Search This Blog

Tuesday, June 14, 2011

ஆண்டாளின் இரு பெரும்பாடல்கள்!

ஆண்டாளின் இரு பெரும்பாடல்கள்!
-முனைவர் மா.  தியாகராசன்.
தமிழர் கொடை
ஆண்டாள்! பெண்களின் திலகம். திருத்துழாய்ச் செடியின் கீழ்க்கிடந்த வைரத்துண்டு! பெரியாழ்வாருக்குக் கிடைத்த பெருநிதியம். கவிஞனின் ரோசாக்கனவுகள் கூடச் சில வேளைகளில் கலைந்து விடுவதுண்டு. ஆனால், உள்ளத்தில் ஆழப்பதிந்த கண்ணன் என்னும் கனவு கலையவேயில்லை. ஆண்டாள் கண்ணனுக்காகவே பிறந்த மானிடப் பிறவியா? கண்ணனுக்காகவே சமைந்த மரகதச் சிலையா? கண்ணனையே கரம் பற்றி வாழ்ந்த கற்பகப் பூங்கொம்பா? ஒரு சீவாத்மாவின் பயணம் என்பது போல் இல்லாமல், கண்ணன் எனும் பரமாத்மாவுடனேயே கைகோத்துத் திரிந்தது ஆண்டாள் எனும் ஆத்மா! விண்ணை மண்ணுக்கு இழுத்து வருவது அதிசயம். கண்ணனைத் திருவில்லிபுத்தூருக்கே ஆண்டாள் வரச் செய்தது பேரதிசயம் புயலுடன் போராடித் தென்றலைக் கைப்பற்றுவதைப் போல் மானிடக் கனவுகளுடன் போராடி இறைமையைக் கைப்பற்றிய தமிழ்க்கொடி ஆண்டாள். கண்ணனைப் பற்றிய வண்ணக் கனவுகள்தாம் காமன் வழிபாடாய் நாச்சியார் திருமொழியின் எச்சமாய்த் திகழ்கிறது. கண்ணனோடு தோழமை கொள்ளத்துடிக்கும் உயிர்த்துடிப்புத்தான் திருப்பாவையில் இறுகி உறைந்திருக்கிறது. ஆண்டாளின் உள்ளத்தில் பதிந்த காதல் விதைக்கு உரமாய் – நீராய் அமைந்தது தமிழல்லவா! அவள் உள்ளத்தில் வளர்ந்த காதல், தமிழாய் வளர்ந்தது. தமிழ், காதலாய் வளர்ந்தது. பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளம் போல் ஆண்டாளின் உள்ளம் கண்ணன் என்னும் பரவெளியையே நோக்கிச் சென்றது. கடல் என்னும் திரவச் சமவெளியில் எது ஆற்று நீர்? எது ஊற்று நீர்? எல்லாம் ஒன்றுதானே! கண்ணன் என்னும் மோனப் பெருவெளியில் கலந்த பின் ஆண்டாள் என்னும் மானுடப் பெண்ணுக்குத் தனித்துவம் எது? இந்தியரின் காதல் பற்றி படிமங்களில் பிறந்த ரதி, மன்மதன், காமன் ஆகிய படிமங்கள் சூக்குமமானவை; கண்ணன் படிமம் ஒன்றே தூலமானது; அப்படிமத்துக்குக் தகுந்த இணையாக வாழ்க்கைத் துணையாகத் தமிழர் அளித்த கொடையே ஆண்டாள். ஆண்டாளின் உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் உயிர்ச் சத்தாய் விளங்கியது கண்ணன் என்னும் உணர்வே!.
கண்ணன் எனும் உணர்வு
வறண்ட பாலையில் எதிர்பாராமல் குதித்தோடிய சீவநதி போல் இல்லை ஆண்டாளுக்குக் கண்ணன் அருள் பாலித்தது! திருந்திய கழனியில் மெதுவாகப் பாய்ந்து பரவும் நீர்போல் ஆண்டாள் உள்ளத்தில் கண்ணன் எனும் காதல் உணர்வு பரவியது. கண்ணன் என்னும் உணர்வுதான் ஆண்டாளின் தாய்ப்பால். கண்ணன் என்னும் ஒரு சொல்லையே அவள் பாராயணம் செய்தாள். தென்னந்தமிழுடன் தென்றலும் சேர்ந்து பிறந்ததைப் போல் கண்ணன் என்னும் நாமத்துடன் அவளுக்குக் காதலும் சேர்ந்து பிறந்தது.
