Search This Blog

Wednesday, August 15, 2012

இலங்கையின் அரசியல் யாப்பு (அரசியலமைப்புச் சட்டம்) 1978




அறிமுகம்
நீங்கள் ஒரு அமைப்பின் அங்கத்தவராக இருப்பின், யாப்பு என்கின்ற சொல்லின் அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கும். யாப்பு என்பது, ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் இயங்குவதற்கான விதிகளும் கொள்கைகளுமாகும். அதே போலவேதான், அரசியல் யாப்பு என்பது ஒரு நாடு இயங்குவதற்கான விதிமுறைகளும் கொள்கைகளுமாகும். இது உண்மையில் தம்மைத் தாமே ஆளுவதற்காக மக்கள் இடும் ஆணையாகும். அது நாட்டுக்கு நாடு முற்றிலும் வேறுபடும். ஒவ்வொரு அரசியல் யாப்பும் அந்தந்த நாட்டின் கட்டமைப்புக்கள் வளர்ந்து வந்த வரலாற்றையும் அனுபவத்தையும் பொறுத்தும், அத்துடன் அதை எழுதியவர்களின் நோக்கங்களைப் பொறுத்தும், அது தயாரிக்கப்பட்ட முறைவழி பொறுத்தும் இப்படி வேறுபடுகின்றது. தற்போது செயற்பாட்டில் இருக்கும் எங்களுடைய யாப்பு, 1978ம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழேயே எழுதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

உங்கள் கிராம மாதர் அபிவிருத்திச் சங்கமாக இருந்தால் என்ன, அல்லது ஒரு அரசுசாரா நிறுவனமாக இருந்தால் என்ன, உங்கள் அமைப்பின் யாப்பில் இரண்டு அங்கங்கள் இருக்க வேண்டும். முதலாவது அங்கமானது தெரிவு செய்யப்படும் உறுப்பினரது தன்மைகளும் கடமைகளும் எவை என்பதை விவரிக்கும். அடுத்த அங்கமானது நிர்வாக நடைமுறைகளைப் பற்றிக் கூறும், இல்லையா? இங்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்தான் தீர்மானம் எடுக்கும் அங்கத்தினர்களாக இரப்பார்கள். நிர்வாகத்தினர், பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்தின்படி பணி புரியும் ஊழியர்களாக இருப்பார்கள்.

அதே போலவே, ஒரு அரசியல் யாப்பானது நாட்டின் ஆட்சியின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் (தீர்மானம் எடுப்போர்) இயங்க வேண்டிய முறை பற்றியும், நிர்வாக (ஊழியர்கள்)  நடைமுறைகள் பற்றியும் விளக்குகின்றது. இவை தவிர, இந்த இரண்டு அங்கங்களும் மிதமிஞ்சிய அதிகாரங்களோடு தம் இஷ்டத்துக்கு இயங்காத வண்ணம் பார்த்துக்கொள்வதற்கு மூன்றாம் அங்கமாகிய நீதித் துறையானது ஒவ்வொரு அரசின் யாப்பினுள்ளும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன்படி, ஒரு அரசியல் யாப்பின் மூன்று முக்கிய அங்கங்களாக சட்டவாக்க அங்கம், நிறைவேற்று அங்கம், நீதித்துறை அங்கம் என்பனவற்றைக் கூறலாம்.

