப் பிரயோகிப்பதுமான 'எங்கள் பாரம்பரிய கலாசாரப் பண்பாடுகளை' மாற்றினால்தான் வன்முறையை இல்லாதொழிக்கலாம். இந்த மாற்றத்தை எண்ணித்தான் அவர் பயப்படுகின்றார். அவர் மட்டுமல்ல, சமூகத்தின் பல 'பெரிய மனிதர்கள்' எல்லோரும் இந்தக் காரணத்திற்காகத்தான் பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வேலைத் திட்டங்களுக்கு தங்கள் ஆதரவினைக் கொடுப்பதில்லை. அதிகாரம் தங்கள் கைகளை விட்டு நழுவுவது எவருக்கும் பிடிக்காத ஒன்றல்லவா? அதற்கு எப்பொழுதும் அவர்கள் கையெடுக்கும் அஸ்திரம் 'கலாசாரத்தை மாற்றுகிறார்கள்' என்னும் குற்றச் சாட்டாகும்.
எங்கும் எப்போதும் கலாசாரம் மாறிக்கொண்டுதானிருக்கின்றது. மாறாத கலாசாரம் ஒன்றிருக்கு என்னும் கருத்து பச்சைப்பொய்யாகும். சுpல கலாசாரங்கள் வேகமாக மாறுகின்றன, சில மெதுவாக மாறுகின்றன, அவ்வளவுதான். கலாசாரத்தை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்திருப்பவர்கள் அதனை வன்முறை மூலமாகத்தான் செயற்படுத்தலாம். வேறு வழியேயில்லை.  இதற்கு ஒரு உதாரணமாக பாகிஸ்தானில் இருந்து ஒரு கதையைச் சொல்லலாம். இஸ்லாமிய ஆட்சி கொண்டுவரப்பட்ட வேளையில் அங்கு பெண்களெல்லோரும் கையில்லாத சட்டை போடுகிறார்களேயென்ற கூக்குரல் எழுந்தது. எனவே மதத்தீவிரவாதிகள் ஒரு பிளேட்டுடன் பாதையில் இறங்கி அங்கு கையில்லாத சட்டை போட்டுச் சென்ற சகல பெண்களின் கைகளிலும் பிளேட்டினால் கிழித்து விட்டார்களாம். இப்பொழுது அங்கே பெண்கள் கைகளை மூடிய சட்டைகள்தான் அணிகின்றனர்.
பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக வேலை செய்பவர்கள் இந்தக் காரணியைத் தெளிவாகப் புரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். ஜிஏ வேண்டாம் என்கிறார் என்று பயந்தடித்து சொல்லிவிட்டு வீட்டில் இருப்பதல்ல எங்கள் பணி. ஏந்தப் பெரிய மனிதரானாலும் அவர் தவறான கருத்துக்களைக் கூறினால் அதற்கு சவால் விடத் துணிய வேண்டும். சமூகத்தில் இறங்கி இயலுமட்டும் மக்களுக்கு இதைப் பற்றி விளங்கப் படுத்தவேண்டும். ஆதிக்க உறவு முறைகளின் ஊற்றாக நாம் குடும்பத்தைப் பார்த்தாலும்கூட, இப்பொழுதே இங்கேயே குடும்பங்கள் எல்லாவற்றையும் இல்லாதொழிக்கவேண்டும் என்று கூற வரவில்லை. அம்மா, அப்பா, பிள்ளைகள் என்கின்ற சமூக அமைப்பு இப்பொழுது தோன்றியிருக்கின்றது. நாங்கள் அட்டவணையில் காட்டியதுபோல அது நாங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன, காலப்போக்கில், உற்பத்தி உறவுமுறைகள் மாற்றமடைய அது மாற்றமடைந்து கொண்டுதான் போகப் போகிறது. எந்த சமூக உருவத்தை மறு உற்பத்தியானது எடுத்துக்கொண்டாலும், அது நீதியானதும் சமத்துவமானதுமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாம் வலியுறுத்துகின்றோம். எனவே, தனிக்குடும்பம்தான் இப்போதுள்ள சமூக உறவுமுறையானால், பரவாயில்லை அது இருக்கட்டும், ஆனால் அதற்குள் அநீதிகள் நடக்கக் கூடாது என்கின்றோம்.
இந்த முறையான சமநோக்கு மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு நாங்கள் அவர்களுக்கு நிறையவே எடுத்து விளங்கப்படுத்த வேண்டி நேரும். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராயிருந்தாலும், சேர்ந்திருந்து அளவளாவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்களைப் போல இதற்கு எதிராகப் பணிபுரியத் தயாராக இருப்பவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்குள் தொடர்ந்த இணைந்த செயற்பாடுகளை ஊக்குவியுங்கள். இந்த முறையில் வன்முறைக்கெதிரான மக்களின் எண்ணிக்கையைத் திரட்டி அதிகரிக்கலாம். இவ்வாறு மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அவர்கள் அபிப்பிராயங்கள் வலுப்பெற, மாற்றங்கள் தானாகவே சமூகங்களில் நிகழும்.
  கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. உமது ஊரில் நிகழும் குடும்ப வன்முறைகள் எவையென்பது தெரியுமா? நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு சம்பவத்திலும் வன்முறையைப் பிரயொகித்தவர் யார் என்றும் அவருக்கும் வன்முறைக்குள்ளானவருக்கும் என்ன உறவு? இங்கு அதிகார உறவுமுறை என்பது தென்பட்டதா?
2. 'மாற்றம் ஒன்றுதான் இந்த உலகில் என்றும் மாறாத விஷயம்..' இந்த வசனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புpற குழு அங்கத்தவர்களுடன் கலந்துரையாடுங்கள். ஆதி காலம் தொட்டு மாறாமல் இருந்து வருகின்ற ஏதாவது விஷயத்தை நீங்கள் காட்ட முடியுமா? உடை, உணவு, பழக்கவழக்கம், வீடு கட்டும் முறைகள், மொழி, பிரயாணஞ் செய்கின்ற முறைகள், கல்வி முறைகள், குடும்ப உறவுமுறைகள், இயற்கை இப்படி எல்லாவற்றையும் உதாரணமாகக் கொள்ளுங்கள். ஆராய்ந்த பேசி உங்கள் முடிவுகளுக்கு வாருங்கள்.
3. கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு வன்முறையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் உங்கள் ஊரில் நடந்திருக்கின்றனவா? அவை என்ன என்று பிற அங்கத்தவர்களுக்கு விபரியுங்கள்.
4. பெண்கள் மீதான வன்முறைகள், குறிப்பாக குடும்ப வன்முறைகளை ஒழிக்க நீங்கள் உங்கள் ஊரில் என்ன செய்யலாம்?
- சக பெண்களுடன்
- ஊரிலுள்ள பெரிய மனிதர்களுடன்
- பொதுவாக ஆண்களுடன்
- பிள்ளைகளுடன்
- பாடசாலை ஆசிரியர்களுடன்
- சமயத் தலைவர்களுடன்
- பாதிக்கப்பட்டவர்களுடன்
- பாதிப்பினை ஏற்படுத்தியவர்களுடன்
- உங்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் . . . . .
எப்படியான நடவடிக்கைகளை செய்வீர்?

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம் 

No comments:

Post a Comment