Search This Blog

Tuesday, June 14, 2011

பட்டுக்கோட்டையின் கடவுள் கொள்கை

பட்டுக்கோட்டையின் கடவுள் கொள்கை
-முனைவர் சி. சேதுராமன்.
தமிழ் இன்று பன்முகத்தடத்தில் வளர்ந்த நிலையில் ஓங்கி வளர்ந்து வருகிறது. துறைதோறும் புதுப்புது வளர்ச்சிகளும் தமிழன்னையின் மேன்மைக்கு எழில் கூட்டுகின்றன. அவ்வெழில் கூட்டல்களுள் இன்று திரைத்தமிழ் என்பது தனித்துறையாக நிலைபெற்று விட்டது. பொதுவுடைமைப் பூங்காவில் பூத்த செம்மலராக விளங்கிய பட்டுக்கோட்டையார்; திரைத்துறை வழியே பல்வேறு கருத்துக்களை சமுதாயத்திற்கு வழங்கியுள்ளார்.
சமுதாய முன்னேற்றத்தினை விரும்பிய மக்கள் கவிஞர்; தாம் சார்ந்த இயக்கத்திற்கு ஏற்புடையதாகாத கடவுளைப் பற்றி பல பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் அவர் பொது உடைமையிலிருந்து தடம் மாறிப் போகின்றாரோ என்ற கருத்தையும், வசதி வாய்ப்புகள் வந்ததால் மனம் மாறிவிட்டாரோ? என்ற ஐயங்களையும் பலரது மனதில் எழுப்புகின்றன. பட்டுக்கோட்டையார்; என்றும் தடம் மாறாமல் பொதுஉடைமைவாதியாகவே இருந்து இறந்தார் என்பது நோக்கத்தக்கது.

வாழ்க்கைச்சூழல்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையின் கவிதைகள் அவர் தம் உள்ளத்துணர்வுகளிலிருந்து பிறந்தவை. ஊற்றெழ வெள்ளம் கரைகளின் கட்டுக்கடங்காது பாய்ந்தோடுதல் இயற்கை. அது போல் பட்டுக்கோட்டையின் பொதுமை எழுச்சியில் மலர்ந்த கவிதைகள் சில கரைகளைக் கடந்தும் சென்றிருக்கின்றன. 1930-ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர்; 1951-ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வருகிறார்;. இந்த 21 வயதிற்குள் கூலி ஆளாய் சிறு தொழில் முதலாளியாய் 17 வகைத் தொழில்களைச் செய்திருப்பதாய் அறிஞர் ஜீவா கூறுகிறார். வாழ்க்கையில் பல நிலைகளில் பணிபுரிந்து அவர் பெற்ற பட்டறிவு, அவர் பாடல்களில் படிந்து கிடக்கின்றன.

கவிஞர் பட்டுக்கோட்டை தன்னை ஓர் அரசியல் இயக்கத்தோடு அடைத்துக் கொண்டவர். அவர் சார்ந்திருந்த இயக்கம் கடவுளை எதிர்க்கும் பொது உடைமை இயக்கமாகும். அந்த இயக்கத்திற்கு இறைக் கொள்கையில் ஈடுபாடில்லை. ஆனால் பட்டுக்கோட்டைக்கு இறைக் கொள்கை மீது நாட்டம் இருந்தது. அவர் இறைவனைப் பற்றிப் பாடினார். ஒரு கவிஞனுடைய அல்லது எழுத்தாளனுடைய உள் மனதில் எந்த வகையான எண்ணங்கள் கருக்கொண்டிருக்கின்றனவோ அதுதான் கவிதையாக, கதையாகப் பரிணமிக்கின்றது.

“உள்ளத்து உள்ளது கவிதை இன்ப
ஊற்றெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழின் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை”
- என்று கவிமணியும்

“உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்”
- என்று பாரதியும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

மக்களின் புற வாழ்விற்குப் பொது உடைமைத் தத்துவம் வேண்டும். அவர்களின் அக வாழ்விற்கு இறைத் தத்துவம் துணை நிற்க வேண்டும் என்ற கொள்கை உடையவராகவே பட்டுக்கோட்டையார் காட்சியளிக்கின்றார்.

