Search This Blog

Monday, November 28, 2011

தாய்மை விற்பனைக்கு




பெண் என்ன பிள்ளை பெறும் எந்திரமா?” என்று கேட்டார் தந்தை பெரியார்.

‘ஆம்’ என்கிறது இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம். குழந்தை ‘பாக்கியம்’ இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத் தருவதற்காக, இந்தியாவில் வாடகைத் தாய்மார்கள் உருவாகிவருகிறார்கள்.

இவர்களின் கருப்பையில் ஆணின் உயிர் அணு செலுத்தப்பட்டு, கரு உண்டாக்கப்படுகிறது. அவர்கள் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தந்தால், ‘கணிசமான பணம்’ தரப்படுகிறது.

ஆம், தாய்மை ஒரு ‘தொழிலாக’ மாற்றப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் வறுமையைக் காரணம் காட்டி, ஏழைகளைச் சூறையாடுகிற இந்த சமூகம்,..,இந்த முறையும் ஏழைப் பெண்களின் வறுமைக்கு மாற்றாக தாய்மையைச் சூறையாடியிருக்கிறது.

மனித உறவுகளில் உன்னதம் என்று சொல்லப்படுகிற தாய்மையையும் வர்த்தகமாயிருக்கிறது.

வசதியான தம்பதிகளுக்குக் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாடு அல்லது...

குழந்தைப் பெற்றுக் கெள்ளும் ‘பிராசஸ்’ ரொம்ப ‘இம்சை’ என்ற காரணத்தால் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் அற்ற மனைவி, அதனால் தனது சொத்துக்கு வாரிசு அற்று போய்விடுமே என்ற ‘ஏக்கம்’...

குழந்தை பெற்று கொண்டால் உடல் வனப்பு குறைந்துவிடும் என நினைக்கும் சில பணக்கார பெண்கள்...

இவைகளே வாடகைத் தாய்மார்களை உருவாக்கி வருகிறது.

குழந்தை பெற்றுத்தரும் வரை பத்து மாத காலத்துக்கு இந்தப்பெண்கள் யார் கண்ணிலும் படாமல் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும். குழந்தைப் பெற்றவுடன் தொப்புள் கொடியோடு குழந்தைக்கும் தாய்க்குமான உறவைத் துண்டித்து கொள்ளவேண்டும்.

ஒருவேளை பிறக்கும் குழந்தை ஊனமுற்று இருந்தால், அந்தக் குழந்தையை பெற்ற தாயிடமே விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.

கருவுருகிற பெண் தன் உணவை, தன் சுவாசத்தை, தன் உயிரையே ஊட்டித்தான் குழந்தையைச் சுமக்கிறாள். 

எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும், தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துகிறவர்கள் மீது, கட்டுக்கடங்காத அளவுக்கு வெறுப்பு வருவது மனித இயல்பு.

ஆனால் ஒரு பெண் தாய்மை அடைந்து இறுதியில் குழந்தை பெறுவது  என்பது ஓய்வு நேரத்தில் மெல்லிய வயலினிசையை கேட்பது போல், இனிமையான அனுபவம் அல்ல.... அது உயிர் வலி.  பெண்ணை மறுபிறப்பு அடைய வைப்பது மாதிரி பிறக்கிறது குழந்தை.‘என்னை இம்சைப் படுத்திய குழந்தை எனக்கு  வேண்டாம்’ என்று எந்த தாயாவது குழந்தையை தள்ளி வைப்பாளா?

மாறாக, ‘தன்னைவிட குழந்தைதான் முக்கியம்’ என்கிற உணர்வைதான் ஒரு பெண்ணின் மனதில் கர்ப்பகால நாட்களும், பிரசவவலி என்கிற அந்த மரண தரிசனமும் ஏற்படுத்தி இருக்கும். அதுதான் தாய்மை.

வாடகைத் தாய்மார்களை உருவாக்குகிறவர்கள், பெண்களின் இந்த உணர்வுகளை மதிப்பதில்லை.

சொல்லப்போனால்.... பெண்களை உணர்வுள்ள மனுஷியாகவே மதிப்பதில்லை. ஒரு இயந்திரத்தில் மூலப்பொருட்களை உள்ளே தள்ளினால், அது ஒரு முழுப் பொருளை வெளியே தள்ளுவதுபோல், ஒரு பெண்ணின் உடலில் செயற்கையான முறையில் கருமுட்டையை செலுத்தியப் பிறகு, அந்தப் பெண் குழந்தையை வெளியே தள்ளிவிட்டு போய்கொண்டே இருக்க வேண்டும் என்கிறது மோசடியான மருத்தவ வர்த்தகம்

ஏழைப் பெண்களுக்கான இந்தக் கொடுமையை பெண் மருத்துவர்களே தீவிரமாக செய்கிறார்கள். (வர்க்க வேறுபாட்டில் ஆண் என்ன? பெண் என்ன?)

மக்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகத் திருட்டில் ஈடுபடும் மருத்துவர்கள், அதே வறுமையை பயன்படுத்தி பெண்களை வாடகைத் தாய்களாக மாற்றி கோடிக்கணக்கல் சம்பாதிக்கிறார்கள். மருத்துவம் இன்று அச்சுறுத்துகிற மனிதர்களின் கசாப்புக்கடை வர்த்தகமாக மாறி இருக்கிறது.

 இந்த நவீன வடிவமான வாடகைத் தாய்மார்கள் முறையால், அதிக லாபம் அடையப்போவது மருத்துவ வர்த்தகம்தான். சமூக ரீதியாக இந்த முறை பெரிய தீங்கையே ஏற்படுத்தும், அதுவும் இந்தியா  போன்ற மூன்றாம் உலக நாடுகளில்தான் இந்த முறை பெருமளவில் பயன்படுத்தப்படும். காரணம், இந்த முறைக்கு பணக்கார நாட்டுப் பெண்கள் உடன் படமாட்டார்கள்.  மலிவு விலையில் தாய்மார்கள் இந்தியாவில் கிடைப்பார்கள் என்பதால், வெளிநாட்டினரும் இந்தியத் தாய்மார்களின் தாய்மையைச் சூறையாட அதிக வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே மாற்றுச்சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தங்களின் வறுமையை போக்க, சிறுநீரத்தை விற்றனர் நமது நெசவாளர்களும், விவசாயிகளும் என்பது நமது ஞாபகத்தில் கவலையோடு பதிவாகியிருக்கிறது.

ஆக, இந்த நவீன மருத்துவ விஞ்ஞானம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டுப் பெண்களின் உணர்வுகள் மீது, உரிமைகள் மீது தொடுத்து இருக்கிற தாக்குதலாகவே இருக்கிறது.

இப்படி , தாய்மையை வர்த்தகமாக அனுமதித்தால், இன்று எல்லாப் பொருட்களும் பிளாஸ்டிக் கவரில் கிடைப்பது மாதிரி, இன்னும் கொஞ்சநாளில் தாய்ப்பாலும் ‘சாஷே’ யில் (Sache) கிடைக்கும் அவல நிலையும் வந்துவிடும். -

இந்த " வாடகை தாய்" முறை பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிற உடல் மற்றும் உளவியல் சார்ந்த வன்முறையாகவே இருக்கிறது.
ஆக்கம்
-மதி-


Dr .தமிழ்

No comments:

Post a Comment