Search This Blog

Tuesday, June 14, 2011

ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்

ஏதேனும் தவறு செய்து விட்டால் வருந்தும் பழக்கம் குரங்குகளுக்கும் உண்டு: ஆய்வில் தகவல்

செய்த தவறுக்கு வருந்துவது மனிதர்களிடம் உள்ள உணர்வுகளில் முக்கியமானது. இந்தக் குணம் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.
ஆனால் ஆசிய வகைக் குரங்குகளிடமும் இந்தக் குணம் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூஹேவன் நகரில் உள்ள யேல் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டாயோல் லீ மற்றும் ஹிரோஷி அபே என்ற இரு பேராசிரியர்கள் விலங்குகளைப் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
தங்கள் ஆய்வின் ஒரு கட்டமாக கணணியில் விளையாடக் கூடிய குழந்தைகளுக்கான விளையாட்டை குரங்குகளுக்கு சொல்லிக் கொடுத்தனர். அதில் வெற்றி பெற்ற குரங்குகளுக்கு அதிகளவில் பழச்சாறு பரிசாக வழங்கப்பட்டது.
ஆய்வாளரின் துணையோடு தான் சில குரங்குகள் விளையாட நேரிடுகிறது என்றால் அந்தக் குரங்குகளுக்குச் சிறிய பரிசு அளிக்கப்பட்டது. விளையாட்டில் தோற்ற குரங்குகளுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. தங்களுக்கு எதுவும் வழங்கப்படாததற்கு தாங்கள் சரியாக விளையாடாததே காரணம் என்பதை உணர்ந்து கொண்ட அந்தக் குரங்குகள் மிகவும் வருத்தம் அடைந்தன.
அடுத்த முறை விளையாடும் போது வெற்றி பெற்ற குரங்குகள் விளையாட்டில் என்ன விதத்தைக் கையாண்டனவோ அதையே தாங்களும் கையாள முயன்றன. இதன் மூலம் தங்களின் பழைய முயற்சியால் விளைந்த விளைவுகளை சீர்தூக்கி ஆராய்ந்து அந்தத் தவறில் இருந்து விடுபட அவை விரும்புகின்றன என்பது தெரியவந்தது.
வாழ்நாளில் தாங்கள் செய்த ஏதாவது ஒரு தவறுக்காக வருந்தி அதன் மூலம் மூளையில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு சிலர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் மூளை நோய்கள் பற்றிய தீர்வுக்கு இந்த ஆய்வு பயன்படுத்தப்படும் என்று பேராசிரியர்கள் இருவரும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment