Search This Blog

Friday, July 29, 2011

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து ! கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ்



 
'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, மே 13-ம் தேதியன்று வழக்கம்போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தார். அப்போது, சமையல் மேடையில் அலைந்த கரப்பான் பூச்சியைக் கண்டவர், அதற்கான 'ஸ்பிரே’வை எடுத்து அழுத்தினார். அடுத்த நொடியே குபீரென தீப்பற்றி, கேஸ் சிலிண்டரும் வெடிக்க... 65 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள்’

- இப்படி ஒரு தகவல், இன்டர்நெட்டில் 'தீ'யாக உலா வருகிறது. ஆனால், நாம் பலமாக 'வலை' வீசி தேடியும் எங்கேயுமே 'செய்தி'யாக அது பதிவாகியிருப்பதைக் காண முடியவில்லை. அதேசமயம், 'கேஸ் ஸ்டவ் எரியும்போது கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே அடித்தால் தீ விபத்துக்கான வாய்ப்பு இருக்கிறதா?' என்கிற கேள்வி நமக்கு எழ, சென்னை, எழும்பூரிலிருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் கண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டோம்.

''கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே என்றில்லை... சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை கிச்சனுக்குள் பயன்படுத்தவே கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தி லேயே வெடிக்கக் கூடியவைதான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் என்று தெரிந்தும் இவற்றை கிச்சனுக்குள் அனுமதிப்பது எமனை வரவழைப்பதற்குச் சமம்!'' என்று எச்சரித்தவர், அடுப்படி ஆபத்து களைப் பற்றி பட்டியலே இட்டார்!

''கிச்சனில் சமையல் செய்யும்போது புடவை, சுடிதார், நைட்டி என்று எந்த உடை யானாலும், அதை காட்டனில் அணிய வேண்டும். ஒருவேளை ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், இந்த வகை துணிகள் உடம்போடு ஒட்டிக் கொள்ளும்; எளிதில் அகற்ற முடியாது. அது காயங்களை இன்னும் தீவிரமாக்கும்.

கிச்சன் பிளாட்ஃபார்ம் மேலாக ஒரு செல்ஃப் வைத்து, சமையல் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும்போது, ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தால், உடையில் எளிதில் தீ பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்று அறிவுறுத்திய ராஜேஷ் கண்ணன்,

''கேஸ் சிலிண்டரை நூறு சதவிகிதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன் படுத்துவார்கள் சிலர். இது ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால் வெடித்து விடும். அதேபோல பவர் கட் ஆனதும் மிக்ஸி, கிரைண்டர் ஸ்விட்ச்களை உடனடியாக ஆஃப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயமாக பார்த்து கரன்ட் வந்தால்... மிக்ஸி, கிரைண்டர் தானாக 'ஆன்’ ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி, வெடிக்கும் ஆபத்தும் உள்ளது'' என்று சொன்னார்.

''குழப்பமான மனநிலையும் விபத்துக்கான காரணிகளுள் ஒன்றுதான்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா, ''குழப்பமான மனநிலையில் கிச்சனுக்குள் நுழைந்து பொங்கும் பாலை பார்த்துக் கொண்டேஇருப்பது, கேஸை 'ஆன்’ செய்துவிட்டு பற்ற வைக்க மறப்பது போன்றவையும் விபத்துக்கான விதைகளே. செல்போனில் மூழ்கியபடி சமைப்பதும் ஆபத்தே! ஒன்று சமைத்துவிட்டுப் பேசலாம். அல்லது, பேசிவிட்டு சமைக்கலாம். தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு அலர்ட்னெஸ் குறைவாக இருக்கும். அது மாதிரியான சமயங்களில் கிச்சனில் நுழைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்'' என்று அக்கறையோடு டிப்ஸ்களைத் தந்தார் தாரா!

No comments:

Post a Comment