திரு.வி.க. மக்களின் வாழ்விற்குப் பொதுஉடைமைத் தத்துவமும், அகவாழ்விற்கு இறைக்கொள்கையும் எவ்வாறு தேவை என்றாரோ அது போலவே பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகளும் அமைந்துள்ளன.

‘‘ஆகா என்றெழுந்ததுபார் யுகப் புரட்சி’’

- என்ற பொதுஉடைமையைப் போற்றிய பாரதி எவ்வாறு இறைக்கோட்பாட்டினை உடையவராக விளங்கினாரோ அது போலவே பட்டுக்கோட்டையாரும் பொன்னுலக வாழ்விற்குப் பொதுஉடைமைக் கொள்கையைப் வரவேற்றுப் பாடியுள்ளார்.

இறைவனைப் பற்றிய கவிஞரின் கருத்துக்கள்

பட்டுக்கோட்டையார் 11 படங்களில் 26 இறைப்பாடல்கள் எழுதி இருக்கிறார். அவற்றுள் எட்டுப் பாடல்கள் பெண் தெய்வப் பெயரிலும், பிற ஆண் தெய்வப் பெயரிலும் அமைந்திருக்கின்றன. மனித அறிவிற்கு எல்லை உண்டு, அந்த எல்லைக்கும் அப்பால் இயங்கும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலை உடையவனை இயற்கை அன்னை, இறைவன், ஆண்டவன், சிவன், முருகன் எனப் பல பெயரிட்டு உலகம் அழைக்கின்றது. அந்த எவனோ ஒருவன் இருக்கிறான் என்பதிலே கவிஞருக்கு நம்பிக்கை இருக்கிறது இறைவனாகிய அந்த எவனோ ஒருவனை,

‘‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகிஉயிராகிஉண்மையுமாய் இன்மையுமாய்’’  (திருவாசகம்)
- என மாணிக்கவாசகப் பெருமான் வார்த்தைகளில் வடித்துக்காட்ட முயன்ற கவிஞர் அந்த வழியில்,

‘‘உள்ளும் புறமுமாகிய ஒளியாகி ஞான வெளியாகி
நின்ற உமையே!’’ (நான் வளர்த்த தங்கை)

- என்று பாடுகின்றார்;.

‘‘ஒன்றாகிப் பலவாகிப் பலவாகப் பண்ட
ஓளியாகி வெளியாகி உருவுமாகி’’

- என்ற தாயுமானவர் பாடலும், கவிஞரின் பாடலும் ஒத்து வந்துள்ளன. இதனையே இன்னும் தெளிவாக

‘‘விண்ணும் மண்ணும் நீயானாய்
வெயிலும் மழையும் நீயானாய்’’
‘‘விளங்கும் அகில உலகமீது
நீயில்லாத இடம் ஏது?’’
- எனப் பாடுகின்றார். காலங்கள் வேறுபட்டிருந்தாலும், காட்சிகள் வேறுபட்டிருந்தாலும் இங்கு அடிப்படைச் சிந்தனை ஒன்றாக அமைந்திருப்பதைக் காணலாம்.
நன்மை கருதியே இறைவனை இவ்வுலகத்தவர் தொழுவர். ஆனால் கவிஞரோ, இந்த உலகில் இறையருள் பரவ வேண்டும், மக்களிடையே காணும் பேதங்கள் மறைய வேண்டும் என்கிறார். இராமலிங்கர் கேட்பது போன்றே,

‘‘சோதி இறையருள் ஆறு பாயவே
பேதம் மறைந்து உய்யவே’’ (கற்புக்கரசி)

