Search This Blog

Wednesday, June 22, 2011

கலைடாஸ்கோப்-23


லைடாஸ்கோப்-23 உங்களை வரவேற்கிறது


==

சமீபத்தில் பார்த்த ஒரு கார்ட்டூன் எரிச்சலடைய வைத்தது . நித்யானந்தா, சங்கராச்சாரியார், பிரேமானந்தா, புட்டபர்த்தி பாபா எல்லாரும் ஒரு புறம் நின்று சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் "ஏய், ஜக்கி, நீ எப்போ எங்க லிஸ்டுல சேரப் போற? உன்னோட வீடியோ சீக்கிரம் ரிலீஸ் பண்ணு" என்கிறார். ஆன்மீகத்தில் ஒருவர் நல்லவராக இருந்தால் இவர்களே விடமாட்டார்கள் போலிருக்கிறது. வீடியோவை எதிர்பார்க்கும் சிஷ்யர்களுக்கு வீடியோவை ரிலீஸ் செய்யும் குரு தானேகிடைப்பார்?..SUPPLY FOLLOWS DEMAND !

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊரில் ஒரு போலிச் சாமியார் இருந்தார். (ஒரு ஊருக்கு ஒரே ஒரு போலிசாமியார் தானா ? என்றெல்லாம் கேட்கக் கூடாது ஆமாம்)அவரிடம் ஒரு சிஷ்யன் புதிதாக சேருகிறான். அவனுக்கு அந்த குருவின் மேல் அளவு கடந்த பக்தி,திட நம்பிக்கை எல்லாம் இருந்தது.ஒரு நாள் கூட குருவின் சேவையை தவற விடமாட்டான்.

ஒருநாள் அந்த ஊரில் பேய்மழை..யாரும் வெளியே தலைகாட்டவில்லை.சாமியாரின் மற்ற சிஷ்யர்கள் அவர் பக்கம் எட்டிகூடப்
பார்க்கவில்லை..பக்கத்து கிராமத்தில் இருக்கும் இந்த சீடன் மட்டும் நேரம் தவறாமல் குருவின் பணிவிடைக்கு வந்து நின்றான்.
அவருக்கு ஆச்சரியம்: "ஊரில் பேய்மழை பெய்கிறது. நீ இருக்கும் கிராமத்திற்கும் இந்த ஆசிரமத்திற்கும் இடையே ஓடும் காட்டாற்றில் பயங்கர வெள்ளம் பாயுமே? எப்படி வந்து சேர்ந்தாய் ? என்று கேட்கிறார்.

அதற்கு அவன் "ரொம்ப சுலபம் குருவே, உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே தண்ணீரின் மேல் நடந்து வந்தேன்" என்கிறான்.

இதைக் கேட்ட குருவுக்கு கர்வம் தாங்கவில்லை.."நம் பெயரை சொல்லிக் கொண்டே ஒருவன் தண்ணீர் மேல் நடக்கிறான் என்றால் நம்மால் பறக்கவே முடியும்" என்று நினைத்துக் கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு அந்த நதிக்கு வருகிறார். பெருமிதத்துடன் நதியில் கால் எடுத்து வைத்ததுமே உள்ளே முழுகி விடுகிறார்.."ஐயோ ஐயோ யாராவது காப்பாற்றுங்கள்" என்று அலறுகிறார்.

இந்தக் கதையில் இருந்து என்ன தெரிகிறது? குரு எப்படிப்பட்டவர் என்பது முக்கியம் அல்ல. சிஷ்யனின் நம்பிக்கை தான் முக்கியம் என்று. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படக்கூடிய ஒரு மோசமான ஆள் ஒரு உண்மையான குருவிடம் இருந்தாலும் எதுவும் நடக்காது. ஆனால் உண்மையான சிஷ்யன் ஒருவன் போலி குரு ஒருவரிடம் இருந்தாலும் அவன் வாழ்வில் அதிசயங்கள் நடக்கலாம். நித்தியானந்தாவின் சீடர்களுக்கும் நல்ல விஷயங்கள் பல நடப்பது இப்படி தான்..இதற்காக போலி குருவிடம் போய் சேருங்கள் என்று சொல்லவில்லை.இருக்கிறவர்களையும் போலி குருவாக மாற்றி விடாதீர்கள்.."அவர் மேல ஒரு F .I .R கூட இல்லை..அவர் எல்லாம் என்ன ஆன்மீக குரு?" என்ற நிலைமையை கொண்டு வந்து விடாதீர்கள்.

