Search This Blog

Tuesday, June 14, 2011

மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்தவர் தகுதிகள் என்னென்ன?

மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்தவர் தகுதிகள் என்னென்ன?

மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்தவர் தகுதிகள் என்னென்ன?

படிப்பறிவின் மூலமாகவோ, பகுத்தறிவின் மூலமாகவோ இந்த மரணமில்லாப் பெருவாழ்வை எட்டவே முடியாது. எட்டும் இரண்டும் அறிந்தால் மட்டுமே இதன் ரகசியம் புலப்படும். இது மாற்றிப் பிறக்கும் ரகசியம் என்று சித்தர்கள் கூறுவார்கள். சுத்தக் கனலை எழுப்பி உடல், மனம், ஆன்மாவில் படிந்துள்ள வினைப்பதிவுகளை அழித்து இறவாது, பிறவாது அமைகிற உடலைப் பெறுவதே மரணமில்லாப் பெருவாழ்வு. இதை அடைந்தவர்கள் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வாழ்வதிலேயே அதிகமாக ஆர்வப்படுவார்கள். வாய்ச்சவாடல் பேசும் வியாபாரிகளுக்கு இது வாய்க்காது. வாய் வேதாந்தம் பேசி வருவாயைக் கூட்டலாமே தவிர வையகத்தில் நிலைக்க முடியாது.

அவரவரும் அவரவர் அறிவை உயர்த்திக் காட்டுவது அவரவர் இயல்பு என்றாலும்,மரணமில்லாப் பெருவாழ்வு ரகசியம் போதிக்க சில அடிப்படைத் தகுதிகள் தேவை என்கிறார் அகத்தியர். அந்த வகையில் சாகாத கால் நின்ற காலம் எவ்வளவு? என்ற கேள்வியைக் கேட்கவும், வேகாத தலை நின்ற சொரூபச் சுடர் உடலில் தெரிகிறதா? என்ற கேள்வியைக் கேட்கவும், போகாத புனல் பற்றி புரிந்து வைத்ததைக் கேட்டு அனுபவபூர்வ உடல் தகுதி பெற்றவரே இதை போதிக்கத் தகுதி பெற்றவர் என்கிறார்.

தேகத்தில் சுடர் பிரகாசமும், உடலில் துரிசுக் களிம்பு இல்லாத தன்மை பெற்றவர்களே இதைப் போதிக்கவும் முடியும் ; மற்றபடி இது மல்யுத்தப் பயிற்சி போல பயிலரங்கில் கற்கிற பாடமல்ல. காரிய குரு பாடத்திற்குப் பிறகு, காரண குருவாகிய இறைவனே அடுத்த பாடத்தை முடித்து வைக்க முடியும். நல்ல குருவின் மூலம் மூன்று பூட்டுக்கள் திறந்த பிறகு இறைவனே குருவாக வந்து ரகசியத்தைப் புலப்படுத்துவார்.

ஆன்மீக வியாபாரிகள் இருக்கிற சரக்குகளை விற்று காசாக்கிய பிறகு, கடைசியாக மரணமில்லாப் பெருவாழ்வு ரகசியத்தையும் கையிலெடுத்து தனது வியாபார தந்திரத்தின் மூலம் ஏதுமறியா அபலைகளுக்கு கண்டபடி போதிப்பார்கள். விரல் நனையாமல் வெண்ணையை எடுத்து விடலாம் என்பார்கள் ; எளிதான வழி என்று இயம்புவார்கள்; காசு பறித்த பிறகு அடுத்த பிறவியில் அடைந்து விடலாம் என்று அணை போடுவார்கள். ஏமாறும் வினையாளர்கள் கூட்டம் அலமாந்து கேட்பார்கள். இந்த பொய்யர்கள் உலகம் தோன்றிய நாள் முதல் பிறந்து இறந்து வாழ்கிறார்கள்.

உண்மை விசுவாசிகள், உயர்வான நல்வினைப் பதிவு உள்ளவர்கள் நல்ல குருமார்களிடம் கற்று, பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, சுத்தக் கனலைப் பெற்று, மூன்று பூட்டுக்களையும் திறந்து, சிவலயத்தோடு  மாற்றிப் பிறக்கும் வகையறிந்து உய்வு பெறுவார்கள். முயல் வேட்டை நடத்தும் நாயை முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இதுபோல மரணமில்லாப் பெருவாழ்வு ரகசியம் போதிக்கும் மனிதனின் முகத்தைப் பார்த்தே கண்டு விடலாம். இதற்கு குறைந்த பட்சத் தகுதி உடம்பின் உப்பின் ஊறல் குறைய வேண்டும். உப்புக் குறைவதன் அடையாளம் குறைந்த ரத்த அழுத்தத்திலும், மயக்கம், களைப்பு வராமல் இருக்க வேண்டும். பாதரச மணியில் நூறுக்கு மேல் ரத்த அழுத்தம் இருந்தாலே அந்த உடல் உப்பின் ஊறல் அதிகமான தேகமாகும். எனவே மரணமில்லாப் பெருவாழ்வு ரகசியம் அறிவதற்கு முன் நல்ல குருவா? என்ற ரகசியத்தை அறிய முயலவும்.......திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment