Search This Blog

Wednesday, July 18, 2012

திருஞானசம்பந்தர்



*****************
தலையே, நீ வணங்காய்!
தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை
தலையே, நீ வணங்காய்!

கண்காள், காண்மின்களோ!
கடல் நஞ்சு உண்ட கண்டன்தன்னை,
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான்தன்னை,
கண்காள், காண்மின்களோ!

செவிகாள், கேண்மின்களோ!
சிவன், எம் இறை, செம்பவள எரி போல் மேனிப் பிரான்,
திறம் எப்போதும்,
செவிகாள், கேண்மினேகளோ!

மூக்கே, நீ முரலாய்!
முதுகாடு உறை முக்கணனை,
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை,
மூக்கே, நீ முரலாய்!

வாயே, வாழ்த்துகண்டாய்!
மதயானை உரி போர்த்து,
பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான்தன்னை
வாயே, வாழ்த்துகண்டாய்!

நெஞ்சே, நீ நினையாய்!
நிமிர்புன்சடை நின்மலனை,
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை,
நெஞ்சே, நீ நினையாய்!

கைகாள், கூப்பித் தொழீர்!
கடிமாமலர் தூவி நின்று,
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை
கைகாள், கூப்பித் தொழீர்!

ஆக்கையால் பயன் என்?
அரன் கோயில் வலம்வந்து,
பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத
இவ் ஆக்கையால் பயன் என்?

கால்களால் பயன் என்?
உயிர் கொண்டுபோம் பொழுது,
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களால் பயன் என்?

உற்றார் ஆர் உளரோ?
உயிர் கொண்டு போம்பொழுது,
குற்றாலத்து உறை கூத்தன்அல்லால்,
நமக்கு உற்றார் ஆர் உளரோ?

இறுமாந்து இருப்பன்கொலோ?
ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டு,
சிறுமான் ஏந்திதன் சேவடிக்கீழ்ச் சென்று,
அங்கு இறுமாந்து இருப்பன்கொலோ?

தேடிக் கண்டுகொண்டேன்!
திருமாலொடு நான்முகனும்
தேடித் தேட ஒணாத் தேவனை, என் உளே,
தேடிக் கண்டுகொண்டேன்!

No comments:

Post a Comment