Search This Blog

Tuesday, July 12, 2011

வலிநிவாரணிகளால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆய்வில் தகவல்



வலிநிவாரணிகள் என்று நாம் பொதுவாக பயன்படுத்தும் மாத்திரைகளால் இருதயத் துடிப்பு சீரற்றதாகி விடுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் வந்துள்ள இந்த ஆய்வை டென்மார்க்கைச் சேர்ந்த ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்தியுள்ளனர். முன்னதாக பல ஆய்வுகள் வலிநிவாரணிகளால் மாரடைப்பு மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வலிநிவாரணி மாத்திரைகளான இபுப்ரூபன் மற்றும் ஆஸ்பிரின் வகையறா மாத்திரைகளால் மேற்கூறிய மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் பாதிப்பு நீண்ட நாளைய விளைவாக ஏற்படலாம் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் நோய்ப் பதிவேட்டை எடுத்துக் கொண்டுள்ளனர். இதில் இந்த வலி நிவாரணிகளால் சீரற்ற இருதய துடிப்பு இடர்பாடு 40% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் ஈடுபட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஹென்ட்ரிக் டாஃப்ட் சென் தெரிவித்துள்ளார்.
புதிய வலிநிவாரணிகளாகிய காக்ஸ் - 2 இன்ஹிபிட்டர்கள் வகையறாக்களை பயன்படுத்துவதில் இந்த இடர்பாடு 70% ஆக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. காக்ஸ்- 2 இன்ஹிபிடர்கள் என்று அழைக்கப்படும் ஸ்டெராய்ட் கலப்பு இல்லாத அழற்சி தடுப்பு வலிநிவாரணிகள் நேரடியாக காக்ஸ்- 2 என்ற என்சைமில் செயல்படுகிறது.
அதாவது இந்த என்சைம்தான் வலி மற்றும் அழற்சிக்குக் காரணமான என்சைமாகும். ஏற்கனவெ இந்த வகை வலிநாவரணிகளில் ஒன்றான வியாக்ஸ் என்ற ஒன்று 2004ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாம் பொதுவாக எடுத்துக் கொள்ளும் சிறிய அளவிலான வலி நிவாரணிகளினால் முதியோருக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வாய்ப்பு சற்றே அதிகரித்துள்ளது. குறிப்பாக நீண்ட நாளைய சிறுநீரக நோய் கண்டவர்களுக்கு இந்த வலிநிவாரணிகளால் ஆபத்து ஏற்படும் என்கிறது இந்த ஆய்வு.

No comments:

Post a Comment