Search This Blog

Wednesday, August 15, 2012

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது திருத்தச் சட்டமும் நிலைபேறான சமாதானமும்



அறிமுகம் 
இலங்கையில் வாழும் சகல இனங்களும் குழுமங்களும் பங்குகொள்ளும் ஜனநாயகத் தன்மை பொருந்திய ஒரு அரசினைத் தாபிப்பதன் மூலமே நிலைபேறான சமாதானத்தை நாங்கள் கட்டியெழுப்பலாம். அப்படியானதொரு அரசைப் பற்றிய தெளிவான தரிசனத்துடன் எங்கள் மக்கள் ஒரு நீண்ட கால நோக்கில் குறி தவறாது வேலை செய்வதனால் மட்டுமே அதை நாங்கள் அடையலாம். இந்தத் தரிசனம், சகல மக்களையும்; எந்தவித பேதமுமின்றிப் பரிபாலனம் செய்யும்; ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் உருவம் பற்றியும், அது இயற்றும் அரசியல் கட்டமைப்புக்களின் பண்பாடு பற்றியும், எங்கள் நீதித்துறை பற்றியும் இருக்கவேண்டும்.
அரச நிர்வாகத்தில் கட்சி அரசியலைக் களைந்து அது நடுநிலையாக சகல மக்களுக்கும் சேவையாற்றும் வகையில் செய்வதே மேற்கூறிய நிலையை அடைவதற்கான முதல் படியாகும். எங்கள் நாட்டில் 1972ம் ஆண்டுதான் அரச நிர்வாகம் அமைச்சரவைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு அரச உத்தியோகத்தர்களின் சகல நடவடிக்கைகளிலும் அவர்களின் நியமனம், மாற்றல்களிலும் அரசியல்வாதிகள், குறிப்பாக அமைச்சர்கள், தலையிடும் நிலைதான். இதன் விளைவாக எங்கள் அரச துறையில், ஊழலும், தகுதியற்றவர்களின் நியமனங்களும் அதன் காரணமான திறன் விரயமும், மற்றும் வேலை வெளியீடு குறைந்த தன்மையும் அதிகரிக்கலாயின. இப்படி அடிப்படைப் பிரச்சினை இருக்கும்போது, சும்மா நீதியான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்றோ, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டுமென்றோ, ஊழல் ஒழியவேண்டுமென்றோ, எவ்வளவு பேசியும் பயனில்லை. இக்குற்றங்களுக்கெதிராக வழக்குப் போட்டு நீதி மன்றத்திற்குச் சென்றாலோ அங்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள்தான் விசாரணைக்கு அமர்ந்திருக்கிறார்கள். அநியாயம் நடப்பது மட்டுமல்ல, அதனைத் தட்டிக் கேட்பதற்கும் இன்று எங்கள் நாட்டில் வழியில்லாமல் போய்விட்டது.    
இதற்காகத்தான் எங்களது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 17வது திருத்தம் 2004ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருத்தம் தற்போதைய அரசு கட்டமைப்பில் ஜனாதிபதிப் பதவியினால் அனுபவிக்கப்படும் அளவு கடந்த அதிகாரங்களையும் அமைச்சரவையின் கூடுதல் அதிகாரங்களையும் மட்டுப்படுத்தி சமநிலைப்படுத்த எத்தனித்த ஒரு சிறிய முயற்சியாகும். அது, அரச நிர்வாகமானது அமைச்சரவையின் கீழிருந்து (ஜனாதிபதியின் கீழிருந்தும் என்றும் வாசிக்கலாம்) எடுக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட சுயாதீன 'பொதுச் சேவைகள் ஆணைக்குழு', 'பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு', 'நீதித்துறை ஆணைக்குழு' என்பனவற்றின் கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்று பணித்தது. அரசியல்வாதிகளின் பொம்மைகளாக இருக்காத அரச நிர்வாகிகள் செயற்படுவதற்கான தளம் அமைக்கப்படவேண்டுமென்று இறுதி நோக்கம் கொண்டது.
ஆனால், எங்களது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அம்சமாக இருந்துள்ளபோதிலும், 17வது திருத்தத்தின் அமுலாக்கம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அதனை செயற்படுத்துவதற்கு எங்கள் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றது. இதனால், 17வது திருத்தச் சட்டம் என்றால் என்ன என்பதை நாமெல்லோரும் அறிவது முக்கியமாகின்றது.   
17வது திருத்தம் என்ன கொண்டிருக்கின்றது?; 
 அரச இயந்திரத்தின் முக்கிய பதவிகளின் நியமனங்களைத் தீர்மானிப்பதற்காக அமைக்கப்படும் அரசியலமைப்புச் சபைதான் 17வது திருத்தத்தின் பிரதான அம்சமாகும். இதன் அங்கத்துவம் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் சகல கட்சிகளினாலும் தீர்மானிக்கப்படும். அரசியலமைப்புச்சபை எடுக்கும் தீர்மானங்களெல்லாமே கலந்துரையாடல் மூலமும் முற்றான இணக்கப்பாட்டுடனும் எடுக்கப்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானங்களை ஜனாதிபதி செயற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, குறிப்பிடப்பட்ட வௌ;வேறு ஆணைக்குழுக்களின் பொறுப்புக்கள் என்ன என்பதையும் இது வரையறுக்கின்றது. 
அ. அரசியலமைப்புச் சபை
பிரதமமந்திரி, பாராளுமன்ற சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒருவர், பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் தரும் சிபாரிசுகளின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர், பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் இல்லாத ஏனைய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சுயேச்சை உறுப்பினர்களினாலும் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒருவர், என இவர்களே அரசியலமைப்புச் சபையின் அங்கத்தவர்களாவார்கள்.
பின்வரும் வகையான நியமனங்கள், ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டு அரசியலமைப்புச் சபையின் முழு அங்கீகாரத்துடன்தான் மேற்கொள்ளப்படவேண்டும் என இத்திருத்தச் சட்டம் கோருகின்றது: 
1. தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் ஊழல்களை ஆராயும் நிரந்த ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லைகள் நிர்ணயிக்கும் ஆணைக்குழு போன்ற சகல ஆணைக்குழுக்களினதும் அங்கத்தவர்கள் 
2. உயர் நீதிபதியும் உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் நீதிபதிகளும், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தவிர்ந்த அங்கத்தவர்கள்
3. சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், ஐஜிபி (பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்), பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம்.
ஆ. பொதுச்சேவைகள் ஆணைக்குழு
1. இது 9 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் குறைந்தது 3 பேர்கள் அரச நிர்வாகத் துறையில் குறைந்த பட்சம் 15 வருடங்கள் அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். இது, பாராளுமன்றத்திற்கே பொறுப்புக் கூற வேண்டியது. வருடாவருடம் தனது நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும். 
இவ்வாணைக்குழுவின் பொறுப்புக்களாவன,
2. திணைக்களத் தலைமைகள் தவிர்ந்த சகல அரச உத்தியோகத்தர்களினதும் நியமனங்கள், மாற்றல்கள், பதவியேற்றங்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், வேலை நீக்கங்கள் அனைத்தும் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். திணைக்கள அதியுயர் அதிகாரிகள் தொடர்பான தீர்மானங்களெல்லாம் ஆணைக்குழுவின் ஆலோசனையின்பேரில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படும்.
3. ஒவ்வொரு மாகாணத்திற்கும் இவ்வகையான மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு இருந்து மாகாணசபையின் அதிகாரத்திற்குட்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும். அத்துடன் மாகாண சபைகளுக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்.
ஆயினும், அரச உத்தியோகத்தரின் பணிகள் தொடர்பான சகல கொள்கைகளும் அமைச்சரவையினால் வரையப்படவேண்டும் என்பதைக் கவனிக்க.
ஆ. தேர்தல் ஆணைக்குழு
இதில் அரசியலமைப்புச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் 5 அங்கத்தவர்கள் பதவி வகிப்பர். இவர்கள் நிர்வாகத்துறையிலோ கல்வித் துறையிலோ அல்லது வேறெந்தத் துறையிலுமோ பெயர் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களையும் வாக்குக்கணிப்புக்களையும் நடத்துவதே இவ்வாணைக்குழுவின் நோக்கமாகும். இது பாராளுமன்றத்திற்கு மட்டுமே பொறுப்புக் கூறும் அதிகாரங்கள் கொண்டது. வருடாவருடம் தனது நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும். 
இதன் பொறுப்புக்களாவன,
1. சகல வகைத் தேர்தல்களையும் நடத்துதல்
2. வாக்காளர் பதிவேடுகளைத் தயாரித்தலும் பேணுதலும்
3. தேர்தல்களின்போதான சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்தல், அதற்கான ஒத்துழைப்பினை சகல படையினரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளல்
4. தேர்தல்களின்போது அரசுக்குச் சொந்தமான எந்த அசையும் அசையாச் சொத்துக்களையும் தேர்தல் பிரச்சார விடயங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்
5. தேர்தல் நடவடிக்கை தொடர்பான எந்த நெறிப்படுத்தலையும் எந்த ஊடகங்களினூடாகவும் அறிவித்தல்
6. பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தேவைகளைத் தெரிவித்தல். தேர்தல்களின்போது தேர்தல் ஆணைக்குழுவின் நெறிப்படுத்தலின்கீழ் பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ் உத்தியோகத்தர்களும்  இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு விதிக்கும் கடமைகளைச் செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கெதிராக எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பதும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
7. தேர்தல்களை முறையாக நடத்துவதற்கு ஆயுதப்படையினரின் சேவைகளையும் இவ்வாணைக்குழு கோரலாம். இதனை ஜனாதிபதிக்கு விடும் சிபாரிசு மூலம் செய்யலாம்.
இ. நீதிச் சேவைகள் ஆணைக்குழு
இது உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசரையும் வேறு இரு நீதிபதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். பிரதம நீதியரசர் இதற்கு தவிசாளராக இயங்குவார்.
இதன் பொறுப்புக்களாவன, 
1. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாற்றல் விவகாரங்கள்
2. நீதிச் சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்கள், மாற்றல்கள், பதவியுயர்வுகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், வேலை நீக்கங்கள் போன்றவற்றைத் தீர்மானித்தல்
3. இவர்கள் எல்லோருக்குமான பயிற்சி, திறனாய்வு போன்ற விடயங்களைத் தீர்மானித்தல் 
 ஈ. பொலிஸ் சேவைகள்; ஆணைக்குழு
இது 7 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். பொதுச் சேவைகள் ஆணைக்குழுவைப்போலவே இவ்வாணைக்குழுவின் அதிகாரங்களும் மாகாண பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரம் தொடர்பாக மட்டுப்படுத்தப்படும். இதன் பொறுப்புக்களாவன,
1. ஐஜிபியுடன் ஆலோசித்து, சகல பொலிஸ் உத்தியோகத்தினரதும் நியமனங்கள், பதவியுயர்வுகள், மாற்றல்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், மற்றும் வேலை நீக்கங்கள் போன்றனவற்றைச் செயற்படுத்துதல்
2. எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரைப் பற்றி பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுத்தல்
3. பொலிஸ் உத்தியோகத்தர்களின் பயிற்சி, திறன் விருத்தி போனறன தொடர்பான நடவடிக்கைகள் எடுத்தல் 
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. எங்களுக்கு சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழுக்களும், சுதந்திரமாக இயங்கக்கூடிய அரச உத்தியோகத்தர்களும் ஏன் தேவை? பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்து பார்க்க. அதை வைத்து உங்கள் விளக்கங்களை குழுவுக்கு முன்வைக்கலாம்.

சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழுவினது அல்லது பொது உத்தியோகத்தரது பெயர் இதனால் அல்லது இவரால் ஏற்படும் பயன்கள்

தேர்தல் ஆணைக்குழு



பொதுச்சேவைகள் ஆணைக்குழு



தேசிய பொலிஸ் ஆணைக்குழு.



இலங்iகை மனித உரிமைகள் ஆணைக்குழு.



இலஞ்சம், ஊழலை விசாரணை செய்யும் நிரந்தர ஆணைக்குழு



நிதி ஆணைக்குழு



எல்லைகள் நிர்ணயிக்கும் ஆணைக்குழு



சட்டமா அதிபர்

கணக்காய்வாளர் நாயகம்

ஐஜிபி

பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர் 

பாராளுமன்ற செயலாளர் நாயகம்
2. ஏன் தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சரவையும், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக நடக்கவேண்டியிருந்தும்கூட, 17வது திருத்தச் சட்டத்தினை அமுலாக்கத் தயங்குகின்றனர் என்று நினைக்கின்றீர்கள்?

3. 17வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா? அப்படி இருக்கின்றதாயின் அது எப்படித் தொடர்பாகின்றது என்பதை விளக்குக.

4. 17வது திருத்தச் சட்டம் செயற்படுத்தப்படுவது நன்மையாயின், அதை இந்த அரசாங்கம் செயற்படுத்த வைப்பதற்கு என்ன செய்யலாம்?

5. இது தொடர்பாக நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடிய  நடவடிக்கைகளை முதலிலிருந்து முன்னுரிமைப்படுத்தி எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி எடுத்துக்கொள்ளுக.


6. ஆரம்பிக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை உங்களில் யார் எப்போது செய்து முடிக்கப்போகிறீர்கள்? ஓவ்வொருவரும் உங்கள் சொந்த நடவடிக்கைத் திட்டத்தினைப் போடுங்கள். அதை ஒவ்வொருவராகவோ பலராகவோ செய்து முடிக்கலாம். உங்கள் அடுத்த வாசகர் வட்டக் கலந்துரையாடலில், நீங்கள் சொன்ன விடயங்களெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறீர்களா என்று நிறுவவேண்டும் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.



முடிவுரை
'மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுத்தலில் பங்கேற்க ஜனநாயக நடைமுறை வேண்டும். ஆனால் அந்த ஜனநாயக நடைமுறையைப் பேணுவதற்கு மக்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும்..'       
இதுவரை நீங்கள் வாசித்த விடயங்களிலிருந்து அறிந்து கொண்டதை சுருக்கமாகக் கூறினால், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், பெற்றார், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கணக்காய்வாளர்கள் போன்ற இத்தனை பேர்களும் சேர்ந்து செயற்பட்டால்தான் ஜனநாயகத்தைப் பேணலாம். பார்க்கப் போனால்,  இந்த மக்கள் குழுவினர் எங்கள் சமூகம் முழுவதையும் உள்ளடக்குகின்றனர் அல்லவா? 
ஏதைப் பெறுவதற்கும் நாம் ஒரு விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பரீட்சையில் திறமையான சித்தி கிடைப்பதற்கு இரவும் பகலும் கடுமையாகப் படிக்க வேண்டுவதே நாம் கொடுக்கும் விலையாகும். அதே போல் நிறையப் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கடும் உழைப்பை விலையாகக் கொடுக்கின்றோம். இதேபோலத்தான் சுதந்திர ஜனநாயகத்தை நாம் பெறுவதற்குக் கொடுக்கவேண்டிய விலை எந்நேரமும் விழிப்பாக இருப்பதே என்று ஒரு அறிஞர் கூறினார். எனவே பொதுவில் நடப்பதை அறிய முயற்சி செய்யாது, ஒன்றும் தெரியாத அசட்டு மனிதர்களாக நாம் வாழும்போது எங்கள் வாழ்க்கையையே நாமே பாழாக்குகின்றோம்.   




கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. குழு அங்கத்தவர்களெல்லோரும் 'நியாயம்', 'அநியாயம்', 'மனித மாண்பு' இவையெல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தந்து அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் தெளிவாக்கிக்கொள்க.
2. எங்கள் நாட்டில் சமீப காலங்களில் மனித உரிமைகள் பேணப்பட்டனவா இல்லையா என்பதை உங்கள் அனுபவங்களைக் கொண்டு விளக்குங்கள். இதில் நீங்கள் கண்டது, பிறர் சொல்லக் கேட்டது, பத்திரிகையில் வாசித்தது, என்பவற்றை அடக்கலாம். நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு உரிமையும் மனித உரிமைகளின் எந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

3. உங்களது கிராமத்தவர்களினால் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் உண்டா?


4. 'ஜனநாயகம்', மனித உரிமைகள்', 'சட்டங்கள்', இவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்ன? 

5. ஏங்களது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்படிப் பாதுகாக்கக்படுகின்றது? எப்படி மீறப்படுகின்றது?


6. ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?
  
7. ஏந்த நடவடிக்கையோடு ஆரம்பிப்பீர் என்பதை ஒவ்வொருவரும் விளக்கி அதற்கான உபாயங்களைக் கலந்துரையாடி குறித்துக் கொள்க.

No comments:

Post a Comment