- என்று கவிஞர் இறைவனிடம் வேண்டுகிறார்.
பொருளுக்காகவும் திரைக்காட்சிக்காகவும் பட்டுக்கோட்டையார், இறைப்பாடல்கள் பாடினார், கதை ஆசிரியர், படம் எடுப்பவர்; ஆகியோர் விரும்பும் முறையிலேயே இறைவனைப் பற்றி பாடல்கள் எழுதினார் என்பர். பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். இவர்களின் கூற்று சற்றும் ஒவ்வாத வகையில் உள்ளது எனலாம். இதனை,
‘‘சந்திரனைக் கொஞ்சம் கிள்ளி எடுத்தே
சாதிப் பவளத்தில் சேர்த்து வைத்தே
உன்றனைச் செய்தே உலகினுக்கீந்த
அந்த இறைவனின் அன்பினுக்கே
என் நன்றியடடா’’
- என்ற அடிகளில் காணலாம். இவ்வரிகள் திரைப்பாடலன்று. பிறர் விருப்பிற்காகவும், காசுக்காகவும் எழுதப்பட்டவை அல்ல. தன்னை நோக்கி ஓடி வந்த குழந்தையின்பால் ஈடுபட்டுப் பாடிய வரிகள். அவ்வழகிய குழந்தையைத் தந்தது ஒப்பிலியாகிய இறைவனே என்பது கவிஞரின் உட்கிடக்கை. உட்கிடக்கையே உண்மைக் கவிதை என்பது இங்கு நோக்கத்தக்கது.

சமயக் கண்ணோட்டம்

பட்டுக்கோட்டையார் இறைக் கொள்கையினை ஏற்றமுற எடுத்தோதுகின்ற நிலையிலேயே சமயத்தினையும், ஆழ்ந்து நோக்குகின்றார். அவர் சமயத்துறையில், சமயநிலையங்களில் புதுந்துள்ள கேடுகளைச் சாடுகின்றார்.
‘‘பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே
பசியும் சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லே பஜனையில்லே” (338)
- என்று பாடி உண்மையான ஆன்மீகத் தொடர்பான பக்தி மக்கள் உள்ளத்தில் எழ வேண்டும், அதுவே மேன்மை மிக்கது என வலியுறுத்துகின்றார். கோயில்களில் பொருளாட்சியின் ஆதிக்கம் செலுத்தும் அவல நிலையையும் அவர் சாடுகிறார்.

‘‘காசுதந்தால் உன்னைக்
காணும்வழி காட்டுவதாய்
கதவுபோட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?“(339)

என்று கோயிற் கதவுகள் பூட்டப்பட்டு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அநீதியைக் கண்டிக்கிறார். இதிலிருந்து உண்மையான, தூய்மையான நிலை இருந்தால்தான் சமயமானது மக்களின் அகவாழ்விற்குப் பயன்படும் வண்ணம் அமையும் என்பதை விளக்குகிறார்.

பட்டுக்கோட்டையாரின் உள்ளுணர்வாலேயே திரைப்படங்களில் இறைப் பாடல்கள் மலர்ந்தன. பிறருக்காகவோ, பணத்திற்காகவோ அவை எழுதப்படவில்லை. புறவாழ்வுக்குப் பொதுஉடைமையும், அகவாழ்வுக்கு இறைமையும் துணைபுரிவன என்னும் திரு.வி.க.வின் கொள்கையினைப் போலவே பட்டுக்கோட்டையின் இறைக் கொள்கையும் அமைந்துள்ளது.

பாரதி எவ்வாறு ஆன்மீகவாதியாக இருந்து பொது உடைமையினை வரவேற்றுப் பாடினாரோ அது போன்றே பட்டுக்கோட்டையும் பொதுமை நெறியிலிருந்து கொண்டே இறைநெறியினையும் பாடியுள்ளார். இறைவனை ஏற்றுப் பட்டுக்கோட்டையார்; இறைவனின் பெயரால் மனிதனை இழிவுபடுத்துதல், வாழ்வைச் சுரண்டுதல், அடிமைப்படுத்துதல் ஆகிய நிகழ்வுகள் நிகழக்கூடாது என்றும் தெளிவுறுத்துகிறார். மனித நலனை உள்ளடக்கிய மனித வாழ்வை மேம்படுத்துகிற, இறை வழிபாடே உன்னதமானது என்று கூறி இறைவனின் பெயரால் மலிந்து கிடக்கும் சமயச் சடங்குகளையும் மூடப்பழக்கங்களையும் சாடுகின்றார்.

No comments:

Post a Comment