•       சட்டவாக்க அங்கமானது தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டது. இது நாட்டின் சகல கொடுக்கல் வாங்கல் பற்றியும் சகல அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றியுமான சட்டங்களை இயற்றும். அப்படி இயற்றுகின்ற இந்த மக்கள் பிரதிநிதிகள் சபையைப் பாராளுமன்றம் என்று சொல்லுவோம்.
•       பாராளுமன்றம் இயற்றும் சட்ட விதிகளை நிறைவேற்றுவதற்காக நிறைவேற்றுத் துறை இருக்கின்றது. அமைச்சுக்கள், அதன் கீழான திணைக்களங்கள், அவற்றின் அலுவலகங்கள் ஆகியன இவை. மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கான சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், அவர்களின் அபிவிருத்தியை முன்னேற்றுதல், மற்றும் வெளிநாடுகளுடனான உறவுகளைப் பேணுதல் போன்றவையே நிறைவேற்று அங்கங்களின் நோக்கமாகும்.
•       சட்டவாக்க அங்கமும் நிறைவேற்று அங்கமும் அரசியல் யாப்பு விதிகளுக்கமையவும் நாட்டின் சட்டங்களுக்கு அமையவும் தங்கள் கடமைகளை சரிவரச் செய்கின்றனவா என்பதைக் கண்காணிக்கவே நீதித்துறை இருக்கின்றது. நீதித்துறைக்கு எவரும் முறைப்பாடு செய்யலாம். அவருடைய வழக்கை அது எடுக்கும்.  

பாராளுமன்றம், நிறைவேற்று அங்கம், நீதித்துறை ஆகியன எப்படி கட்டமைக்கப்படவேண்டும் என்றும், அவற்றுக்கான பிரதிநிதிகளும் உத்தியோகத்தர்களும் எப்படி நியமிக்கப்படவேண்டும் என்றும், என்னென்ன விதிகளுக்குக் கீழ் அவை இயங்க வேண்டுமென்றும் எங்களுடைய அரசியல் யாப்பு தெரிவிக்கின்றது. சட்டவாக்க அங்கமாகிய பாராளுமன்றம், தானே இன்னுமொரு சட்டவாக்க அங்கமாகிய உள்ளுராட்சி மன்றங்களைத் தாபிக்கலாம். இதன் மூலம், தனது சட்டவாக்க அதிகாரங்களை வேறு பிராந்திய சட்டவாக்க கட்டமைப்புக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதுவும் ஒரு அரசியல் யாப்பினுள் உள்ளடக்கப்படுகின்றது. இதனை அரசியல் அதிகாரப் பகிர்வு என்று கூறுவோம்.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பானது, அந்நாட்டின் பல சந்ததிகளுக்கு, பல நூறு வருடங்களுக்காவது தொடர்ந்து வழக்கிலிருக்க வேண்டிய பொதுச் சொத்தாகும். எனவே, சகல மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு தூர தரிசனத்துடன் அது இயற்றப்படவேண்டும். அத்துடன், அது மக்கள் ஆணையாகக் கருதப்படுகின்றது. அவர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றது.
மக்கள் எங்களுடைய ஆணை என்பதனால் அதன் ஆக்கத்தில் நாங்கள் எல்லோரும் ஈடுபட்டிருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு அரசியல் யாப்பு எளிய மொழி நடையில் பொது மக்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, தென்னாபிரிக்கா நாட்டில் ஒரு மூன்று வருடங்களுக்கூடாக, மக்கள் சமூகங்கள் பங்கு பற்றி எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து எழுதிய அரசியல் யாப்பினைத்தான் 1996ல் அதன் பாராளுமன்றம் அங்கீகரித்தது. அந்த யாப்பினை வாசித்தப் பார்த்தால் மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரிகின்ற விதத்தில் அது எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு அரசியல் யாப்பினைப் பற்றி நாம் இவ்வளவு தெரிந்து கொண்டோம். இனி எங்கள் நாட்டின் அரசியல் யாப்பின் விசேட அம்சங்களைப் பார்ப்போம்.


இலங்கையின் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பின். . . . . .