ஆண்டாள் வாழ்ந்த திருவல்லிப்புத்தூர்தான் ஆயர்பாடி அங்குள்ள பெண்களெல்லாம் இடைப்பெண்கள். அவர்களுள் ஒருத்தி ஆண்டாள். இவள் பேச்செல்லாம் இடைப்பேச்சு; முடை நாற்றம்; தாம் பாடிய பாடல்கள்மூலம் ஆண்டாள் காட்டிய பாவனையை நாம் வேறெப்படி விளக்க முடியும்?
இரு பெரும் பாடல்கள்
திருப்பாவை, நாச்சியார் திருமொழி இரண்டிலும் பக்திச்சுவை உண்டு; காதல் சுவை பேரளவுண்டு. இவை ஆண்டாள் காதலால் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடிய காதல் பக்திப் பாடல்கள், பருவம் தந்த குறிஞ்சிக் கனவுகள்!
‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்ற வைராக்கியத்துடனேயே கண்ணன் எனும் பெருந்தெய்வத்தைக் கரம் பற்றிய காரிகை. ஆண்டாள் பாடல்கள் ஒவ்வொன்றும் இவ்வுறுதியின் உறை பொதி வடிவம்!
திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடல் ஆண்டாள் கண்ணனுடன் கலக்க இருக்கும் – கலந்த அனுபவத்தையே பேசுகின்றன. மார்கழி மாதத் திருநோன்பாகத் திருப்பாவை அமைய, தைத்திங்களில் காமனை வழிபட்டுக் கண்ணனைக் கண்டதாக நாச்சியார் திருமொழி அமைகிறது. காலம், இடம் கடந்த கண்ணன், பெரியாழ்வார் பாடல்களில் குழந்தையாக மாறுகிறான். ஆண்டாளின் நினைவிலோ, காதலனாக மலர்ச்சியடைகிறான். பிருந்தாவனக் கண்ணனாகப் பொலிவு பெறுகிறான். சொந்தங்களுக்கும் பந்த பாசங்களுக்கும் கட்டுப்படாத கண்ணன், ஆண்டாளின் தமிழுக்குக் கட்டுப்படுகிறான். ஆண்டாளை ஆட்கொள்கிறான்; அவளிடம் ஆட்படுகிறான்!
பூப்பும் பெண்மையும் அடைந்த போது ஆண்டாளின் மோகன உணர்வு கங்கையைப் போல் வீழ்ச்சியடைகிறது. ஆனாலும் திருப்பாற்கடலில் அது கலந்து ஒன்றுபட்டுப் போனபோது தான் ஆண்டாளின் மனவலிமை எவ்வளவு வைராக்கியமானது என்பது புலப்படுகிறது. அவள் பெண்களுள் பிடிவாதக்காரிநினைத்ததை முடித்த தமிழ்ப்பாவை!
திருப்பாவை
ஆண்டாளின் தனி வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் மன முறிவுமே கண்ணன் மேல் காதல் கொள்ளும் இறையனுபவமாக மாறித் திருப்பாவையாக வெளிவந்தது என்ற கருத்து உண்டு இக்கருத்தின் வன்மை மென்மை ஒருபுறமிருக்கட்டும். ஆண்டாள் கண்ணன் மீது காதல் கொண்டவுடன் அவள் மேற்கொண்ட செயற்பாடுகள் என்ன? கண்ணன் என்னும் தெய்வ அனுபவத்தைப் பெறுவதற்குரிய வழியாக முதலில் அவள் பாவை நோன்பினை மேற்கொள்கிறாள். படிப்படியாகக் கண்ணன் என்னும் அனுபவத்தை அடைகிறாள். தன் தோழியரையும் இறையனுபவம் பெறத் தூண்டுகிறாள். இதோ! திருப்பாவை ஆண்டாளின் அனுபவத்தைப் பேசுகிறது:
முதல் ஐந்து பாடல்களில் தன் தோழிமார்களை அழைத்துப் பாவை நோன்பின் மாண்பினைச் சிறப்பித்துப் பேசுகிறாள். மார்கழித் திங்களில் மதிநிறைந்த நன்னாளில் நீராடினால் என்ன கிட்டும்? ‘நாராயணன் நமக்கே பறை தருவான்’ என்று கண்ணனிடம் பறைபெறுகின்ற நோன்பு நோக்கத்தைச் சுட்டுகிறாள். தங்களுக்கு மட்டுமா கண்ணனின் அருள்பாலிப்பு? ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்’ பேற்றினைக் கண்ணன், உலகுக்குத் தருவான். மற்றும், கண்ணனை ‘வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால்’ ஆன பிழையனைத்தும் தீயினில் தூசாகும் என்று நோன்பின் பயன் விளைவினை ஆண்டாள் கூறுகிறாள். அடுத்த பத்துப் பாடல்களில், ஆண்டாள் தன் தோழியரைத் துயில் எழுப்புகிறாள்; நீராட அழைக்கின்றாள். ஆண்டாள் முன்னே எழுந்தால் தன் தோழியரை அன்புடன் கடிந்து எழுப்புவதும் தோழியர் ஆண்டாளைக் கடிந்து எழுப்புவதும் நளினமான விளையாட்டு. இதோ அப்படியொரு விளையாட்டைத் தமிழ்ப்பாவை ஆண்டாள் நமக்குப்படம் பிடித்துக் காட்டுகிறாள்;
“எல்லே இளங்கிளியே
இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின்
நங்கையீர் போதருகின்றேன்
வல்லீர்கள் நீங்களே
நானேதா னாயிடுக
ஒல்லை நீ போதாய்; உனக்
கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ
போந்தார்போத்
தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை
மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப்
பாடேலோ ரெம்பாவாய்”
என்று பாடுகிறாள். என்ன தோழமை உணர்வு? தோழியர் ஒருவருக்கொருவர் உரிமையுடன் ஏசிக்கொள்வதும் பேசிக் கொள்வதும் தமிழுக்கே ஒரு புதுப்பொலிவை அல்லவா சேர்க்கிறது. “கண்ணனைச் சென்று தலைக் கூடுவதற்கு ஏற்ற காலம் வந்த பின்னரும் துயிலுவதா? கேசவனைப் பாடவும் கேட்டே கிடப்பதா? மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாதிருப்பதா? பிள்ளைகள் எல்லோரும் நோன்பு நோற்கும் இடத்துக்கு வந்து விட்டார்கள். குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் படுக்கையில் கிடப்பதா? என்று ஆண்டாள் ஆதங்கத்துடன் பாடும் போதெல்லாம் அவள் துடிப்பு, வேகம் ஆகியன புலப்படுகின்றன. கண்ணனுடன் கலந்துறவாட விழையும் ஏக்கம் வெளிப்படுகிறது. மார்கழித் தவமிருந்து அவள் நீராடும் போதெல்லாம் அவள் விரகதாபம் தணிகிறதா? அல்லது இறைக்கடலிலே அமிழ்ந்து போகக் குளியல் செய்கிறாளா? அவளது விரகதாபத்தின் வெளிப்பாடுதான் என்பதை அடுத்த ஐந்து பாடல்கள் புலப்படுத்துகின்றன. எப்படி? கண்ணனுடன் கலந்து மகிழ்ந்த நினைவு அவளுக்கு ஏற்பட்டிருக்குமானால் குளித்து விட்டு அவள் நேரே வீட்டுக்கல்லவா வரவேண்டும். இதோ அவள் நந்தகோபன் இல்லத்துக்கே சென்று துயிலும் கண்ணனைத் துணிந்து எழுப்புகின்றாள். கண்ணனை மட்டுமா அவள் எழுப்புகிறாள். உடன் துயின்ற யசோதையை எழுப்புகின்றாள். நப்பின்னையை எழுப்புகின்றாள். எவ்வளவு உரிமையுடன் இவற்றையெல்லாம் செய்கின்றாள் கண்ணன் தனக்கே வாய்த்தவனைப் போலவும் அவன் தோழமை தன் தனிச் சொத்து என்பதைப் போலவுமல்லவா ஆண்டாள் செயல்படுகிறாள.
கண்ணன் துயில் எழுந்தபின், ஆண்டாள் தோழியருடன் சேர்ந்து ஒதுங்கி நின்று நாணத்துடன் அவன் அருட்பார்வையை வேண்டி நிற்கின்றாள். கண்ணனின் துயில் நீக்கமும் இருகண் நோக்கமும் திங்களும் ஆதித்தனும் தங்கள் விழிதிறந்து பார்த்ததைப்போல் அமைகின்றன. ‘தாமரைப் பூப்போன்ற நின் கெங்கண்ணைச் சிறிதே எம்மை நோக்கி விழிக்கமாட்டாயா?’ என்று ஏங்குகின்றனர். அவர்கள் அங்கு வந்த நோக்கத்தைக் கூறுகின்றனர். மக்கள் தங்கள் தேவைகளுக்காக மன்னவனிடம் தானே முறையிடுவர். இதோ ஆண்டாளும் அவள் தோழியாரும் கண்ணனிடம் முறையிடுகின்றனர். “எங்களை நீ அடிமையாக ஏற்றுக்கொள்; நாங்கள் உனக்கே தொண்டு செய்வோம்; அதற்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் விடியல் தவமிருந்து வந்துள்ளோம்; எங்களை ஏற்றுக் கொண்டால் நாங்கள் பெரிதும் மகிழ்வோம்” என்றுவேண்டுகின்றனர். கண்ணனின் பார்வை தோழியர்கட்கு அருட்பார்வையாய்த் தெரியும்போது ஆண்டாளுக்கு மட்டும் கசிந்த பார்வையாய்த் தெரிகிறது. அதனால் நேரே அவனைப் பார்க்காமல் தன் கண்ணால் அவனை அளக்க முனைகிறாள். பின்னர்க் கண்ணனுடன், தனக்கும் தன் தோழிர்க்கும் உள்ள ஒழிக்க முடியாத கண்ணனால் மறுக்க முடியாத உறவை நினைவுபடுத்தித் தாங்கள் வேண்டுவனவற்றைக் கேட்கின்றனர். இதோ ஆண்டாள் கேட்கிறாள்.
“சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும்உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட் செய்வோம்
மற்றைநம் காம்ங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் !”
உனக்கு ஆட்செய்வதும் அடிமையாவதுமே எங்கள் தவம்! வேள்வி!” எல்லாம் என்று கூறி இறையனுபவத்துடன் ஒன்று கூட முனையும் முனைப்பே திருப்பாவையாய் ஆண்டாளின் திருவாயில் மலர்ந்தது.
கண்ணன் என்னும் இறைப்பேற்றுக்கு வேண்டிய பிரபத்தி ஆண்டாளுக்குக் கிட்டியது. ஆயினும் கிருஷ்ணானுபவம் அவளுக்குக் கிட்டியதா? கிட்டவில்லை. இருப்பினும் ஆண்டாள் விட்டாளா? அடுத்த முயற்சியை மெல்ல மெல்ல ஆனால் வலுவாக மேற்கொள்கிறாள். காமனை வழிபட்டுக் காமன் தாள்பணிந்து, கண்ணனை அடைய முனைகிறாள். அந்த முனைப்பு 173 பாடல்களில் நாச்சியார் திருமொழியால் - ஒரு மொழியாய் – பெருமொழியாய் வெளிப்படுகிறது. ஆண்டாளின் காதல் துடிப்பு இப்பாடல்களில் வெடித்துச் சிதறுகிறது. காலத்துக்குக் கட்டுப்படாத வசந்தப் பூக்களாய்ப் பூத்து நிறைகிறன.
நாச்சியார் திருமொழியில் காமனை வழிபடுவது போல் பாடல் தொடக்கம் அமைந்தாலும் உண்மையில் இங்குக் காமன் கண்ணனே ஆவான். அல்லது கண்ணனிடம் இட்டுச் செல்லும் வாயிலாவான். கண்ணன் முகம் கண்ட கண்கள், வேறு மன்னர் முகம் காண்பதா? கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதா? அவன் காமனாக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால் என்ன?.
“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்; அவன் திருக்கண் நோக்கம் வேண்டும்; அவன் திருக்கைகளால் தீண்டும் புகழ் வேண்டும்; கேசவ நம்பியைக் கால் பிடிக்க வேண்டும்; பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழவேண்டும்” என்று சூளுரை எடுத்துக் கொண்டவளல்லவோ ஆண்டாள்! கண்ணனின் மாற்று வடிவத்தைக் கூட மனத்தில் தீண்ட விரும்பாதவள், பிருந்தாவனக் கண்ணனையே மனத்தின் விருந்தாக்கியும் மருந்தாக்கியும் கொண்டவன் அவள். தென்றள் மென்மையாக வீசும் போதும். திங்கள் எழும்போதும். இளவேனில் மலரும் போதும் ஆண்டாளின் நினைவுகள் அலை மோதுகின்றன; நிலைகொள்ள மறுக்கின்றன!
