Search This Blog

Tuesday, June 14, 2011

அண்ணா பற்றி அறிந்த அரிய தகவல்கள்.

அண்ணா பற்றி அறிந்த அரிய தகவல்கள்.
-முனைவர் மா.  தியாகராஜன்.
முன்னுரை
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல;”
– என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவார் தம் வாக்கிற்கிணங்க. பேரறிஞர் அண்ணா அவர்கள். தம்மை விரும்பித் தம்பியாய் வந்தோரை என்றும் பிணித்திருக்கும் வகையிலும், தம் சொல்லை ஏற்றுக் கொள்ளாத பகைவரும் அண்ணாவுடன் வந்து இணைந்திருக்க விரும்பும் வகையிலும் பேசுகின்ற பேச்சாற்றல் மிக்கவராக விளங்கினார்கள். அண்ணா பேச்சாளராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும். நாடக ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ் மொழி உயர்ந்திட, தமிழர் கலைகள் மலர்ந்திட, மனித நேயம் சிறந்திட, மதவெறி தொலைந்திட அறிஞர் அண்ணா தம் எழுத்தாற்றலையும் - பேச்சாற்றலையும் பயன்படுத்தினார்.
அண்ணா பார்ப்பதற்கு எளியவர் - பழகுவதற்கு இனியவர் - தம்மைத் தரக்குறைவாகத் தாக்கிப் பேசுபவரிடத்தும் இன்சொல்லே பேசும் இயல்புடையவர் - பகைவருக்கும் அருளும் பண்புடையவர் - அவர்தம் வாழ்வும் வாக்கும் உலக மக்கள் அனைவராலும் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. அவை சமுதாயத்தில் நேர்மையும் தூய்மையும் மலரத் துணை புரிபவை.
பொருளை விரும்பாத புனிதர்
சென்னையில் அண்ணா. அவர் தம் துணைவியார் திருமதி இராணி அண்ணாதுரை. வளர்ப்பு மகன் பரிமளம் முதலிய குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்தார்கள். காஞ்சிபுரத்தில் அண்ணா அவர்களின் தாயார். இரண்டாவது வளர்ப்பு மகன் இளங்கோவன் முதலிய குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்தார்கள். இந்த இரண்டு குடும்பங்களுக்குரிய செலவுகளைச் செய்து குடும்பங்களை நிர்வகிக்கின்ற பொறுப்பு அண்ணா அவர்களுக்கு இருந்தது.
நாடறிந்த தலைவராகவும். பினனர்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் விளங்கிய அண்ணா. தம் குடும்ப நடைமுறைச் செலவுகளைச் செய்வதற்குக் கூடத் துன்பப்பட்டுள்ளார் என்பது நம் அனைவருக்கும் வியப்பளிக்கும் செய்தியாகும். அண்ணா முதலமைச்சர் பதவிக்கு வந்த பின்னரும் அவர்தம் குடும்பப் பொருளாதாரச் சிக்கல் தீரவில்லை. அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன். தமக்கு முன்னால் ஆட்சி புரிந்தவர்கள் அமைச்சர் பணிக்காகப் பெற்ற ஊதியத்தில் பாதியை மட்டுமே தாம் பெறப் போவதாக அறிவித்தார். அதனால் அண்ணாவுக்கு முன்னர் முதலமைச்சராக இருந்த  பக்தவச்சலம் அவர்கள் வாங்கிய மாத ஊதியம் ஒர் ஆயிரத்தில் (ரூ1000/-) தில் பாதி ஐந்நூறு (ரூ500/-) ஊதியமும், வீட்டு வாடகைப் படி ரூ.இருநூற்றைம்பது (ரூ.250/-). மகிழுந்துக்குரிய பராமரிப்புச் செலவு ரூ. இருநூற்றைம்பது (ரூ.250/-) ஆக மொத்தம் ஒரு மாதத்திற்கு ஆயிரம் மட்டுமே ஊதியமாகப் பெற்றார். இந்தப் பணம் அவருடைய குடும்பச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. அண்ணா கட்சிக் கூட்டங்களுக்கு உரையாற்றச் செல்லும்போது அவருக்கு ஒவ்வொரு கூட்டத்திற்கும் ரூ.நூறு (ரூ.100/-) வீதம் கிடைக்கும். அந்தத் தொகையும் அவர் தம் குடும்பச் செலவைச் சரி செய்வதற்குத் துணை புரிந்தது.
