Search This Blog

Friday, July 22, 2011

பெண்ணுக்கு ஏற்ற உடை எது?



சொல்ல நினைக்கிற எல்லாவற்றையும் அப்படி யப்படியே சொல்லிவிட முடிவதில்லை. நாகரீகம் கருதி சிலவற்றை மனதில் பூட்டி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஒரு விவாதமாவது வர வேண்டும், அந்த விவாதம் மாற்றங்களுக்கு வழி கோல வேண்டும் என்ற நினைப்புடன் சில கருத்துக்களைச் சொல்லியே ஆக வேண்டும். பெண்ணே நீ உன் பண்பாட்டு அடையாளமாகப் பூட்டப்பட்ட சங்லிகளை அறுத்தெறிவதன் ஒரு நடவடிக்கையாக உன் சேலையை வீசிவிடு என்பது அப்படிப்பட்ட ஒரு கருத்து.



பண்பாட்டுப் பாதுகாவலர்கள் கேலியாகப் பார்க்கிறார்கள். “இப்பெல்லாம் எந்தப் பொண்ணு சேலை கட்டுறா? எல்லாரும் சுடிதார், சல்வார்னு மாறி தமிழச்சி அடையாளத்தையே அவுத்துப்போட்டுட்டு நிக்கிறாங்களே,” என்ற விமர்சனம் அந்தக் கேலிப் பார்வையில் இருக்கிறது. சுடிதார் அணியும் பழக்கம் அதிகரித்திருக்கிறது, கிராமங்களில் கூட பரவி வருகிறது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் சுடிதாரோடு வரும் அந்தத் துப்பட்டா? அதையும் கடாசிவிட வேண்டும் என்பதே நான் சொல்ல நினைப்பது.



முற்போக்கான சிந்தனையுள்ளவர்களில் கூட பலர் அதை மட்டும் ஒப்புக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். உலக மயமாக்கல், ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கம் முதலியவற்றை எதிர்ப்பவர்கள் சுடிதார், சல்வார், பேண்ட்-சட்டை போன்ற உடைகள் தமிழ்நாட்டுத் தாவணிகளையும், சேலைகளையும் ஒழித்துக்கட்ட வந்த எதிர்க் கலாச்சார ஆயுதங்களாகச் சித்தரிக்கிறார்கள். திருமண விழா ஒன்றில் வாழ்த்திப் பேசிய ஒரு பிரமுகர்,“நம்முடைய கலாச்சாரமாகிய பட்டுச்சேலை, பட்டுத்தாவணி, பாவாடை போன்றவற்றை இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான் பார்க்க முடிகிறது. சேலையும் தாவணியும் வெறும் சடங்குப் பொருள்கள் அல்ல. அவை நம் பண்பாட்டு அடையாளம். அத்தோடு சேலை - தாவணியின் அழகு வேறு எந்த உடைக்காவது வருமா,” என்று கேட்டார். பெண்கள் உட்பட அதை ஆமோதித்துக் கை தட்டினார்கள்.



(நல்ல வேளையாக) அவருக்குப் பிறகு பேச அழைக்கப்பட்ட நான், இந்த விழாவுக்கு வந்திருக்கிற பட்டுச்சேலைப் பெண்களைவிட சுடிதார்ப் பெண்களை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களையும்விட அந்த ஒரே ஒரு ஜீன்ஸ் பேண்ட் - டீ  ஷர்ட் சிறுமியை ரொம்பவும் பிடித்திருக்கிறது,” என்று கூறியபோது அங்கே ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட்டது. விழா முடிந்து பந்தல் நிழலில் சற்று ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது சில பெண்கள் அருகில் வந்து, “சார், எங்க டிரஸ் பற்றி நல்லாச் சொன்னீங்க,” என்று மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள்.



ஏன்.. நீங்க பேண்ட் - சட்டை பேடுறதில்லையா,” என்று கேட்டபோது,“வீட்ல வச்சிருக்கோம் சார், எப்பவாவது போடுவோம்,’’ என்றனர். சர்வ சாதாரணமாக பேண்ட்-சட்டை அணிந்துகொண்டு எங்கும் போக முடியவில்லையே என்ற அவர்களது ஏக்கம் எனக்குப் புலப்பட்டது. அம்மா சம்மதித்தாலும் அனுமதிக்காத அப்பா, நைட்டியுடன் பக்கத்துக் கடைக்குச் செல்லும் மனைவியிடம், “மேல துப்பட்டா போட்டுட்டுப் போயேண்டி,” எனக் கூறும் கணவன்...