1)   நோக்கம்

ஒரு சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைச் சார்ந்த தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை நிலை நிறுத்தத் தேவையான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதுதான் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட எங்கள் அரசியல் யாப்பின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய சுரண்டல் தாராளவாத பொருளாதாரக் கொள்கையானது, தங்கள் உரிமைகளைக் கோர பலமில்லாத தொழிலாளர் வர்க்கத்தினர் இருக்கும்போதும், வெளிநாட்டு மூலதனங்களுக்கான சுதந்திரமான செயற்பாடு வழங்கப்படும்போதும்தான் செயற்படுத்தப்பட முடியும்.  இப்படியானதொரு பொருளாதாரக் கொள்கையை நிலைநிறுத்த வேண்டுமானால் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும்ளூ வெளிநாட்டு மூலதனங்களை இந்நாட்டுக்குத் தருவிப்பதற்கு அதற்கு முன்னெப்போதும் இல்லாத வரிச்சலுகைகளையும் வேறு ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டும்ளூ இக்கொள்கையை முழுதாக நிறைவேற்றுவதற்கு ஒரு அரசாங்கம் பல ஆட்சிக்காலங்கள் நீடித்திருக்க வேண்டும். இவ்வளவும் செய்ய வேண்டுமாயின் ஒரு சர்வாதிகார ஆட்சியே பொருத்தமானது. எனவேதான் இச்சர்வாதிகார ஆட்சியை வலுப்படுத்துமுகமாக சகல அதிகாரங்களும் பொருந்திய நிறைவேற்று ஜனாதிபதி முறையை இந்த யாப்பு அறிமுகப்படுத்திற்று.
இது அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நாளில் அதைச் செய்த ஜே ஆர் ஜெயவர்தனா அவர்கள் 'ஆணைப் பெண்ணாகவும் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர மற்றெல்லாவற்றையும் இந்தப் பதவி செய்ய முடியும்' என்று தனது நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறியிருக்கின்றார். அந்த அளவுக்கு அமைச்சரவையை அமைக்கவும், எந்த அமைச்சினையும், அவை எத்தனை அமைச்சுக்கள் ஆனாலும், தனது நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவும், வரவு செலவுத் திட்டத்தின் இடைக்காலத்தில் எந்த அமைச்சினதும் நிதி வளங்களைத் தனது அமைச்சின் கீழ் கொண்டு வரவும், அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்;படுத்தவும், ஒரு வருடத்தின் பின்பு பாராளுமன்றத்தினைக் கலைக்கவும் தேர்தல்களைக் கூட்டவும், எந்தத் தவறிழைத்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாதிருக்கவும்  எங்கள் ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களும் உண்டு.  

அடுத்து தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை ஒடுக்குவது இந்த யாப்பின் முக்கிய அம்சமாகிற்று. இதற்காக பௌத்தத்தை அரச மதமாக விசேட அந்தஸ்;து கொடுத்தது. பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரங்களை வேறெந்த அமைப்புக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாதென்ற அம்சத்தினை இணைத்ததன் மூலம் தமிழ் மக்களுடனான அதிகாரப் பகிர்வுக்கு இடமே இல்லாமல் செய்யப்பட்டது. எனவே இது ஒரு ஒற்றையாட்சி அரசாக (ருnவையசல ளுவயவந) இயற்றப்பட்டது.

மக்கள் பங்குபற்றி எழுதும் யாப்பு தயாரிப்பது இதன் நோக்கமாக இருக்கவில்லையாதலால், இந்த யாப்பு முற்று முழுதாக ஒரு சட்டத்தரணியின் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் எங்கள் அரசியல் யாப்பை எடுத்து வாசித்துப் பாருங்கள். அதனை விளங்கிக் கொள்ளுவது மிகக் கடினமாக இருக்கும். இப்படியென்றால் எப்படி நாம் பொது மக்கள் அதனை அனுசரித்து நடக்க முடியும்?.... யாப்பின் விதிகள் ஆளும் தரப்பினரால் மீறப்படும்பொழுது தட்டிக் கேட்க முடியும்?