அன்றைய நிலையில் அரிசி, சர்க்கரை தட்டுப்பாடு இருந்தது. உணவுப் பங்கீட்டு அட்டை மூலம் வழங்கப்பட்டு வந்த அரிசி. சர்க்கரை ஆகியவை குடும்பத்திற்குப் போதுமானதாக இல்லை. சென்னையில் அண்ணாவின் குடும்பத்திற்கு நாள்தோறும் வருகின்ற விருந்தினர்களும், நண்பர்களும் அதிகம். அதனால் உணவுப் பங்கீட்டு அட்டையில் கூடுதலாக ஒருவர் பெயரைச் சேர்த்தால் அரிசி, சர்க்கரை மேலும் சிறிது கூடுதலாகக் கிடைக்கும் என்பதால் தம் குடும்ப அட்டையில் தம் அச்சகத்தில் பணியாற்றிய ஒருவர்பெயரையும் அண்ணா அவர்களின் துணைவியார் திருமதி. இராணி அம்மையார் சேர்த்து விட்டார்.
ஒரு நாள் தற்செயலாகத் தம் குடும்ப அட்டையைப் பார்த்த அண்ணா, அதில் தம் குடும்ப உறுப்பினராக இல்லாத ஒருர்; பெயரும் இருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டார். அவர் தம் துணைவியாரிடம், “நாமே இத்தகைய செயலைச் செய்யலாமா?” என்று கேட்டார். அதற்கு அவர் தம் துணைவியார், “அவர் நம் வீட்டில் உள்ள அச்சகத்தில் பணியாற்றுபவர். தினமும் பகல் உணவை நம் வீட்டில் தானே அவர்உண்கிறார். அதனால் அவர் பெயரைச் சேர்த்தேன்” எனத் தம் செயலுக்கு விளக்கம் அளித்தார். ஆனால் அண்ணா அதனை ஏற்கவில்லை. உணவுப் பங்கீட்டுக் குடும்ப அட்டையில் குடும்பத்தினர் அல்லாதவர்பெயர் எதுவும் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறினார்.
அண்ணா முதலமைச்சராகும் முன்னர் அவருக்கென வங்கிக் கணக்குக் கூட இல்லை. அவர்முதலமைச்சரான பின்னர் அவருடைய மாத ஊதியக் காசோலை முதலியவற்றை மாற்றிப் பணம் பெறுவதற்காகவே ரூ.பத்து (ரூ.10/-) மட்டும் செலுத்தி ஒரு வங்கிக் கணக்கு அண்ணா பெயரில் தொடங்கப்பட்டது என்னும் செய்தி அண்ணா பொருளை விரும்பாத புனிதராக வாழ்ந்தார் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. நம் நினைவில் அண்ணா இமயமாக உயர்ந்து காட்சியளிக்கிறார்.
மாமனிதர் அண்ணா
பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆன பின்னர் எதிர்க் கட்சியினர் அவருடைய அரசுக்கு எதிராகக் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அந்த ஊர்வலம் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த – தி.மு.க ஆதரவு நாளிதழாகிய ‘முரசொலி’ அலுவலகம் வழியாகச் சென்ற போது. ஊர்வலத்தினர் ‘முரசொலி’ அலுவலகத்தின் மீது கற்களை வீசித் தாக்கினா;. அங்கே வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர்கருணாநிதி ஆகியவர்கள் உருவம் வரையப்பட்டிருந்த ஓவியச் சீலையைக் (பேனர்) கிழித்தனர். முரசொலி அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களைத் தூக்கி எறிந்து சேதம் விளைவித்தனர்.