என்னென்னவோ சாதிக்க வேண்டிய பெண்ணின் கைகள், ஆணுக்குச் சமமாக உயர வேண்டிய பெண்ணின் கைகள், சேலை மாராப்பையும், சுடிதாரின் துப்பட்டாவையும் இழுத்துவிட்டுக் கொண்டிருப்பதிலேயே முக்கால்வாசி நேரத்தைக் கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. கைகள் இந்த வேலைகளை அனிச்சைச் செயல்போல் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் பெண்ணின் மூளையில் ஒரு சிறு பகுதி இதற்கென ஒதுக்கப்பட்டு அவளுடைய கைகளை இப்படியே இயக்கிக் கொண்டிருக்கிறது.





பெண்பாடு பற்றிக் கவலைப்படாத பண்பாடு, சமுதாயத்தின் சரிபாதி மூளையை  இப்டியே முடக்கிவிட்டது. மனித மூளையின் வளர்ச்சிக்கே அடிப்படை கைகளின் இயக்கம்தான் என்பது பரிணாம அறிவியல், சமுதாய நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த விவசாயத்தைக் கண்டுபிடித்ததே பெண்ணின் மூளைதான் என்பது வரலாறு. ஆனால் பெண்ணின் அந்த மகத்தான பங்களிப்பை, முளைப்பாரி திருவிழாவோடு மூழ்கடித்துவிட்டோம்.





வேளாண் உற்பத்தி, சமைத்த உணவு இவ்விரண்டும் வராமலிருந்திருந்தால் மனிதர்களுக்கு இன்றைய பல துறை வளர்ச்சிகள் இல்லாமல் போயிருக்கும். ஏன் இன்றைய முகத்தோற்றமே கூட தோன்றாமல் போயிருக்கும்! இவ்விரண்டையும் கண்டுபிடித்தது பெண்தான் என்கிறபோது, அவளது சிறகுகள் வெட்டப்படாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!





அரசியல், அறிவியல் என எல்லாத் துறைகளிலும் திருப்பங்களை ஏற்படுத்தியது பெரும்பாலும் ஆண்கள்தான். அந்தப் பாதி மூளையின் பங்களிப்பிலேயே உலக சமுதாயம் இத்தனை முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது என்றால், மீதி மூளையின் ஆற்றலும் சுதந்தரமாக முழுமையாகச் செயல்பட விட்டிருந்தால் இன்னும் எத்தனை முன்னேற்றங்களைக் கண்டிருக்க முடியும்! இத்தனை வளர்ச்சிக்குப் பிறகும்கூட மானுட சமுதாயம் இன்னும் ஏன் இருட்டில் தடுமாறுகிறது என்ற கேள்விக்கான விடையும் கூட அந்தப் பாதி மூளை இருட்டடிப்புக்குள்தான் இருக்கிறது.





பேருந்தில் சங்கடமின்றி ஏறி இறங்க முடிவதில்லை என்பது முதல், ஆண்களின் திருட்டுப் பார்வை பற்றிய உறுத்தலின்றி வேலைகளைச் செய்ய இயலுவதில்லை என்பது வரையில் சேலை பெண்ணுக்கு ஒரு மிகப்பெரிய இடைஞ்சல். எழுத்தாளர் சு.சமுத்திரம் ஒரு சிறுகதையில், பெரியபுராணத்தைக் கொஞ்சம் மாற்றியிருப்பார். பரமசிவனோடு நடனப் போட்டியில் குதிக்கும் பார்வதி, எல்லா நுட்பங்களிலும் சரிசமாக ஈடுகொடுக்க, கடைசியில் பரமசிவன் தனது காலை உயரத் தூக்கி நிற்க, அப்படிச் செய்ய முடியாமல் நாணத்தோடு அவள் தோல்வியை ஒப்புக் கொள்கிறாள் என்பது புராணம். புதிய கதையில் பார்வதி கூச்சமின்றிக்  காலைத் தூக்கி ஆடி வெற்றி பெறுவாள்! அதற்குக் காரணம் நவீன பார்வதி சுடிதார் அணிதிருந்ததுதான் என்று முடித்திருப்பார் சமுத்திரம்.





சேலையைவிட சுடிதார் நிச்சயம் பெண்ணுக்கு வசதியான, கண்ணியமான உடைதான். அதையும்விட வசதியான கவுரமான, உறுத்தலற்ற இயல்பான உடை பேண்ட் - சட்டை அவளது கைகளை விடுவிக்கும் உடை.





அடிமைத்தன அலங்காரம்தான் அழகென்றால் சேலை அழகானதுதான். ஆனால் உண்மையில் ஆபத்தான, பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கிற உடை, பாத்ரூம் அவசரத்துக்கும், பெட்ரூம் அவசரத்துக்கும் மட்டுமே அது தோது என்று கூட பச்சையாக சொல்லத்தான் நினைக்கிறேன்....



இன்றைக்கு சில இடங்களில், குறிப்பாக மகளிர் கல்லூரிகளில், தாவணித் திருவிழா நடத்துகிறார்கள். இதற்கென்றே வாங்கப்பட்ட பாவாடை - தாவணியோடு அல்லது அம்மாவின் பாதிச் சேலையோடு மாணவிகள் என்னவோ உற்சாகமாகத்தான் விழாவிற்கு வருகிறார்கள். சில பத்திரிகைகள் பல வண்ணப் பூக்களின் கதம்பம்போல் இருக்கும் பலவண்ணத் தாவணித் தேவதைகளைப் படமெடுத்து அட்டையிலேயே வெளியிடுகின்றன. மறைந்து வருகிற ஒரு பண்பாட்டு அடையாளம் இதன்மூலம் மீட்கப்படுவதாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் சொட்டச் சொட்ட கவர்ச்சியில் ஊறிய தாவணி-பாவாடைக்குள் மாட்டிவிட்டு, வருங்கால கிரண்பேடிகளையும், சானியா மிர்சாக்களையும், பாமாக்களையும்,முளையிலேயே கிள்ளுகிற கைங்கர்யம் இத்தகைய விழாக்களின் அடியிழையாக இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.




இத்தகைய தாவணித் திருவிழாக்களை,இந்துத்துவக் கூடாரங்களின் ஆசீர்வாதம் பெற்ற சில கல்லூரி நிர்வாகங்களும் நடத்துவது தற்செயலானது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.





நான் சொல்ல நினைப்பது உடை விவகாரம் மட்டுமல்ல, “இன்னிக்குத் தலைக்குக் குளிச்சேன்... அதான் சளி பிடிச்சுக்கிச்சு,’’  என்று அவ்வப்போது சொல்ல வேண்டியிருக்கிற நிலைமையிலிருந்தும் பெண் விடுபட வேண்டும். நீண்ட கூந்தல் பற்றிய மயக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்.





இது உங்க பையனா?’’



இல்லை, என்னோட பெண்’’



....ஸாரி சார்.’’



நான் சார் இல்லை, மேடம்....’’





பெண்ணின் உடையும் முடியும் மாறிவிட்டதைக் கிண்டலடிக்கிற இப்படிப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் அருவருக்கத்தக்கவையாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். தனிமையில் செல்லஅச்சம், மற்றவர்கள் முன் நிற்கநாணம், ஆணைவிட கூடுதலாக ஏதும் அறியாதமடம், வாரிசுகளை பெற்றுத்தரும் விளை நிலமாக மட்டுமே பிழைத்திருக்கிறபயிர்ப்பு.... ஆகிய நற்குணங்கள் கொண்டவளாய்ப் பெண்ணின் பரிணாமத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற அடையாளங்கள் தேவையில்லை.





இதை ஏற்க இயலாதர்கள் முன்வைக்கிற வாதம். “இப்படி எல்லாத்தையும் மாத்திக்கிட்டே போனா நம்ம பண்பாடு என்னாகிறது’’ என்பதுதான். நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருப்பதாலேயே ஒரு பழக்கம் புனிதப் பண்பாடாகிவிட்டது. மேற்படி தாவணி-சேலைக்கு முன், நீண்ட சடை-கூந்தலுக்கு முன் நம் ஆதித்தாத்திகள் எப்படி இருந்தார்கள்? ரவிக்கை அணிவதற்குக் கூட ஒரு பகுதி பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்பது ஒரு பண்பாடாக இருந்ததே! இதையெல்லாம் யோசித்தால் பண்பாடு என்பது சமுதாய வளர்ச்சிக்கேற்ப மாறி வந்திருப்பது தெளிவாகும்.





நம் சமுதாயத்தின் பாதி மூளை முடக்கப் பட்டிருப்பதற்கு முடிவு கட்டுவோம். அதற்கு பெண்ணின் கைகளை மாராப்பு-துப்பட்டா இழுப்பிலிருந்தும், கூந்தல் கோதலிலிருந்தும் விடுவிப்போம்.





( ‘பெண்ணே நீமாத ஏட்டில் வெளியான எனது கட்டுரை)



--
. குமரேசன்




No comments:

Post a Comment