இத்தகைய கனவுப் பாடல்கள் தமிழ் இலக்கியத்துக்கு ஆண்டாள் அளித்த புதுக் கொடையாகும் திருமணத் தொடர்பான பாடல்கள் சங்க இலக்கியத்திலும் உண்டு. ஆனால் காதல் உணர்வையே திருமணம் வரை / திருமண நிகழ்ச்சிகளுடன் உள்ளக்கி நீட்டித்துப்பாக்கும் மரபு, தமிழுக்குப் புதுமையானது அத்தகைய புதுமையை ஆண்டாள் செய்கின்றாள். அவள் காட்டும் புதுமை என்ன? கண்ணன் மணமகனாய் ஆயிரம் யானைகள் சூழ நடக்கின்றான். நிறைந்த பொற்குடங்கள் எங்கும் வைக்கப்பட்டுள்ளன தொங்கும் தோரணங்கள் எங்கும் நாட்டப்பட்டுள்ளன. என்று கனவு காணுகிறாள் ஆண்டாள்.
“வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம்எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழிதான்!”
எனத் தொடங்கிப் பல நிகழ்ச்சிகளைச் சுவைமிக்க கனவுகளாகக் காணுகிறாள். திருமணம் வரை நீண்ட கனவு, பின்னர்க் கண்ணனை அனுபவிக்கத்துடிக்கிறது. இந்த இடம்தான் ஆண்டாளைப் பொறுத்த வரை கண்ணன் முழுதும் மானுடனாகக் காட்சியளிக்கும் இடமாகும். இதை இறை அனுபவம் என்று எவரும் வாதிட்டுவிட முடியாது. வலம்புரிச் சங்குக்குக் கிட்டிய கண்ணனின் வாயமுதும், மணமும் தனக்குக் கிட்டவில்லையே என்ற ஏக்கத்தில் அச் சங்கிடம் கேட்பதாக அமைந்த பாடல் ஆண்டாளின் மானுடக் காதல் ஏக்கத்தின் கொடுமுடி; கண்ணனைத் தன் வாழ்க்கைத் துணையாகவே எண்ணிப் பார்த்ததன் விளக்கம் விருப்புற்று ஆண்டாள் பாடிய அப்பாடல் இதோ:
“கருப்பூரம் நாறுமோ?
கமலப்பூ நாறுமோ?
திருப்பளச் செவ்வாய்தான்
தித்தித் திருக்குமோ?
மருப்பொசிந்த மாதவன்தன்
வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெணசங்கே!”
இதே காதல் வேகத்தை அவள் மேகத்திடம் சொல்லி அனுப்பும் செய்தியிலும் காணலாம். காமத் தீ உள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் ஏமத்தோர்தென்றலுக்கு இலக்காய்’ இருப்பதாக ஆண்டாள் விரகதாபத்தால் புலம்பிக்கொண்டே மேகத்திடம் தூது சொல்லி விடுகின்றாள். காணும் கரிய பொருள்கள் அனைத்தும் அவளுக்குக் கண்ணனின் வடிவங்களாகவே தெரிகின்றன.
“தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்” என்று நலிந்து பேசும் ஆண்டாள். குயிலைப் பார்த்து ‘நீயும் கூவிக்கூவி என்னைத் தசைக்காதே ‘ என்று கெஞ்சுகிறாள். ‘நீ கூவுவதாக இருந்தால் கண்ணனை வருக வருக என்று கூவு’ என்று வேண்டுகிறாள்.
காதலனைப் பிரிந்தவர்கள் மீண்டும் காதலன் வரும் நாளை எண்ணிக் கூடல் இழைத்துப் பார்ப்பது பழந்தமிழர் வழக்கம். முத்தொள்ளாயிரப் பாடல் இதற்குச் சான்று பகர்கிறது.
“கூடற்பெருமானைக் கூடலார் கோமானை
கூடப் பெறுவேனேல் கூடென்று கூடல்
இழைப்பான்போற் காட்டி இழையாதிருக்கும்
பிழைப்பின் பிழைபாக்கறிந்து”
என்பது அப்பாடல். மானிடர்க்கென்று வாழ்க்கைப்பட விரும்பாத ஆண்டாளும் கண்ணனைத் தன் காதலனை நினைத்து இதோ கூடல் இழைத்துப்பார்க்கிறாள்.