முதலமைச்சர் அண்ணா அடுத்த நாள். அன்றைய காவல்துறை ஆணையர் திரு. ஈ. சிங்காரவேலு அவர்களை அழைத்து, “காவல்துறையினர் கவனமாகவும், திறமையாகவும் செயல்பட்டிருந்தால் இத்தகைய சேதங்களைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா?” என்று கேட்டார். காவல் துறை ஆணையர்நடந்து முடிந்ததற்கு வருந்துவதாகவும்இனி இவ்வாறு நிகழாமல் தாம் பார்த்துக் கொள்வதாகவும்தெரிவித்தார்.
அதற்கு மறுநாள் காவல் துறை ஆணையர், அண்ணா அவர்களுக்கு. ஐந்நூறு ரூபாய்க்கான தம் சொந்தக் கணக்கிற்குரிய வங்கிக் காசோலை ஒன்றையும் அத்துடன் இந்தத் தொகையை ஊர்வலத்தினர்ஏற்படுத்திய சேதங்களைச் சரி செய்வதற்கு அளித்து விடுமாறு வேண்டிக் கொள்ளும் கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியிருந்தார்.
உடனே அண்ணா“உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். தாங்கள் அனுப்பிய காசோலையைப் பணமாக மாற்றாமல் தங்கள் நினைவுப் பரிசாசக வைத்துக் கொள்கிறேன்” என்னும் பொருள்பட ஒரு கடிதம் எழுதி ஆணையருக்குத் தம் நேர்முக உதவியாளர் மூலமாக அனுப்பி வைத்தார்.
காசோலையைத் திருப்பி அனுப்பினால் காவல் துறை ஆணையர் வருந்துவார். காசோலையைப் பணமாக்கிச் சேதங்களைச் சரி செய்வதற்குப் பயன்படுத்தினால் நடைபெற்ற வன்முறை முழுமைக்கும் ஆணையர்க்குத் தண்டனை அளித்ததாகி விடும் என்பதால் அண்ணா ஆணையரிடமிருந்து பணத்தையும் பெறாமல். அவர் அளித்த காசோலையையும் நினைவுப் ரிசாக வைத்துக் கொள்கிறேன் என்றுதெரிவித்தார். இதன் மூலம் அண்ணாவின் பெருந்தன்மை. நாகரீக உணர்வு ஆகியவற்றை உணர்ந்த ஆணையர், கடிதம் கொண்டு வந்த உதவியாளரிடம். He is Really a great man – ‘உண்மையிலேயே அண்ணா ஒரு மாமனிதர்’ என மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.
பகை கொண்டவருக்கு உதவிய பண்பாளர்
1948 ஆம் ஆண்டு. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாருடன் இணைந்து அவர் தம் இயக்கத் தளபதி போலச் செயல்பட்டு வந்தார். அப்போது அந்த இயக்கத்தின் முன்னணிப் பேச்சாளருள் ஒருவராக விளங்கிய பட்டுக கோட்டை அழகிரி அவர்களுக்கு அண்ணா அவர்கள் மீது பகையுணர்வு இருந்தது. தம் கசப்புணர்வை அழகிரி அவ்வப்போது மேடைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அண்ணா அழகிரியைப் பாசமுடன் ‘அண்ணன்’ என்று தான் அழைத்து மகிழ்வார்.
அழகிரி காசநோயால் பாதிக்கப்பட்டார். தாம்பரம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். வறுமையும், ஆதரவற்ற நிலையும் அழகிரியை வருத்தின. தந்தை பெரியார் கூட அழகிரிக்கு உதவவில்லை. அந்த நிலையில் அண்ணா அழகிரிக்கு உதவ விரும்பினார். தாம் நடித்த ‘சந்திரோதயம்’ என்னும் நாடகம் நடத்தி அதன் மூலம் கிடைத்த தொகையைத் திரு மதியழகன் மூலமாகத் திரு அழகிரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியால் நெகிழ்ச்சியுற்ற அழகிரி உள்ளம் உருக – கண்ணீர் பெருக. மதியழகனிடம். “இது வரை நான் நம்பியவர் என்னைக் கைவிட்டார். ஆனால் நான் யாரை இழிவாகத் திட்டித் தீர்த்தேனோ அவர்எனக்கு உதவியுள்ளார். மதியழகா! ன் நன்றியை அண்ணாவுக்குச் சொல்லப்பா” என்று கூறினார்.
அருளின் உருவம் தான் அறிஞர் அண்ணா
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்” என்று வள்ளல் பெருமானார் கூறியுள்ள உயிர், இரக்கம் அருளாளர்களிடம் மட்டுமே அமைவதாகும். தம்முடன் தொடர்பில்லாதவர்களிடத்தும் இரக்கம் செலுத்தும் அருளாளர் வரிசையில் அறிஞர் அண்ணாவும் வைத்துப் போற்றத் தக்கவர் ஆவார். இதனை அவர் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் மூலம் நாம் உணரலாம்.
ஒருமுறை, கத்தோலிக்க சமயத் தலைவர் போப் ஆண்டவரைத் தரிசிக்கின்ற வாய்ப்பு அண்ணாவுக்குக் கிடைத்தது. சந்திக்கும் ஒவ்வொருவரும் போப் அவர்களிடம் ஒரு வரம் கேட்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது அண்ணா. கோவா விடுதலைப் போராட்ட வீரர் ‘ரானடே’ என்பவர்  போர்ச்சுகீசிய அரசால் சிறை செய்யப்பட்டு நீண்ட காலமாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்திருந்ததால், அவரை விடுதலை செய்ய உதவுமாறு போப் ஆண்டவரிடம் வேண்டினார். அண்ணா கேட்ட வரம் போப் ஆண்டவரை வியப்பில் ஆழ்த்தியது தமக்காக எதுவும் கேட்காமல், தமக்குத் தொடர்பில்லாத ஒருவருக்காக வரம் வேண்டிய அண்ணாவின் அருள் உள்ளம் போப் அவர்களைக் கவர்ந்தது. போப் ‘நிச்சயம் உதவுவேன்’ என்றார். அவர்தம் முயற்சியால் போர்ச்சுகீசியச் சிறையில் வாடிய ‘ரானடே’ விடுதலை ஆனார்.
அண்ணாவின் அருள் உள்ளத்தை வியக்கும் இன்னொரு நிகழ்ச்சி. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின் உடல் மிகவும் நலிவுற்றுத் தம் இல்லத்தில் அண்ணா படுத்திருந்த போது, பச்சிளங் குழந்தையுடன் வந்த பெண்ணொருத்தி – தன் கணவன் ஒரு வழக்கிலே சிக்கிக் கொண்டதாகவும் அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் நாளை காலை தூக்குத் தண்டனை நிறைவேற உள்ளது என்றும் எப்படியாவது தன் கணவனைக் காப்பாற்றித் தனக்கு வாழ்வு தருமாறும் அண்ணாவிடம் வேண்டினாள். உடனே அண்ணா மதுரைச் சிறை அலுவலர்க்குத் தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு ஆணையிட்டார். தாம் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் அண்ணா மற்றொரு உயிரைக் காக்க ஆணை வழங்கினார்.
மற்றொரு நிகழ்வு. கும்பகோணம் என்னும் நகரில் கொடிய நோயால் தாக்கப்பட்ட ஒருவர் அவர் உயிர்காக்கும் அரிய மருந்து ஒன்று எங்கும் கிடைக்காமல் துன்புற்றுக் கொண்டிருந்தார். அந்த மருந்து அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது என்பதை அறிந்த அவர் தம் உறவினர்கள் அந்த மருந்தை எப்படி வாங்கி வருவது? என்று எண்ணித் தவித்தார்கள். இச்செய்தியை அமெரிக்காவில் இருந்த அண்ணா அறிந்தார். தமிழ்நாடு திரும்பும் போது அந்த மருந்தைத் தாமே வாங்கிச் சென்று நோயாளர்க்குக் கொடுத்து உதவினார்.