  2) உள்ளடக்கம்

 அத்தியாயம் 1 - இது மக்கள் அரசு இறைமை போன்றவற்றை விளக்குகின்றது. இலங்கை ஒரு ஒற்றையாட்சி முறையெனவும், அதன் கொடி சிங்கக் கொடியெனவும், அதன் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

அத்தியாயம் 2 - இலங்கை அரசு பௌத்த சமயத்திற்கான முதன்மை இடம் கொடுக்க வேண்டுமெனவும், பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் கடப்பாடு கொண்டதெனவும், அதே சமயம் பிற மதங்களைப் பின்பற்றுவதற்கான சகல உரிமைகளையும் ஏனைய மதப் பிரிவினருக்கு அளித்திருக்கின்றதெனவும் இந்த அத்தியாயம் கூறுகிறது.

அத்தியாயம் 3 - இதன் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளுக்குமான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிந்திப்பதற்கும், மனச்சாட்சிப்படி நடப்பதற்கும், விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்குமான உரிமைகள்ளூ சித்திரவதை செய்யப்படுவதிலிருந்து உரிமைளூ சமத்துவத்திற்கான உரிமைளூ எழுந்தமானமாக கைது செய்யப்படுவதிலிருந்தும் தடுத்து வைக்கப்படுவதிலிருந்தும் தண்டனை கொடுக்கப்படுவதிலிருந்தும் விடுதலைளூ நடவடிக்கை செய்யப்பட்ட காலத்திலிருந்து பிந்திய காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களின் பேரில் தண்டனையாவதற்கெதிரான பாதுகாப்பு, போன்றவை இந்த அத்தியாயத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 4 - இது மொழியுரிமைகளைப் பற்றி விளக்குகின்றது. சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகள் என்றும் ஆங்கிலம் தொடர்பு மொழி என்றும் இங்கு கூறப்படுகின்றது. அதேபோல் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகள் எனக் கூறுகிறது. அத்துடன் பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் வழங்க வேண்டிய மொழிகள் பற்றியும் கல்வி கற்க வேண்டிய மொழி பற்றியும் நிர்வாக மொழிகள் பற்றியும் சட்டங்கள் ஆக்கப்படவேண்டிய மொழி பற்றியும் இது கூறுகின்றது.

அத்தியாயம் 5 - இது பிரஜாவுரிமை பற்றிய அத்தியாயமாகும். இலங்கையின் பிரஜையாக இருக்கத் தகுதிகள் என்ன என்று இங்கு ஆராயப்பட்டுள்ளது.

அத்தியாயம் 6 - இந்த அத்தியாயம் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் சட்டங்களை ஆக்குவதற்கான வழிகாட்டல் கொள்கைகளை விளக்குகின்றது.

அத்தியாயம் 7 - இது ஜனாதிபதியின் பதவி பற்றிய சகல நிபந்தனைகளையும் எடுத்துக் கூறுகின்றது. இவற்றில், அவர் பதவி வகிக்ககின்ற காலம், அவர் தெரிவு செய்யப்படும் முறை அவருடைய அதிகாரங்கள், அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமுடியாத விதத்தில் அவர் பாதுகாக்கப்பட்டிருக்கும் முறைகள், யாவையும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 8 - இந்த அத்தியாயம் அமைச்சரவையைப் பற்றியது. மேலே கூறியதுபோல அமைச்சரவையை கூட்டும் நடைமுறைகள், அதன் அதிகாரங்கள் போன்றன இதில் விளக்கப்படுகின்றன.

அத்தியாயம் 9 - இது அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவது, மாற்றலாக்கப்படுவது, தண்டிக்கப்படுவது, பற்றி விளக்கும் அத்தியாயமாகும்.

அத்தியாயம் 10 11 12 - இவை பாராளுமன்றத்தின் கட்டமைப்பைப் பற்றியும் நடைமுறைகள் பற்றியும் அரசியல் யாப்பு மாற்றம் வேண்டினால் அதை நிறைவேற்றும் முறை பற்றியும் எடுத்துக் கூறுகின்றன.

