Search This Blog

Wednesday, August 17, 2011

பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே, ஞானத் தங்கமே

நீண்ட காலமாய் தீராத ஏதோ ஒரு பிரச்னை / அல்லது நீண்ட கால ஆவல் ஒன்றை நிறைவேற்ற அம்மனை நினைத்து - மனதார ஒரு முறை வேண்டுங்கள். ஒரே மாதத்தில் அது நடந்து , நீங்கள் அம்மாவை தேடி வருவது உறுதி.

 இன்று நாம் பார்க்க விருப்பது - முருகப் பெருமானின் அருமை பெருமைகள், மற்றும் அதிகம் அறியப்படாத ஒரு மகத்துவம் வாய்ந்த ஆலயம் பற்றியும்.

மேஷம், விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர்களும், மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் - அதாவது பிறக்கும்போது செவ்வாய் தசை நடக்க பிறந்தவர்களும், பிறந்த ஜாதகத்தில் - செவ்வாய் நீசமாக இருக்கப் பிறந்தவர்களும், செவ்வாய் தோஷம் இருக்கப் பிறந்தவர்களும் , தற்போது செவ்வாய் தசை நடக்கப் பெறுபவர்களும், ஜனன காலத்தில் லக்கினத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்களும் - இந்த கட்டுரையை சற்று கவனமுடன் படிக்கவும்.

குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள், ஜோதிடம் சொல்லுபவர்கள் - ஒரு சில தீய பலன்கள் சொல்லும்போது வெளிப்படையாக சொல்வது கிடையாது. கெட்ட பலன்கள் நடப்பதாக இருந்தாலும் , அதை சூசகமாக சொல்வரே ஒழிய , உடைத்து பட்டவர்த்தனமாக கூறுவது இல்லை. அந்த வாக்குக்காகவே அவை விரைவிலும் நடந்து விடுவது உண்டு.

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது , எல்லோரும் பார்க்கக்கூடிய ஒரு பொதுவான விஷயம் செவ்வாய் தோஷம். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு, செவ்வாய் தோஷம் இருப்பவர்களின் ஜாதகமே பொருத்துதல் நலம் என்று கூறுகிறார்கள். செவ்வாய் உணர்ச்சியை தூண்டக்கூடிய கிரகம். கலகம், கோபம், ரத்த காரகன். பெரிய , பெரிய காவல் துறை, ராணுவ அதிகாரிகளுக்கு செவ்வாய் பலத்துடன் காணப்படும். உடல் ரீதியாக சற்று ஆராயும்போது செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு , அதே அமைப்புள்ள வரனை பொருத்துதல் - அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்த உதவுகிறது. தோஷம் இல்லா ஜாதக அமைப்புள்ளவர்கள் இவர்களுடன் இணையும்போது , ஒரு திருப்தி காணாத இல்லற சுகமே பெற முடிகிறது. இது உண்மை . ஏன்? எதற்கு? அந்த ஆண்டவனே அறிவான்.

சரி, இயல்பிலேயே அசுப கிரகமான செவ்வாய் , தான் பார்க்கும் இடத்தை அழிக்கிறது. லக்கினத்தில் செவ்வாய் இருக்க, அவருக்கு செவ்வாய் தசை நடக்கும்போது - முறையே நான்கு, ஏழாம் , எட்டாம் இடம் பார்வை பெறுகிறது. இந்த இடங்களை சுப கிரகம் பார்த்தால் நலம். இல்லையேல் - அந்த கால கட்டத்தில் படுத்தி எடுத்துவிடும். கல்வி, தாய் , வாழும் வீடு, வாகனம், நண்பர்கள், மனைவி, தன் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவில் - விபத்து, மருத்துவம் - என்று ஒரு மனிதனின் அத்தனை முக்கிய விஷயங்களையும் ஆட்டிப் படைத்து விடும்.

இவை அத்தனை விஷயங்களுக்கும் அடிப்படையாக உங்கள் கோபம் இருக்கும்.

மேஷ , விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கோபமே குழி பறிக்கும் விஷயமாகி விடுகிறது. கோபப்படும் சமயத்தில், மற்றவர்கள் அடங்கிப் போவது போல தோன்றினாலும், முதுகில் குத்த சமயம் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

விதி வலியது. இவர்கள் இதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். சரி, வேறு வழியில்லையா? ஏன் இல்லை? யாருமே பட்ட பிறகுதான் புத்தி தெளியனும்னு இல்லையே. உங்கள் கோபமும், ஆக்ரோஷமும் - முழுக்க , முழுக்க positive energy ஆக்கிட்டா பிரச்னை இல்லையே. - சரி, இவங்களுக்கு விதியை சாதகமாக்குறதுக்கு என்ன வழி?