ஜக்கி வாசுதேவ் எத்தனை மரங்களை நட்டிருக்கிறார் என்பது தெரியுமா? சாயிபாபா மோசடி செய்திருந்தாலும் கூட
சென்னைக்கு தண்ணீர் உதவி செய்யவேண்டும் என்ற அவசியம் என்ன? என்னைப் பொறுத்த வரையில் திருட்டுப் பணத்தில் இன்னொருவருக்கு உதவுவது என்பது நாமே சம்பாதித்த பணத்தை பேங்கில் போட்டு நாமே தின்று தீர்ப்பதை விட மேல்!

வெறுமனே எல்லாரையும் குறைசொல்லிக் கொண்டு இருக்கிறோமே தவிர நாம் சமுதாயத்திற்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டோமா என்று யோசிக்க வேண்டும். எல்லாரையும் சகட்டு மேனிக்கு குறை சொல்லும் ஒரு பிரபலமான (?) வெப்சைட் இருக்கிறது ( பெயர் வேண்டாம் ) .ஒருவரை கண்டபடி திட்டி எழுதினால் அது சீக்கிரம் பிரபலமாகி விடுகிறது. நான் இயற்பியல்,இலக்கியம் அது இது என்று மெனக்கெட வேண்டாம் போலத் தோன்றுகிறது. சும்மா நாலுபேரைத் திட்டி "டேய் நீயெல்லாம் யோக்கியாமா?" என்று தலைப்பு வைத்து நாலைந்து பதிவு போட்டால் போதும்.ஐநூறு FOLLOWERS கிடைத்து விடுவார்கள்!

2
==
Negotiation process, பாக ஆலோசிஞ்சி,டொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங், அங்ஙன யாருட முன்பிலும், Sorry are you ok? now? , டன்-டன்-டன், நிம்பூ கா ரஸ், நியூ பாண்ட்ஸ் பியூர் ஒயிட், யஹா பி ஹோகா வஹா பி ஹோகா, டஷ் டஷ் டஷ் ஆ ஊ ஊய், சென்னாகித்தியா? மைக்ரோ ஒயிட்னர்ஸ் பார்முலா, டுர்ர்ர்ர்ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர், ப்ரேமகா மாறிந்தி, டொய் டொய் டொடொய், ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப்போகச் சொல்வாயா?,ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

என்ன பைத்தியம் பிடித்து விட்டதா என்று நினைக்க வேண்டாம்..இன்னும் இல்லை! டி.வி யில் சானல்களை மாற்றும் போது இப்படி தான் கேட்கிறது. MUTE செய்து விட்டு மாற்றவில்லை என்றால் உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட வாய்ப்பு இருக்கிறது.


==
விஜய் டி.வி யில் 'அது இது எது' பார்ப்பீர்களா? இருப்பதிலேயே விஜய் கொஞ்சம் டீசன்டான டி.வி போல தோன்றுகிறது. காலையில் வீடு தேடி வருவான் விட்டலன்பக்தித் திருவிழா என்று அருமையாகத் தொடங்குகிறது..சன் டி.வி யில் பார்த்தால் '
ரெண்டுல தான் ஒண்ணைத் தொட வரியா' போன்ற வேறுவிதமான பக்திமணமிக்க பாடல்கள் ஒளிபரப்பாகும்..அது இது எது வில் ஒரு போட்டி..கேட்கும் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலை சொல்ல வேண்டும்.சம்பந்தம் வந்து விட்டால் அவுட்..டி.வி. சானல் மாற்றும் போது வருவது போல கண்டபடி உளற வேண்டும்.

உதாரணம்:

கேள்வி: உங்க பேர் என்ன?
பதில் : வெய்யில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு 
கேள்வி: இல்லையே, நேத்து கூட மழை வந்ததே?
பதில்: எனக்கு பாடத் தெரியாது
கேள்வி: பாத்ரூமில் கூட பாட மாட்டீங்களா?
பதில் : நேத்து நான் ஷாப்பிங் போனேன்.
கேள்வி: என்ன வாங்குனீங்க?
பதில்: ரசத்துக்கு உப்பு கம்மி..