“பழகு தான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே”
கண்ணனைப் பிரிந்திருக்கும் ஆற்றாமை மட்டுமின்றித், தான் கண்ணன்பால் கொண்டதால், பரம்பொருட் காதலே என்பதையும் இப்பாடலில் ஆண்டாள் விளக்குகின்றாள், கண்ணனைப் பரம்பொருளாக அறிவு ஏற்றுக்கொள்கிறது. ஆனால் மணமோ அவனை மானிடனாகவே காண்கிறது. எப்படி? ஆண்டாள் தோழியரோடு சிற்றில் ஆடும் போது கண்ணன் முற்றத்தூடு புகுந்துருகிறான்; முகம் காட்டிப் புன்முறுவல் செய்கிறான்? சிற்றிலோடு ஆடுவோரின் சிந்தையையும் சிதைத்து விடுகிறான். அவ்வாறே நீரிலேதோழியருடன் ஆண்டாள் குளிக்கும்போது கண்ணன் நீதியல்லாதன செய்கிறான்; அவர்களின் துகிலைக் கவர்ந்து சென்ற பின் தந்தருளுகின்றான். இவையெல்லாம் கண்ணனை மானிடனாகவே காட்டுகின்றன.
கண்ணன் மீது ஆண்டாளுக்கு ஏற்படும் நினைவுகள், மலரும் நினைவுகளாக இல்லாமல் தொடரும் நினைவுகளாகவும் கனவுகளாகவும் இருக்கின்றன. சிறு சிறு விளையாட்டுகளுடன் அவள் நினைவு முடிந்து விடுகிறதா என்ன? திருமணம் வரை ஒரு முழு இல்லற வாழ்வை நோக்கி அவள் கனவுகள் விரிகின்றன.
காதல் உணர்ச்சி உடலையும் அளவு கடந்து வருத்தும் நிலையில் ஆண்டாளின் புலம்பல் மொழி நமக்கு அவள்மேல் மிகுந்த கழிவிரக்கத்தை உண்டாக்குகிறது. கண்ணனை அடையத் துடிக்கும் மானிட வேகம், அடைய முடியாத நடைமுறை . இருப்பினும் என்ன? கண்ணன் விரும்பி அணியும் பொருள்கள், தன்மீது பட்டால், தன் காதல் வேகம் தணியாதா என்ற ஏக்கம் . கண்ணன் தன் அரையில் விரும்பி அணியும் வண்ண ஆடை கொண்டு வீசி விட்டால், தன் வருத்தம் தீரும் என்று ஆண்டாள் வேண்டுகிறாள். அவன் அமுதவயில் ஊறிய நீரைக்கொண்டு வந்து, தன் தாகத்தை நீக்கி இளைப்பைப் போக்க வேண்டுகிறாள்.
இதே காதல் வேகத்தை நாம் நந்திக் கலம்பகத் தலைவியிடமும் காணுகின்றோம். ஆனால் அத்தலைவி நந்தியின் ஆக்கத்தைத் தழுவினால்தான் தன் விரக தாபம் தீரும் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறாள் அவள் விரக தாபத்தைத் தவிப்பதற்காகத் தோழியர் பூசும் சந்தனமெல்லாம் அவளுக்குச் செந்தழலைப் பூசியது போல் இருக்கிறது. மாறாக ஆண்டாள், கண்ணன் என்னும் உணர்வைத் தழுவி அவன் அணிந்திருந்த பொருள்களைத் தழுவி ஆறுதல் பெற முனைகிறாள். மானிடக் காதல் வேகம் இருந்தாலும் தெய்வீகப் பேராற்றல் அவள் உள்ளத்தைச் சற்றுத் தணிவிக்கிறது இந்த அருளுணர்வு இல்லாவிடில் மானுடக் காதலுக்கும் தெய்வீகக் காதலுக்கும் வேறுபாடு இல்லையல்லவா?
“களிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்
குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே!”
என்று கண்ணனைக் கண்டு நிம்மதி கொள்கிறாள்.

முடிவுரை:
பரமாத்மாவுடன் சீவாத்மா இணைய முயன்றதன் வெடிப்பான வெளிப்பாடு ஆண்டாளின் பாடல்கள். மொழி தெரிந்து, அதன் சுவை தெரிந்து , ஆண்டாள் வீறு பொங்கப் பாடப்பாட அந்த மொழியே அந்தத் தமிழே ஆண்டாளை அரவணையானுக்கு அண்மையில் அழைத்துச் சென்று விடுகிறது. கண்ணனுடனேயே ஆண்டாள் கலந்து விட்டாள் என்பது பௌராணிகம் ஆண்டாளுக்கு அவள் பாடிய தமிழ்தான் மெய்க்காப்பு! தமிழ்தான், தமிழர் அவளுக்குத் தந்த சீதனம்! வாழ்க ஆண்டாள்!

No comments:

Post a Comment