மேலும் ஒரு நிகழ்வு. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது. அன்றைய மரபுப்படி அவர்வீட்டிற்கு வெளியே கையில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் விரைப்பாக நின்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட அண்ணா, பணி நேரம் முழுவதும் இப்படி ஒருவர் நிற்பது தமக்கு வருத்தம் தருவதாகக் கூறிக் காவலர் அங்கே நிற்க வேண்டாம் எனக் கூறினார். ஆனால் காவல் துறையினர் அது பாதுகாப்பு ஏற்பாடு அதனை நீக்க இயலாது எனத் தெரிவித்தனர். உடனே அண்ணா, “அப்படியானால் அவரைச் சாதாரண உடையில் ஓர் இருக்கையில் அமரச் செய்யங்கள்” என்று கூறி. காவலர் துயரை மாற்றினார். - இங்ஙனம் அண்ணா பிறர் துன்பத்தையும் தம் துன்பமாக எண்ணி இரங்கிய அருளாளராக விளங்கினார்.
அண்ணாவின் அருங்குணம்
1957ஆம் ஆண்டு அண்ணா காஞ்சிபுரம் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருடைய இயக்கத்தைச் சேர்ந்த சிலார், அண்ணாவின் பிறப்பை இழிவுபடுத்தும் வண்ணம் தரக் குறைவான கருத்துக்கள் எழுதப்பட்ட விளம்பரத் தட்டி ஒன்றை அண்ணா வீட்டிற்கு எதிரில், தெருவில்அனைவரும் பார்க்கும்படி அமைந்திருந்தனர். அதனைப் படித்த அண்ணாவின் தம்பியர் ஆவேசம் அடைந்தனர். புயலைப் போலப் பொங்கி எழுந்தனர். அவர்கள் அண்ணாவிடம் “அந்த விளம்பரத் தட்டியை நாங்கள் அகற்றப் போகிறோம்” என்றார்கள். ஆனால் அண்ணா. “வேண்டாம். அந்தத் தட்டியில் உள்ளவற்றைப் பகலில் செல்பவர்கள் மட்டும்தானே படித்தறிய முடியும்? இரவில் செல்பவர்களும் படித்தறியும் வண்ணம் நம் செலவில் வாயு விளக்கு ஒன்றை அமைத்திடுங்கள்” எனக் கட்டளை இட்டார். அதன்படி அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த விளம்பரத் தட்டிக்கு அண்ணாவே ஒளி விளக்கு அமைத்துத் தந்தார். இச்செயலால் நாணமுற்ற மாற்று இயக்கத்தினர். தாங்கள் அமைத்த விளம்பரத் தட்டியைத் தாங்களே அகற்றி விட்டனர்.
1962 ஆம் ஆண்டு. அண்ணா அவர்கள் தொடங்கிய இயக்கம் வலிமையான எதிர்க்கட்சியாக விளங்கிய நேரம். அப்போது. ’பூவிருந்தவல்லி’ நகரில் பொதுக் கூட்டம். அதில் உரையாற்றுவதற்கு அண்ணா ‘மாங்காடு’ என்னும் ஊரிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அலைகடலென ஆர்ப்பரித்து வந்த ஊர்வலத்தில் அண்ணா உயரமான அலங்கார ஊர்தியில் அமர்ந்தவாறு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கே... அன்றைய வேளாண்துறை அமைச்சர் திரு. எம். பக்தவச்சலம் எதிர்பாராமல் வந்து ஊர்வலத்துக்கிடையே சிக்கிக் கொண்டார். இதனை அண்ணா பார்த்து விட்டார். உடனே அவர் தம் ஊர்தியிலிருந்து இறங்கினார். திரு பக்தவச்சலம் இருந்த இடத்திற்குச் சென்றார். அவருக்கு எந்த இடையூறும் இல்லாமல் அவரை அனுப்பி வைத்த பின்னர் மீண்டும் தம் ஊர்தியில் ஏறி அமர்ந்து அண்ணா ஊர்வலத்தில் சென்றார்.
திரைப்படத் தயாரிப்பாளர் திரு. ஏ. பி. நாகராசன் சிலம்புச் செல்வர் ம. பொ. சி அவர்களுக்குப் பணமுடிப்பும், மகிழுந்து ஒன்றும் அன்பளிப்பாக வழங்கினார். அதனைக் கண்டு, நம் தலைவருக்கு இதுபோல எதுவும் தரவில்லையே என எண்ணி ஏக்கமுற்ற கவியரசு கண்ணதாசன் பேரறிஞர் அண்ணாவிடம்,“அண்ணா! ஏ. பி. நாகராசன் ம. பொ. சி அவர்களுக்கு வழங்கியதைக் காட்டிலும் மேலும் சிறப்பாக நான் தங்களுக்குப் பணமுடிப்பும் மகிழுந்தும் வழங்க விரும்புகிறேன் அனுமதி தாருங்கள்” எனக் கேட்டார்.
அதுகேட்ட அண்ணா, “ம.பொ.சி தம் இயக்கத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார். அந்த நல்லவருக்கு இத்தகைய உதவி கிடைத்ததை எண்ணி நாம் மகிழ வேண்டும். அதற்கு மாறாக. ‘ம.பொ.சி அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குகிறார்களே... நாமும் நம் அண்ணாவுக்கு வழங்க வேண்டும் என்று எழுகின்ற உங்கள் ஆர்வத்தை நான் வரவேற்கவில்லை. எனக்கும் நிதி நிலை சரியில்லைதான், ஒரு மகிழுந்து வாங்க இயலாமல்தான் நான் இருக்கிறேன். இருந்தாலும் என்னால் இயன்ற வரை எழுதிப் பிழைக்க விரும்புகிறேன். என்னால் முடியவில்லை என்றால் நானே மக்களைப் பார்த்துக் கேட்பேன்” என்று கூறினார். மேற்குறித்துள்ள நிகழ்வுகள் அண்ணாவின் அளவிட முடியாத அருங்குணத்தை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
அண்ணாவின் சொல்லாற்றலும் நுண்ணறிவும்
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக இருந்த திரு. விநாயகம். சட்டமன்றத்தில் புளி விலை ஏறி விட்டதைப் பற்றிக் காரசாரமாகப் பேசினார். அப்போது அவர்,“எங்கள் ஆட்சியில் புளி விலை குறைந்திருந்ததே அது யார் சாதனை?” என்று கேட்டார்.  உடனே அண்ணா. “அது புளிய மரத்தின் சாதனை” என்றார். அண்ணாவின் பதில், கேள்வி கேட்ட விநாயகம் உள்ளிட்ட அனைவரையும் சிரிக்கச் செய்தது. அவையில் சிரிப்பொலி அரிய சங்கீதமாய்ப் பொங்கியது.
அண்ணா அவர்கள் ஒருமுறை கிறித்தவக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்ற போது. மேடையில் பேசத் தொடங்கும் முன்னர்த் தமக்கு அளிக்கப்பட்ட தலைப்பு என்ன? என்று கேட்டார். ‘தலைப்பு இல்லை’ என்று மாணவர் செயலர் கூறினார். உடனே அண்ணா, ‘தலைப்பு இல்லை’ என்பதையே தலைப்பாகக் கொண்டு ஒரு மணி நேரம் தமிழ் உணர்வு பெருகும் வண்ணம் உரையாற்றினார்.
வேறு ஒரு பொதுக்கூட்ட மேடையில் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணாவிடம், “எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?” என்று கேட்டார்.  “பேசுவேன்” என்று அண்ணா கூறினார்.உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் “ஆற்றங்கரையினிலே” என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். ‘அண்ணா எப்படிப் பேசுவாரோ?’ என அவையினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
அண்ணா எழுந்தார், “சிந்து நதி என்னும் அந்த ஆற்றங்கரையோரத்தில் தான் ஆரிர்கள் முதன் முதலாக வந்து குடியேறினார்கள்.” என்று கம்பீரமாகத் தொடங்கினார். கையொலியால் அவை அதிர்ந்தது. அந்த ஒலி அடங்க நெடு நேரமாயிற்று. தலைப்பையொட்டி ஏறத்தாழ ஒரு மணிநேரம் அண்ணா அழகிய உரை வழங்கினார். தம் கொள்கைகளை அழுத்தமாக முழங்கினார்.
அன்னைத் தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் அண்ணா புலமை நலம் மிக்கவராக விளங்கினார். ஒருமுறை அண்ணா வெளிநாடு சென்ற போது அங்கே ஒருவர் அண்ணாவின் ஆங்கில அறிவை ஆய்ந்தறிய ஆவலுற்றார். அவர் அண்ணாவிடம், ‘ஒரே ஆங்கிலச் சொல் தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு சொற்றொடர் சொல்லுங்கள்” என்றார்.
