Search This Blog

Tuesday, May 10, 2011

கதாபாத்திரத்தின் வருகை

மனுஷ்ய புத்திரன்
இன்று காலை
எட்டரை மணிக்கு
ஒரு கதாபாத்திரம்
என் வாழ்க்கையில் நுழைந்தது
நான் இந்த வாக்கியத்தை
சரியாக எழுதியிருக்கிறேனா?
சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்
நான் கதை எழுதுபவன் அல்ல
மேலும் என்னைப் பற்றியும்
எந்தக் கதைகளும் இல்லை
ஒரு கதாபாத்திரத்திற்கு வேறு வழியில்லை
அது நேராக
என் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டது
நான் எனக்கு மிகவும் பிடித்த
ஒரு எழுத்தாளனின் கதையைச் சொல்லி
அங்கிருந்துதானே வருகிறாய் என்று கேட்டேன்
கதாபாத்திரம்
வேறொரு எழுத்தாளனின் பெயரைச் சொன்னது
அந்த எழுத்தாளன் எல்லா கதாபாத்திரங்களையும்
பாதியிலேயே கொன்றுவிடுபவன் என்பதால்
அது பொய் சொல்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன்
கதாபாத்திரம் தனக்கு
ஒரு பெயர் இருப்பதைச் சொன்னது
அந்தப் பெயர்கூட
எனக்கு சந்தேகத்திற்கு உரியதாகவே இருந்தது
அந்த மாதிரியான தோற்றமுள்ள
கதாபாத்திரங்களுக்கு
அந்த மாதிரியான பெயர்களை
எந்த எழுத்தாளனும் சூட்டுவதில்லை
இதிலெல்லாம் சில திட்டவட்டமான
ஒழுங்குகள் இருக்கின்றன
ஆனால்
அது ஒரு கதாபாத்திரம்தான் என்பதில்
எனக்கு சந்தேகமே இல்லை
ஒரு கதாபாத்திரம்
எப்படி ஒரு நாற்காலியில் அமருமோ
அதுபோலவே அதுவும் அமர்ந்தது
ஒரு கதாபாத்திரம்
முதல் வாக்கியத்தை எப்படிப் பேசுமோ
அப்படியே அதுவும் பேசியது
ஒரு கதாபாத்திரம்
எந்த இடத்தில் நம் இதயத்தைத் தொடுமோ
அதுபோலவே அதுவும் தொடுகிறது
கதாபாத்திரத்தின் ஆடைகள்
ஏன் கசங்கியிருக்கின்றன என்று கேட்டேன்
அதற்கு அது
ஒரு கதையைச் சொன்னது
அதன் டைரியில்
ஏன் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன
என்று கேட்டேன்
அதற்கு அது
இன்னொரு கதையைச் சொன்னது
அது ஏன்  எப்போதும்
பதட்டத்துடன் திரும்பித் திரும்பிப் பார்க்கிறது
என்று கேட்டேன்
அதற்கு அது சொன்ன கதைதான்
எல்லாவற்றையும்விட விசித்திரமானது
அது எங்கிருந்து வருகிறது என்று கேட்டபோது
மௌனமாக இருந்தது
எப்போதும்
கதாபாத்திரங்களின் மௌனங்கள்
சொற்களைவிட நம்மை மனம் கசியச் செய்வது
இல்லையா?
எனக்கு ஒரு கதாபாத்திரத்திடம்
எப்படி உரையாடுவதென்றே தெரியவில்லை
எல்லாவற்றையும் கதைகளாய் மாற்றிவிடும்
என் நண்பனிடம் அதை அழைத்துச் செல்லட்டுமா
என்று கேட்டேன்
எல்லா கதாபாத்திரங்களிடமும்
தன்னுடைய உணர்ச்சிகளைக் கலந்துவிடுபவனிடம்
என்னை ஒப்படைத்துவிடாதே என்று
அது கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டது
நீ ஏன் உன் கதையை விட்டு
வெளியே வந்தாய் என்று கேட்டபோது
அரைகுறையாக உருவாக்கப்பட்ட
கதாபாத்திரங்களின் துக்கத்தை
ஒரு வாசகனுக்கு
ஒருபோதும்
புரியவைக்க இயலாது என்றது
கதாபாத்திரம்
என் கண்களை நேராகப் பார்த்துப் பேசுகிறது
நான் மனிதர்களின் கண்களை
ஒருபோதும் சந்திப்பதே இல்லை
நாம் யாருடைய கண்களைப் பார்க்கவில்லையோ
அவர்களைப் பற்றிய எல்லா பொறுப்புகளிலிருந்தும்
விடுபட்டு விடுகிறோம்
ஆனால்
ஒரு கதாபாத்திரத்தின் கண்களை
நம்மால் தவிர்க்க முடிவதே இல்லை
அது பல நேரங்களில்
நமது கண்களைப்போலவே இருக்கிறது
அல்லது நம்மால் ஒருபோதும்
மறக்க முடியாதவர்களின் கண்களாக இருக்கிறது
புத்தகத்திலிருக்கும்
ஒரு கதாபாத்திரத்தை துண்டிப்பது எளிது
நீங்கள் அந்தப் பக்கத்தை
மூடி வைத்துவிடுகிறீர்கள்
நாடகத்திலிருக்கும்
ஒரு கதாபாத்திரத்தை விலக்குவது எளிது
திரைகள் விழுந்துவிடுகின்றன
சினிமாவில் இருக்கும்
ஒரு கதாபாத்திரத்தை அழிப்பது எளிது
விளக்குகள் எரியத் தொடங்கிவிடுகின்றன
வாழ்க்கைக்குள் ஒரு கதாபாத்திரம் வரும்போது
எல்லா ஒழுங்குகளும் குலையத் தொடங்கிவிடுகின்றன
ஒவ்வொரு சிறிய செயலும்
ஒவ்வொரு சிறிய எண்ணமும்
ஒரு புனைவாகத் தொடங்கிவிடுகிறது
ஒரு மனிதனை வெளியேற்றுவதைப்போல
ஒரு கதாபாத்திரத்தை செய்யமுடியாது
ஒரு அன்பைப் புறக்ணிப்பதுபோல
ஒரு கதாபாத்திரத்தின் இருப்பை புறக்கணிக்க இயலாது
ஒரு நிஜ மனிதனும்
ஒரு கதாபாத்திரமும்
எப்படி ஒன்றாக
ஒரு வாழ்க்கையைப்
பகிர்ந்துகொள்ள முடியும் என
கதாபாத்திரத்திடம் துக்கத்தோடு கேட்டேன்
எந்த ஒரு கதாபாத்திரமும்
எப்போதும் ஒரு மனிதனாவதில்லை
ஆனால்
எல்லா மனிதனும்
ஒரு கதாபாத்திரம் ஆகலாம்தானே
என்று அது
என்னை நோக்கிப் புன்னகைத்தபோதுதான்
நான் அதன் வருகையைப்
புரிந்துகொள்ளத் தொடங்கினேன்

No comments:

Post a Comment