முறையான இறை வழிபாடு மட்டுமே, உரிய பரிகாரம். வணங்கவேண்டிய இறைவன் : முருகப் பெருமான்.

ஒரே நிமிஷம் , உங்க பழைய அனுபவங்கள் எதையாவது நினைச்சுப் பாருங்க. முருகனை வணங்கிய நொடியிலேயே, ஒரு சில விஷயங்கள் நீங்க நினைச்ச படி நடந்து இருந்து இருக்கும்.

உங்க Problem solve பண்ண உருப்படியான formula - முருகனை அடி பணிவது தான். உடனடியாக நீங்கள் தரிசிக்க வேண்டிய ஸ்தலம் - திருச்செந்தூர். ஒரு முறை - வைத்தீஸ்வரன் கோவில் சென்று வாருங்கள். வாய்ப்பு கிடைத்தால் சேர்ந்தாற்போல் - முருகனின் ஆறு படை வீடுகளையும் ஒரு முறை தரிசித்து வாருங்கள்.

முடியவில்லையா? மாதம் ஒரு ஆலயம் / அல்லது இரண்டு ஆலயம் என்று முறை வைத்து - முருகனை தரிசித்து , அறுபடை வீடு தரிசனம் முடியுங்கள். வாழ்வில் உங்களுக்கு எந்த கெடுதலும் நிகழாது - ஒரு கவசம் போல நின்று அந்த கந்தனின் வேல் உங்களை காக்கும்.

வணங்க வேண்டிய நேரம் : செவ்வாய் கிழமை - செவ்வாய் ஹோரைகளில் . காலை - 6 டு 7 , - மதியம் - 1 to 2 , இரவு - 8 டு 9 . இவற்றில் ஏதாவது ஒரு நேரத்தில் - உங்கள் அருகில் இருக்கும் முருகன் கோவிலில் , வார வாரம் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சஷ்டி பாடுங்கள். செவ்வாய் கிழமை விரதம் , அல்லது சஷ்டி விரதம் இருக்கலாம். முருகனுக்கு பாலபிசேகம் செய்யலாம். குழி பறிக்கும் கூட்டம் , டயர்ட் ஆகி ஓடி விடும். எதிரி என்று எவனும் இருக்க மாட்டான். சொல்லி அடிக்கலாம் - நான் ஜெயித்து காட்டுவேன் என்று.

நம்பிக்கையுடன் அந்த முருகனைப் பற்றிக் கொள்ளுங்கள்.

இன்று நாம் பார்க்க விருப்பது - நம்பிக்கையுடன் முருகனை நினைத்த போதெல்லாம் தரிசித்து - அவனுடன் ஒன்றி விட்ட பாம்பன் சுவாமிகள் இன்றும் அடிக்கடி தென்படுவதாக கூறப்படும் வள்ளிமலை பற்றி.

பாம்பன் சுவாமிகள் பற்றி ஒரு அதிசய நிகழ்ச்சி கேள்விப்பட்டேன். காலில் அடிபட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்தாராம். ஆங்கிலேயர்கள் காலம் அது. அவருக்கு வைத்தியம் பார்த்த ஆங்கிலேயர், நிலைமை மோசம் , அவரால் இனிமேல் முன்போல் எழுந்து நடக்க முடியாது என்று கைவிரித்து விட்டாராம். இந்த நிலையில் நடந்ததுதான் அந்த அதிசயம். கையில் வேலுடன் வந்த ஒரு பெரியவர் , அவரது அடிபட்ட பாகத்தை தடவிவிட , சில மணி நேரத்தில் - முறிந்து இருந்த எலும்பு ஒன்று கூடி விட்டது. பாம்பன் சுவாமிகள் மகிமை பற்றி மக்கள் அதன் பிறகே உணரத் தொடங்கினர். பாம்பன் சுவாமிகள் குணமாகி விட்டதைப் பார்த்து அரண்டு போய் விட்டாராம் , அந்த டாக்டர். இதை , அவர்கள் குறிப்பிலும் எழுதி , பிரேம் போட்டு வைத்து , ஆஸ்பத்திரியில் மாட்டி இருக்கிறாராம்.
அதனாலே , நாமும் முழு மனதுடன் அந்த குமரனை நம்பலாம். கண்டிப்பாக அவன் அருள் கிடைக்கும்.


*அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும். ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்த பிறவியை மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள். நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையை செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.

* ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

* பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.

சார், பிரமாதம் சார்.. எப்படி சார் இப்படி எழுதுறீங்கன்னு கேட்டுறப் போறீங்க.. மேலே நச்சுனு சொன்ன மூணு விஷயமும் பாம்பன் சுவாமிகள் சொன்ன விஷயங்கள்..

வள்ளி மலை பற்றி , அதன் பெருமைகள் பற்றி காண்போம். வேலூர் மாவட்டம், பொன்னை கிராமத்துக்கு அருகில் உள்ளது. ஆற்காடு, ராணிபேட் , திருவலம், வேலூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. பொன்னை அருகில் - ஓட்டநேரி என்னும் இடத்தில் விநாயகர் ஆலயம் உள்ளது. வேறு எங்கும் எளிதில் காண முடியாத அதிசயமாக நவகிரகங்களும் தனி தனி பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் நவ கிரக கோட்டை உள்ளது. வெளியூரில் இருந்து வருபவர்கள், அருகில் இருக்கும் இந்த கோவிலுக்கும் சென்று வரலாம். இங்கிருந்து திருத்தணி - அரை மணி நேர பயணம் தான்.

சரி, இனி வள்ளிமலை... :

ஒருசமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்திலுள்ள ஒரு வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி மான் வடிவில் அவர் முன்பு வரவே, முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக்கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவன் நம்பிராஜன் குழந்தையை எடுத்து, "வள்ளி' என பெயரிட்டு வளர்த்தான்.

கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார்.

நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.

மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் "குமரி வள்ளி'க்கு சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள்.

முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.

தேரோட்ட சிறப்பு: பெரும்பாலும் கோயில்களில் தேரோட்டம் ஒரு நாளில் முடிந்து விடும். ஆனால் இத்தலத்தில் தேர், நான்கு நாட்கள் ரதவீதி (மலைப்பாதை) சுற்றி நிலைக்கு வருகிறது. வழியில் வேடுவ மக்கள் தங்கள் வீட்டுப்பெண்ணான வள்ளிக்கு சீதனமாக அரிசி, வெல்லம், தானியம், காய்கறி, தேங்காய், பழம், ஆடைகள் கொடுக்கின்றனர்.

விழாவின் கடைசி நாளன்று (மாசி பவுர்ணமி) வள்ளி கல்யாணம் நடக்கிறது. அப்போது வேடுவர் குலத்தினர் தேன், தினைமாவினை தங்கள் மருமகனான முருகனுக்கு படைக்கின்றனர்.

முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. ஆடிக்கிருத்திகையை ஒட்டி நான்கு நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது சுவாமி, சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார்.

கோபுரத்தின் கீழ் முருகன்: பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. அருணகிரியாரால் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய "குமரி தீர்த்தம்' என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன.

யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை, "யானைக்குன்று' என்றழைக்கிறார்கள். இவ்விடங்கள் வனத்திற்குள் இருப்பதால் தகுந்த பாதுகாப்போடு சென்றால் பார்த்து வரலாம். மலையடிவாரத்தில் ஆறுமுகன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கிருந்து 50 கி.மீ., தூரத்தில் திருத்தணி இருக்கிறது.

சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


 


மேலே உள்ள படத்தைப் பாருங்கள். மின்னஞ்சலில் நம் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தது. 

பொதுவாக சூக்கும உருவங்கள் அல்லது ஆவி உருவங்களைப் பலர் நம்புவதில்லை; அவை புகைப்படத்தில் சிக்குவதும் இல்லை. ஆனால் வள்ளிமலையில் 61-ஆம் ஆண்டு மலைவலம்-படிவிழாவில் மலைப்பாதையில் அன்பர்கள் திருப்புகழ்-திருமுறைப் பாராயணம் செய்து கொண்டு சென்ற போது திரு.T.சிவானந்தம் என்கிற சென்னை அன்பர் ஒருவர் செல்போன் காமராவில் படமெடுத்து வந்து அதைக் குறுந்தகடாக்கிப் போட்டுப் பார்த்த போது சுமார் 85 ஆண்டுகட்கு முன் மறைந்த முருகன் அருள் பெற்ற அடியவரான பாம்பன் சுவாமிகள் மலையின் மீது சூக்கும உருவில் அமர்ந்திருந்தது பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த அற்புதம் நிகழ்ந்தது 13 -1 -2009 .


நம்புபவருக்கு ஆண்டவன் , ஏதோ ரூபத்தில் தொடர்ந்து உதவி கொண்டுதான் இருக்கிறான்..

சரி, கட்டுரை  ரொம்பவே நீண்டு விட்டது. மற்றவை ,  மீண்டும் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.  அற்புதங்கள், அதிசயங்கள்.. தொடரும்..!

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_17.html#ixzz1VIOaeKi1

No comments:

Post a Comment