அத்தியாயம் 13 - இந்த அத்தியாயம் மக்கள் அபிப்பிராயத்தைப் பெறும் கருத்துக் கணிப்புத் தேர்தல்களைப் பற்றியதாகும். இவை எந்த சந்தர்ப்பங்களில் எப்படி நடத்தப்படலாம் என்று கூறுகின்றது.

அத்தியாயம் 14 - தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய முறைகளை விபரிக்கின்றது.

அத்தியாயம் 15 - நீதித்துறையின் சகல கட்டமைப்புக்களையும் விபரிக்கின்றது.

அத்தியாயம் 16 - மேல் நீதிமன்றங்கள் நடத்தப்படவேண்டிய முறைகளை விளக்குகின்றது. வழக்குகள் கேட்கப்படும் முறை, அவை பதியப்படும் முறை, எல்லாமே இங்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 17 - அரச நிதிகள் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படவேண்டும் என்று இது கூறுகின்றது.

அத்தியாயம் 18 - பொதுப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் அதற்கு யார் பொறுப்பாவார் என்பது பற்றியும் இது கூறுகின்றது.

மேலே கூறியவற்றைத் தவிர சர்வதேச ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் முறைகள், பொதுவான விடயங்கள் போன்றவற்றை அடுத்து வரும் இரண்டு அத்தியாயங்கள் விளக்குகின்றன.

3) யாப்புச் சட்டத் திருத்தங்கள்

நமது நாட்டின் அரசியல் யாப்பு 1978ம் ஆண்டு முதல் இன்றுவரை 17 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் இருக்கின்றது. 30 வருடங்களுக்குள் இவ்வளவு அதிகமான திருத்தங்களுக்குள்ளாகியது அதன் குறுகிய கால நோக்கங்களையே சுட்டிக் காட்டுகிறது என்று சொல்லலாம். ஒரு தூரதரிசனத்தோடு மக்கள் எல்லோருடைய நல்வாழ்வுக்காக இது செய்யப்பட்டிருப்பின் இவ்வளவு திருத்தங்கள் இவ்வளவு வேகமாக ஏற்படுத்தவேண்டிய தேவை இருந்திருக்காதல்லவா? தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில், இச்சட்டத் திருத்தங்களில் முக்கியமானவை மூன்று எனக் கூறலாம். அவையாவன, 6ம் திருத்தச் சட்டம், 13வது திருத்தச் சட்டம,; 17வது திருத்தச்சட்டம் என்பனவாகும்.

6ம் திருத்தச் சட்டம் 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கெதிரான மிகமோசமான கலவரங்கள் நடந்ததற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட திருத்தமாகும். பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதே இதுவாகும். இதன்படி சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் அமரும்போது தாம் நாட்டைப் பிரிக்க முயலமாட்டோமென சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளக் கேட்கப்படுவர்.

13வது திருத்தச் சட்டமானது 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தமாகும். இதன்கீழ் மேலதிக சட்டவாக்க அமைப்புக்களாக பிராந்திய கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டனளூ அவை முறையே மாகாணசபைகளும் அவற்றின்கீழ் உள்ளுராட்சி மன்றங்களும் ஆகும். அவற்றின் கட்டமைப்புக்களும் நடைமுறைகளும் எமது அரசியல் யாப்பில் அத்தியாயம் 17 (அ) பிரிவில் எழுதப்பட்டிருக்கின்றன. (வாசிப்பு இல 9இனைப் பார்க்க)

17வது திருத்தச் சட்டம் 2002ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றமாகும். இதன்கீழ் அரசியல் தலையீடு இல்லாமல் அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை ஆற்றும் வகையில் சுயாதீனமான ஆணைக்குழுக்களின் கீழ் அவர்கள் நிர்வகிக்கப்படுவதைப் பற்றிக் கூறுகின்றது. இதன்படி தேர்தல் ஆணைக்குழு, நீதித்துறை ஆணைக்குழு, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஆகியன நியமிக்கப்படவேண்டும் என இச்சட்டம் விதிக்கின்றது. (வாசிப்பு இல. 3இனைப் பார்க்க)

