Search This Blog

Thursday, December 29, 2011

திரை பார்த்தல்


ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த  பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது?

யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ? அல்லது ஒரு மலையை எட்டு மணி நேரம் இடைவிடாமல் பார்த்து கொண்டேயிருக்க முடிகிறதா, கொட்டும் மழையை கூட பத்து நிமிசங்களுக்கு மேல் ஆர்வமாக யாரும் பார்ப்பதேயில்லை. உலகின் பேரழகான அதிசயங்கள், பூக்களின் பள்ளத்தாக்குகள், பசுமைவெளிகள் கூட ஐந்து நிமிசத்தில் அலுத்து போய்விடுகிறது. குழந்தைகளை கூட இன்று எவரும் இப்படி உற்று பார்த்து கொண்டேயிருந்ததேயில்லை.  பின் எப்படி கணிணி மட்டும் இப்படி ஈர்க்கிறது.

ஒரு செல்போன் விளம்பரம் ஒன்றில் காதில் போனை வைத்தபடியே நாளெல்லாம் பேசிப்பேசி தலை ஒருச்சாய்ந்து போன மனிதனை காட்டுவார்கள். அவன்  எங்கே போனாலும் தலையை சாய்த்துக் கொண்டே பேசுவான். கணிணி முன் நாள் எல்லாம் இருப்பவர்கள் கிட்டதட்ட அப்படித் தானிருக்கிறோம்.

சில வேளைகளில் இந்த கணிணித் திரை ஒரு மாபெரும் கடற்கரை என்று தோன்றும். யார் யாரோ எதற்காகவே கடந்து போகிறார்கள். அமர்ந்திருக்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ரகசியமாக திட்டமிடுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். குற்றம் புரிகிறார்கள். தியானம் செய்கிறார்கள். அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். அத்தனையும் ஒரே இடத்தில் சாத்தியமாகிறது.

சில வேளைகளில் இந்தத் திரை  ஆசைகளின் ம்யூசியம் ஒன்றிற்குள் நுழைந்துவிட்டதை போல இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆசைகள். கனவுகள், ரகசியங்கள், அதை அவரவர் அறைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒளித்து வைத்து கண்டுபிடிக்க சொல்கிறார்கள். உலகின் ஆசைகள் ஒட்டுமொத்தமாக கணிணி வழியாகவே ஒருங்கிணைக்கபடுகின்றன. காட்சிபடுத்தபடுகின்றன.

சில நேரம் கணிணியின் திரை அழகான பெண்ணை பின்தொடர்வதை போல நம்மை மீறிய ஈர்ப்பில் அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. பின்னால் போவதன் மயக்கமே நம்மை கூட்டிப்போகிறது.

அரிதான வேளைகளில் அறியாத அடர்ந்த கானகம் ஒன்றினுள் செல்வதை போல பயம், வசீகரம் குழப்பம் திரும்பி போக முடியாதோ என்ற உள்ளுணர்வு, அதை தாண்டி காணும் வியப்பு, அறியாத மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், என்று வேறு உலகம் திறந்து கொள்கிறது.

கொலம்பஸ் நாடுகளை தேடி கடலில்  அலைந்து திரிந்த பயணத்தை விடவும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே உலகை தேடும் பயணம் பெரியது தானோ.

ஆனாலும் திரையை பார்த்து கொண்டிருப்பது புறஉலகை விட்டு நம்மை துண்டிக்கிறது. தனிமைப்படுத்துகிறது. உதடுகளை இறுக்கிபூட்டிவிடுகிறது. தனக்கு தானே பேசிக் கொள்ளும் மனிதனை போலாக்கி வைத்திருக்கிறது.

ஏன் கணிணி திரை மட்டும் இவ்வளவு வசீகரமாக இருக்கிறது. சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து இரண்டு காட்சிகளுக்கு மேல் பார்க்க முடிந்ததில்லை. காதலிக்கும் பெண்ணின் முகத்தை கூட ஒருவன் இவ்வளவு ஆசையாக அருகாமையில் நெருக்கமாக பார்த்து கொண்டேயிருப்பானா என்று சந்தேகமாகவே இருக்கிறது.

திரை பார்த்தல் என்ற இந்த கணிணி செயல்பாடு ஒரு தொற்றுபோய்போல உடனே பரவிவிடுகிறது. மீள்வது எளிதானதேயில்லை.

திரை மெல்ல நம் உடலின் செயல்பாட்டினை ஒடுக்கத் துவங்குகிறது. உடலை விட மனதே நம்மை இயக்குகிறது என்று நம்ப வைக்கிறது. ஒரே நாற்காலி எதிரே கணிணியின் திரை. அது பேசுகிறது. பாடுகிறது. மௌனமாகிறது. பேசவைக்கிறது. கோபபட வைக்கிறது. காதலிக்க செய்கிறது. திறமையை வெளிப்பட செய்கிறது. பசி மறந்து தாகம் மறந்து இடையிடையே அழைக்கும் தொலைபேசி குரல்களை மட்டுமே அனுமதித்து அது நம்மை முற்றாக கவ்விக் கொண்டிருக்கிறது. யோசிக்கையில் உலகில் வேறு எந்த பழக்கமும் இவ்வளவு தீவிரமாக மனிதனை பற்றிக் கொண்டதில்லை.

சிறுவயதில் விளையாட்டுவீரர்கள் பந்தோடு நடந்து போவதையும், பந்தை அருகாமையில் வைத்து கொண்டு உறங்குவதையும் பார்த்திருக்கிறேன். அப்போது வேடிக்கையாக இருக்கும் அவர்கள் பந்தோடு பேசுவார்கள். பந்தை கோவித்து கொள்வார்கள். அந்த மனநிலையை விட முற்றிய மனநிலை கணிணி திரை உருவாக்குகிறது. 

கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து அழுபவர்களை கண்டிருக்கிறேன். லேப்டாப்பிற்கு பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் இருக்கிறார்கள். வயதை மறந்து கணிணி அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஒரு மாபெரும் தியான மண்டபத்தில் அமர்ந்திருப்பதை போல யாவரும் அவரவர் கணிணி முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். எதையோ தேடிக் கொண்டும் பகிர்ந்து கொண்டுமிருக்கிறார்கள். அல்லது மாபெரும் சந்தை கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்டதை போன்றுமிருக்கிறது.

நம் காலத்தின் மாபெரும் ஒற்றை செயல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பது தானோ.

புத்தகங்கள் இப்படி வசீகரமானதில்லை. அது ஒவ்வொருவரையும் ஒருவிதமாகவே அணுகுகிறது. நெருக்கம் கொள்கிறது. இசை வசீகரமானது தான் ஆனால் அதன் முன்னே யாவரும் ஒன்று போல ரசனை கொள்வதில்லை. வேறு எந்த கலைகள் விஞ்ஞான உபகரணத்தை விட கணிணியின் திரை வசீகரமாக இருக்கிறது. இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்கிறது.

தினமும் கம்ப்யூட்டரில் நான் என்ன பார்க்கிறேன் என்ன செய்கிறேன் என்று ஒரு குறிப்பேட்டினை எழுதலாம்  என்று முயற்சித்தேன். ஒரு மாத காலத்தில் அது ஒரு மாபெரும் நாவல் அளவு வளர்ந்துவிட்டது. பயமாக இருந்தது. சட்டென சில நாட்கள் கணிணி பக்கமே போக கூடாது என்று அதை அணைத்தே வைத்திருந்தேன். பழையபடி பேனா காகிதங்கள், நோட்டுகள் என்று திரும்பினேன். ஆனால் ஏதோ உடல்நலமற்று போய் நோயாளியான ஒருவன் இவ்வளவு தான் தன்னால் முடியும் என்று உணர்ந்ததை போல மனது மிகவும் சோர்வு கொண்டதோடு என்றோ கைவிட்ட பழக்கத்தை மறுபடி செய்து பார்ப்பதை போலவும் உணர செய்தது.