அண்ணா சற்றும் தயங்காமல், “sentence never start with because because because is a conjunction” என்று சொல்லிக் கேட்டவரை மலைக்க வைத்தார். இங்னம் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் அண்ணாவின் நுண்ணறிவையும் சொல்லாற்றலையும் வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.
முடிவுரை
அண்ணா தாமும் ஓர் எழுத்தாளராக இருந்தாலும் மற்றை எழுத்தாளர் பலரையும் வேடிக்கையாக அவர்ஆறு வகையினராகப் பாகுபடுத்திக் குறிப்பிட்டுள்ளார். அவை.
1. தம் மனத்தில் தோன்றியதை எழுதி, யாருக்கு எது தேவையோ அதனை எடுத்துக் கொள்ளட்டும் என எழுதும் அலை எழுத்தாளர்கள்
2.  புராணக்கதை மூலம் கற்பனை கலந்து எழுதும் கலை எழுத்தாளர்கள்.
3. இவ்வளவு பணம் கொடுத்தால் இப்படி எழுதுவேன் என ஊதியத்திற்கு ஏற்றவாறு எழுதும் விலை எழுத்தாளர்கள்.
4ஒருநாள் எழுதாவிட்டாலும் ஊதியம் கிடைக்காது. வீட்டில் உலை கொதிக்காதே என வருந்தும் உலை எழுத்தாளர்கள்.
5அழகிய நடையில் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்து ஆதாயம் தேடும் வலை எழுத்தாளர்கள்.
6உண்மை நிலையில் நின்று எழுதும் நிலை எழுத்தாளர்கள்
இவ்வாறு எழுத்தாளர்களை வகைப்படுத்தியுள்ள பேரறிரஞர் அண்ணா தாமும் ஓர் எழுத்தாளர் என்பதால் அவர் பிரித்துள்ள வகைப்படி அவரை நிலை எழுத்தாளர் என்று நாம் கூறலாம். எனினும் ஏழாவதாக ஒருவகையில் சில எழுத்தாளர்களைப் பகுத்துப் பார்க்கலாம் என்றும் நான் கருதுகின்றேன்.
7. எத்தகைய எதிர்ப்புவரினும் கொண்ட கொள்கையில் அசையாது மலைபோல் நிற்பவர்கள். படிப்போர்மலைக்கத்தக்க அளவிற்கு அளக்கலாகா அறிவுடன் விளங்குபவர்கள். அவர்களை மலை எழுத்தாளர்கள் என்று குறிப்பிடலாம். அந்த வகையில் அண்ணா அவர்களை மலை எழுத்தாளர் என்று கூறலாம்.
எழுத்தால் பேச்சால் மக்களைக் கவர்ந்த பேரறிஞர் அண்ணா இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதராக விளங்கினார். கடமைகண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தார். அவரால் தமிழ் மொழியின் நிலை உயர்ந்தது. தமிழ் இனத்தின் தலை நிமிர்ந்தது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனக் கொண்டு வாழ்நாள் முழுவதும் உழைத்த பேரறிஞர் அண்ணாவின் புகழைப் போற்றுவோம் அவர் தந்த கருத்துகளை நம் நெஞ்சில் ஏற்றுவோம். அவர் காண விரும்பிய புதிய சமுதாயம் படைக்கச் செயல் ஆற்றுவோம்.
சொல்லோவியத்திற்கு உதவியவை
1 திருக்குறள்
2திருவருட்பா
3அண்ணா வாழ்வும் பணிகளும் - தொகுதி – 1
4அண்ணா வாழ்வும் பணிகளும் - தொகுதி – 2
5. அண்ணா வாழ்வும் பணிகளும் - தொகுதி – 3
6. அண்ணா வாழ்வும் பணிகளும் - தொகுதி – 4
7. மூன்று முதல்வர்களுடன்
8 அண்ணா ஓர் அருங்குணப் பெட்டகம்
9தினமலர் - வாரமலர் - 13-6-1998.
 

No comments:

Post a Comment