அரசியல் யாப்பு மாற்றத்திற்கான இயக்கம்

எங்களது 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு எந்த நிலைமைகளின் கீழ் எந்தெந்த நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது எனக் கண்டோம். பிரதானமாக நாம் சிந்திக்க வேண்டியது என்னவெனில், நிறைவேற்று ஜனாதிபதி முறையினாலே இந்த நாட்டில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 1978ம் ஆண்டுக்குப் பிற்பாடு வந்த ஒவ்வொரு ஜனாதிபதியும் தனக்கு முந்தைய ஜனாதிபதியிலும்விட ஊழல் மிக்கவராக, தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே ஆட்சி நடத்துபவராகத்தான் இருந்திருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவானவர் எமது அரசியல் யாப்புச் சட்டங்களையே மீறுபவராக மாறிவிட்டார். அரசியல் யாப்புச் சட்டத்தின்படி  ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென்பதனால் உயர் நீதிமன்றமே ஒன்றும் சொல்லாமல் இருக்கின்றது.

அடுத்து, கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள பிரச்சினை தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கென அதிகாரப் பரவலாக்கலைக் கோரும் இனப்பிரச்சினையாகும். எமது யாப்பின் ஒற்றையாட்சித் தன்மையை முற்றாக மாற்றாவிடில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியாது.

மூன்றாவதாக, எங்கள் தேர்தல் முறைமைகள் மாறவேண்டும். இன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கின்ற அடிப்படையிலேயே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி, எந்தவொரு குழுவும் மாவட்ட அடிப்படையில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்தத் தேவையினால் சிறிய கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் போய் விட்டது. பெரிய இரு பிரதான கட்சிகள் மட்டும்தான் நாட்டில் செல்வாக்கு செலுத்தலாம் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. இது ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கும் நிலையாகும்.

எனவே எமது அரசியல் யாப்பினை மாற்றுவதற்காக பல சமூக செயலாளிகள் இப்பொழுது முயன்று வருகின்றனர். யாரும் இலேசில் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்தானே. நிறைவேற்று ஜனாதிபதி முறை இலேசில் விட்டுக் கொடுக்க முடியாத அவ்வகையான அதிகாரமாகும். அத்துடன், அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவையாகும். தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும். ஆப்படியானால் யாப்பு மாற்றம் நிகழுமா என்பதே பெரிய கேள்வியாகும்.

இங்குதான் மக்களின் பங்கு வெளிவருகின்றது. மக்கள் ஒன்றிணைந்து திரண்டு எழுந்து வந்தால் நடைபெற முடியாதது ஒன்றுமே இல்லை எனலாம். நாங்கள் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களை எழுதியும் நேரில் சந்தித்து விண்ணப்பித்தும் வரவேண்டும். ஜனாதிபதிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பத்திரிகைகளுக்கு உங்கள் கருத்துக்களை எழுதவேண்டும். உங்கள் உங்கள் ஊர்களில் பொதுக்கூட்டங்கள்  போட்டு இதற்கு பரந்துபட்ட மக்கள் ஆதரவினைத் திரட்ட வேண்டும். தொடர்ந்தும் தொடர்ந்தும் நாங்கள் தேய்த்துத் தேய்த்துக்கொண்டுவர கல்லுத் தானே கரைய ஆரம்பிக்குமல்லவா?

கலந்துரையாடலுக்கான வழிகாட்டிகள்:

எமது அரசியல் யாப்பினை மேலும் விளங்கிக் கொள்வதற்கு நீங்கள் வேறென்ன மேலதிக நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று கூறுக.


Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம் 

No comments:

Post a Comment