இது மிகவும் கஷ்டம்.. நிறைய பேர் இரண்டு மூன்று கேள்வியிலேயே அவுட் ஆகிவிடுவார்கள்.. சம்பந்தமே இல்லாமல் தொடர்ச்சியாக ஐந்து வார்த்தைகளை நம்மால் சொல்ல முடியாது என்பார் எழுத்தாளர் சுஜாதா. EVERYTHING IS CONNECTED ..பஸ்ஸில் நீங்கள் பார்க்கும் யாரோ ஒரு அந்நியருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்
இருக்கக் கூடும்? ஏதாவது இருக்கும்..நீங்களும் அவரும் ஒரே பெற்றோரிடம் இருந்து தான் (ஆதாம் ஏவாள்) வந்தீர்கள் என்பது கொஞ்சம் டூ மச்சாகத் தோன்றினாலும் வேறு ஏதாவது சம்பந்தம் இருக்கலாம். நீங்களும் அவரும் ஒரே பிராண்ட் பனியன் போட்டிருக்கலாம். நீங்கள் மதியம் சாப்பிட்ட ஹோட்டல் ஓனரின் தம்பி பையனாக அவர் இருக்கலாம்! ஏன் நீங்கள் இருவரும் ஒரே பஸ்ஸில் பயணிக்கிறீர்கள் என்ற ஒன்றே போதாதா? THERE ARE MANY WAYS TO CONNECT ..

சம்பந்தேமே இல்லாத ஐந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்ளலாம்..பிறகு அவற்றை வைத்து ஒரு பொருளுள்ள வாக்கியம் ஒன்றை உருவாக்க வேண்டும்.ரெடி?

வார்த்தைகள் : அம்பேத்கார், வானம், பானிபூரி, பனியன், முள்ளம்பன்றி.. கஷ்டம் போலத் தோன்றினாலும் சுலபம் தான் .இதோ வாக்கியம்:

"அம்பேத்கார் ரோட்டில் வானம் தூற ஆரம்பிக்க அங்கே பனியன் போட்டுக் கொண்டு பானிபூரிவிற்றவன் தலை முள்ளம்பன்றி மாதிரி இருந்தது"

சரி..கலைடாஸ்கோப் வாசகர்களுக்கு ஒரு போட்டி : கீழே உள்ள வார்த்தைகளை வைத்துக் கொண்டு (அர்த்தம் உள்ள) ஒரு வாக்கியம் அமையுங்கள் பார்க்கலாம்

யானை, ஜோதிகா, இன்ஸ்பெக்டர், கொசுவர்த்தி, கப்பல் (எப்படி அமைக்கிறீர்கள் என்று பார்த்து விடுகிறேன் :-) )

4
==

நான் படித்த அறிவியலோ, இலக்கியமோ, இசையோ, தமிழோ இது வரை எனக்கு சோறு போட்டது இல்லை. நான் படித்த தொழில்நுட்பம் தான் இது வரை எனக்கும் என்னை சேர்ந்தவர்களுக்கும் படியளந்தது. அளக்கிறது. படித்த தொழில் நுட்பம் எனக்கு நிறைய வசதிகளைத் தந்திருக்கிறது.ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால் நான் எழுதிய கவிதைக்கு ஒரு நூறு ரூபாய் கிடைக்குமானால் அதுதான் எனக்கு உண்மையான சம்பளம் என்று நான் அடிக்கடி வீட்டில் சொல்வதுண்டு. 'தமிழும்' சோறு போடும் என்று நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.

இந்த ப்ளாக்கைப் படித்து விட்டு பெங்களூரில் வசிக்கும் திரு.G .M .B என்னை சந்திக்க விரும்புவதாக சொன்னார். தாசரஹள்ளியில் இருக்கும் அவர் வீட்டுக்கு சென்ற போது இன்முகத்துடன் வரவேற்றார்.. தாடிவைத்த வயசான ஒரு ப்ரொபசரை எதிர்பார்த்தேன் இவ்வளவு இளமையாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை என்றார். அழகான அடக்கமான வீடு..அன்பான மனைவி (LOVE MARRIAGE !) வீட்டின் பின் புறத்தில் சிறிய தோட்டம்..
G .M .B அவர் வரைந்த paintings சிலவற்றைக் காட்டினார்..ஒன்று எனக்கும் பரிசளித்தார். அவர் மனைவி மிக அழகாகப் பாடுகிறார். சுவையான சமையலைப் பரிமாறினார். அவர்கள் மரத்தில் பழுத்த மாம்பழங்கள், ஸ்வீட், ப்ரூ காபி என்று வரிசையாக அளித்து ராஜ உபசாரம் செய்தார்கள்! எட்டு மாதங்களுக்கு முன்னர் தான் பேரனின் உதவியுடன் தமிழில் ப்ளாக் எழுத ஆரம்பித்தாராம். இந்த கலைடாஸ்கோப் , நைவேத்தியம் சிறுகதை இரண்டும் மிகவும் பிடிக்கும் என்றார்.. . முன் பின் தெரியாத மனிதர்களையும் இணைத்து பந்தப்படுத்தும் வலிமை எழுத்துக்கு உண்டு என்று அறிந்து கொண்டேன்!

