Search This Blog

Tuesday, July 19, 2011

குறட்டையை தடுக்க புதிய வழி கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்



குறட்டையால் குடும்பமே பிளவுபடும் நிகழ்வுகள் நடப்பதுண்டு. அடுத்தவரை இம்சிப்பதில் குறட்டையின் பங்கு அதிகம். இதற்கு தீர்வு காண நடத்தப்படும் ஆய்வுகளோ அதைவிட அதிகம்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. பிளாஸ்திரி போல் உள்ள சிறிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இரவில் படுக்கும் போது மேல் உதட்டில் ஒட்டிக்கொண்டால் போதும். குறட்டை பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் மேயோ க்ளினிக் ஆய்வாளர்களின் அரிய கண்டுபிடிப்பு இது. இக்கருவியை கொண்டு குறட்டையால் பாதிக்கப்பட்ட சுமார் 125 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் வெற்றி கிட்டியது என்கின்றனர் அவர்கள்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: குறட்டை குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கும். இதற்கு தீர்வுகாண தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளாஸ்டர் போல் உள்ள பகுதியை மேல் உதட்டில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
மற்றொரு நுண்ணிய பகுதியை காதுக்கு அருகில் பொருத்திக் கொள்ள வேண்டும். இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், குறட்டை சத்தம் வந்தால் தூக்கத்தில் உள்ளவர்களை எழுப்பாமல் அதைக் கட்டுப்படுத்தும். இது மூளைக்கு அனுப்பும் சமிக்ஞைகள் மூலம் குறட்டை பாதிப்பு குறையும்.
மூச்சு விடும் போது மூச்சுக்குழாயின் மேல்பகுதியில் ஏற்படும் இடர்பாடுகளால் சீராக மூச்சு விட முடியாமல் போகும். இதுதான் குறட்டைக்கு காரணமாகும்.
இந்த பாதிப்பை கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ள புதிய கருவியை தேவைக்கேற்ப உதட்டில் ப்ளாஸ்டர் போல ஒட்டிக்கொள்ள முடியும். இதன் துணைக்கருவி ஐபொட் அளவுக்கு இருக்கும்.
அதை காதருகில் பொருத்திக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் இவற்றை எடுத்து வைத்து விடலாம். இதனால் எந்த பாதிப்போ பக்க விளைவுகளோ கிடையாது. இந்த புதிய ப்ளாஸ்டர் கருவி விரைவில் விற்பனைக்கு வரும்.

No comments:

Post a Comment