சினிமாவில் எழுவதால் இன்றும் பேடு பேப்பர் பேனா என்ற பழக்கமிருக்கிறது. இல்லாவிட்டால் அது என்னைவிட்டு பேனாவில் எழுதுவது முழுமையாக போயிருக்கும். ஆனால் பேனாவில் எழுதும் போது ஏதோ சிறுவயது செயலை செய்வது போலதான் தோன்றுகிறது. எடிட் செய்யவும் கதை சொல்வதன் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கி பார்க்கவும் முடிவதில்லை.

கம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் மாய விளையாட்டை நாள் எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பவர்களை அறிவேன். அவர்கள் திரையை வென்றுவிட தனது அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். தோற்றுபோகையில் வருத்தம் கொள்கிறார்கள். வெற்றி காண்கையில் கொண்டாடுகிறார்கள். வெளிஉலகின் பிரம்மாண்டம். வசீகரம், பிரச்சனைகள், சந்தோஷங்கள் என எதுவும் இன்று முக்கியமாகயில்லை..  நமது அடையாளங்கள் இல்லாமல் நாம் உலவவும் அறிந்து கொள்ளவும் கணிணி மட்டுமே அனுமதிப்பது தான் இதன் காரணமா?

கணிணி திரை உருவாக்கும் முக்கிய பிரச்சனையாக உட்கார்ந்தே இருப்பது என்ற பழக்கத்தையே சொல்வேன். அது கணிணி திரை இல்லாவிட்டாலும் நம் கால்களை கட்டிபோட்டுவிடும் அபாயத்தை உருவாக்க கூடியது. வெளியில் நடப்பதற்கோ, ஒடுவதற்கோ. உலகை சுற்றி அலைவதற்கோ நமது கால்கள் தயங்குகின்றன. எங்கே பயணம் செய்தாலும் அது ஒய்வை நோக்கியதாகவே இருக்கிறது. அடுத்த வீதியில் உள்ள ஒன்றை பற்றி அறிந்து கொள்வதற்கு கூட  உடல் விரும்புவதில்லை. கூகிள் தேவைப்படுகிறது. உலகை நாம் சுருக்கி கொண்டே வந்து வெறும் தகவல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோமா? அல்லது காட்சி பிம்பங்களாக மட்டுமே உலகம் போதுமானதாக இருக்கிறதா?

ஆரம்ப காலத்தில் கணிணியை அது ஒரு ஜன்னல் அது நம் வீட்டிற்குள் இருக்கிறது.  விரும்பும் போது திறந்து வேறு உலகை பார்த்து கொள்கிறோம் என்று தான் பலரும்  நினைத்தார்கள் இன்று அந்த மனநிலை அப்படியே மாறியிருக்கிறது.

இன்று கணிணி தான் வீடு. உலகம். அதிலிருந்து வெளியே போக சிறிய கதவு இருக்கிறது. அக்கதவு எப்போதாவது திறந்து  கொள்ளும்போது உடன்வாழும் மனிதர்களையும் சொந்த தேவைகளையும் பார்த்து கொள்கிறோம்

கணிணி பலரது வீடுகளிலும் அணைக்கபடுவதேயில்லை. அது பகலிரவாக ஒடிக்கொண்டேயிருக்கிறது. நமது உறக்கமும், உடலின் தேவைகளும் மட்டுமே கணிணியை விட்டு நம்மை துண்டித்திருக்கிறது. அதற்கும் மாற்று உருவாகினால்  இருப்பின் ஆதாரங்கள் சிதறடிக்கபட கூடும். அதுதான்  பயமாக இருக்கிறது.

நன்றி :எழுத்தாளர் இராமகிருஷ்ணன்

கரு. விக்னேஷ் ஜானகிராமன் 

No comments:

Post a Comment