*************நன்றி ஜி.எம்.பி. சார்!**************



==
பார்த்தால் இப்போது தான் காலேஜ் முடித்த பையன் போல இருக்கிறாய் என்று சிலர் சொல்கிறார்கள். இளமையாக இருப்பது 

என்பதன் ரகசியத்தை சிந்தித்துப் பார்க்கிறேன்.. இளமையாகத் தோற்றமளிப்பது என்றால் நிறைய வழிகள் உள்ளன.
"PONDS AGE MIRACLE '' ஒரு டப்பா வாங்கி பூசிக் கொள்ளலாம். சின்னப்பையன்கள் போடும் டி-ஷர்டுகளைப் போடலாம்.
சலூனுக்கு சென்று 'பேஷியல்' செய்து கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே இளமையாக இருக்க வேண்டும் என்றால்
அதற்கு தேவை என்று நான் கருதுபவை:

1 . கடவுள், இறைவன், அல்லது ஒரு பிரபஞ்ச சக்தி WHATEVER IT IS அதனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை.

2 . நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்ளும் தன்மை

3 . நடந்தவைகளை அசைபோட்டுப் பார்த்து உள்ளுக்குள் புழுங்காமல் இருத்தல்.

4 . நிகழ்காலத்தில் வாழ்தல். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்தல் ,நடப்பவைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்

5 . பிரபஞ்சத்தைப் பார்த்து வியக்கும் விழிகள்

6 . வாரம் ஒருமுறையாவது குழந்தைகளுடன் விளையாடுதல்

7 . தனிமையில் பைத்தியமாகத் தெரிந்திருத்தல்..

இன்னொருவரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து பொருமாமல் இருத்தல்

9 . சங்கீதம்

LAST BUT NOT THE LEAST

10 . கொஞ்சம் தியானம்


==
சரி கொஞ்சம் சிரிக்கலாம்.வேறு என்ன? ஓஷோ ஜோக் தான்!

இரண்டு இட்டாலியன் ஜோக்குகள் 

ஒரு இட்டாலியன் கையில் ஒரு பன்றியை வைத்துக்கொண்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தான் .

வழியில் வந்த ஒருவன் அவனைப் பார்த்து " எத்தனை ரூபாய் கொடுத்து வாங்கினாய்?" என்று கேட்டான்

"அம்பது சென்ட்ஸ்" என்று பதிலளித்தது பன்றி ..


ஒரு இட்டாலியனின் மனைவி இறந்து விட்டாள்.. புதைப்பதற்காக சவப்பெட்டியை ஒரு வேனில் எடுத்துச் சென்றார்கள்..
வழியில் சவப்பெட்டி ஒரு பெரிய கம்பத்தில் பயங்கரமாக இடித்து விட்டது. உடனே உள்ளே இருந்து ஒரு அலறல் கேட்டது.
அவசர அவசரமாக பெட்டியை கழற்றி திறந்து பார்த்ததில் அவன் மனைவி உள்ளே உயிருடன் இருப்பது தெரிந்தது.
பின்னர் அந்தப் பெண் மூன்று வருடங்கள் உயிருடன் வாழ்ந்தாள்..ஒரு நாள் மீண்டும் செத்துப் போனாள்.
இந்த முறையும் சவப்பெட்டி..அதே பாதை..அதே வேன்..

இட்டாலியன் வண்டி ஓட்டும் டிரைவரைப் பார்த்து "அந்த கம்பத்து கிட்ட மாத்திரம் கொஞ்சம் ஜாக்கிரதையாப்
பார்த்து ஓட்டுப்பா" என்றான்.
முத்ரா

No comments:

Post a Comment