Search This Blog

Thursday, June 9, 2011

அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சீனா: நிபுணர்கள் எச்சரிக்கை

அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சீனா: நிபுணர்கள் எச்சரிக்கை

வரும் 2016ம் ஆண்டில் விண்ணை முட்டும் வகையிலான 800 அதி உயர கட்டடங்களை சீனா நிறுவும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என அந்நாட்டு நிபுணர்கள் அரசை வலியுறுத்துவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த தனியார் வார இதழ் ஒன்று உலகின் அதி உயர கட்டடங்கள் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் 200 அதி உயர கட்டடங்கள் தான் உள்ளன. எனினும் உலகில் உள்ள பத்து மிகப்பெரிய கட்டடங்களில் ஐந்து கட்டடங்கள் சீனாவில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
152 மீற்றர்(500 அடிகள்) உயரம் கொண்ட கட்டடங்கள் அதி உயரம் கொண்டவை எனும் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. முடிவில் ஹோங்கொங் நகரில் 58 கட்டடங்களும், ஷாங்காயில் 51 மற்றும் ஷென்சென்னில் 46 கட்டடங்களும் அதி உயரம் கொண்டவையாக இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் தற்போதுள்ள நிலையே தொடருமானால் வரும் 2016ம் ஆண்டில் 800 அதி உயர கட்டடங்களை சீனா நிறுவும் என தெரிகிறது. ஏற்கனவே 200 புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சீனாவைச் சேர்ந்த பொருளாதார பேராசிரியர் வாங் ஜியான்மோ கூறியதாவது: அரசின் இந்த நடவடிக்கை நிலத்தை பாதுகாக்கும் முயற்சி என துவக்கத்தில் கூறப்பட்டாலும் தற்போது நாட்டின் கனவுத்திட்டமாக மாறியுள்ளது.
நகரங்களில் உள்ள மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க இதுபோன்ற அதி உயர அடுக்குமாடிக் கட்டடங்களை சீனா அமைத்து வருகிறது. எனினும் அதிக பொருட்செலவில் நிறுவப்படும் இத்தகைய கட்டடங்களை பராமரிக்கும் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது.
ஷாங்காய் நகரில் உள்ள 421 மீற்றர் உயரம் கொண்ட ஜின் மா டவர் அடுக்குமாடிக் கட்டடம் ஒரு சதுர மீற்றருக்கு மூன்றாயிரம் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை பராமரிக்க ஆண்டிற்கு 75 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க டொலர் செலவாகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள் மட்டுமல்லாமல் புறநகர்ப்பகுதிகளிலும் தற்போது இதுபோன்ற கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஷாங்காயில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தை விட உயரமானதாக குவாங்சி யுவாங் பகுதியில் 528 மீற்றர் உயரத்திலான கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
"இதுபோன்ற கட்டடங்களில் முதலீடு செய்பவர்கள் அனைவரும் பிறரிடம் கடன் வாங்கியே செய்கின்றனர் என்பதால் தங்களின் சுயலாபத்துக்காக உயரத்தை அதிகரித்துக் கட்டுகின்றனர்" என ஷாங்காய் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment