Search This Blog

Thursday, May 19, 2011

தீவுகளாய் வாழ்க்கை..




 
Join Only-for-tamil
ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரன், கையில் காபியுடன் வாசலில் இருந்த சேரில் அமர்ந்தான். பக்கத்து வீட்டில் ஒரே சிரிப்பும், கலகலப்புமாக இருப்பதைப் பார்த்தான்...
""ரூபிணி... பக்கத்து வீட்டில் என்ன விசேஷம்?'' என்று, அங்கு வந்த மனைவியை கேட்டான்.
""அதுவா... அந்த வீட்லே இருக்காங்களே சிவகாமி அம்மா, அவங்களுக்கு, 60வது பிறந்தநாள் வருதாம். அதை கொண்டாட மூன்று மகன்கள், மருமகள்கள், பொண்ணு, மாப்பிள்ளையும், குழந்தைகளோடு ஊரிலிருந்து வந்திருக்காங்க; அதான் பாட்டும், சிரிப்புமாக இருக்கு,'' என்றாள்.
""ஆமாம் ரூபிணி... குடும்ப உறுப்பினர்கள் ஒண்ணு சேர்வது சந்தோஷமான விஷயம்தானே,'' என்றான்.
""அதற்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். அது சரி... உங்கம்மா எப்ப இங்கே வர்றாங்களாம்?''
""அடுத்த மாதம் அனுப்பி வைக்கிறதா அண்ணன் சொன்னாரு.''
சந்திரனின் அம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். ஓரிடம் என்றில்லாமல், எல்லா மகன்களின் வீட்டிலும் சில மாதங்கள் இருப்பாள். ஆனால், ரூபிணிக்கு, மாமியார் வந்தாலே, எப்போது கிளம்புவாள் என்றாகி விடும். அவள் செய்யும் வேலைகளில், ஏதாவது குறை கண்டுபிடித்து, மற்ற மகன்கள் வீட்டில் நடந்ததை விலாவாரியாக விளக்கி, அந்த மருமகள்கள் மீது குற்றப் பத்திரிகை வாசிப்பது, ரூபிணிக்கு எரிச்சலாக வரும்.
ஏதோ இரண்டு மாதம் இருந்துட்டு போறவரிடம், வாய் கொடுக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்து விடுவாள்.
"பெரிய குடும்பத்தில் மருமகளாக வந்திருக்கே... பிரச்னை இருக்கத்தான் செய்யும்; அனுசரித்து போறது தான் குடும்பம். அம்மா இருக்கிற நாட்களில், அவங்களோடு கொஞ்சம் அனுசரித்து போயிடு ரூபிணி. தேவையில்லாமல், பிரச்னையை உருவாக்கிடாதே!'
— சந்திரன், அவளிடம் அடிக்கடி சொல்லும் விஷயம் இது.
வாசலில் சிவகாமி அம்மாவின் மருமகளும், மகளும் நிற்பதைப் பார்த்து, வரவேற்றாள் ரூபிணி.
""குங்குமம் எடுத்துக்குங்க... சாயந்திரம் ஏழு மணிக்கு, அம்மா, "பர்த்-டே' பார்ட்டி; ரொம்ப சிம்பிளா கொண்டாடறோம். வெளி ஆள் யாரையும் அழைக்கலை; ஆனா, உங்களை மட்டும் அவசியம் வரணும்ன்னு சொல்லி, அம்மா, அழைச்சிட்டு வரச் சொன்னாங்க... வந்துடுங்க.''
""கட்டாயம் வர்றேன்... அம்மா, ரொம்ப அமைதியான சுபாவம் உள்ளவங்க; நல்லா பழகுவாங்க. அவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கணும். நீங்க வந்து அழைச்சதிலே ரொம்ப சந்தோஷம்.''
""ரூபிணி... நான் வரலை; அவங்க அழைச்சதுக்கு நீ மட்டும் போயிட்டு வா. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. பெரியவரையும், "வாக்கிங்' போகும் போது பார்த்து, "விஷ்' பண்றதோட சரி; அதிகம் பழகினதில்லை. நீ போயிட்டு வா.''
அதற்கு மேல் கணவனை வற்புறுத்தாமல், அவள் மட்டும் பக்கத்து வீட்டிற்கு கிளம்பினாள்.
""வாம்மா ரூபிணி... உன் வீட்டுக்காரரையும் அழைச்சுட்டு வந்திருக்கலாமே...''
- வாசலில் வந்து வரவேற்றாள் சிவகாமி அம்மா.
""அவருக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா...'' என்று சொன்னபடி உள்ளே நுழைந்தாள்.
ஹாலில் பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டு, கலர் ரிப்பன்களால் தோரணங்கள் கட்டப்பட்டு, அந்த இடம் அழகுபடுத்தப்பட்டிருந்தது. நடுவில் சின்ன மேஜையில், பிறந்தநாள் கேக், வெட்டுவதற்கு காத்திருந்தது.
பட்டுப் புடவையில், முகமெல்லாம் புன்னகை மின்ன, பேரன், பேத்திகள் தன்னை சூழ்ந்திருக்க, அங்கு வந்த சிவகாமி கேக்கை வெட்ட, கூடியிருந்த பெரியவர்களும், குழந்தைகளும், கைதட்டி ஆரவாரம் செய்து, வாழ்த்து தெரிவிக்க, அந்த இடமே சந்தோஷத்தில் ஜொலித்தது.
பெரிய மருமகள் தட்டில் கேக் வைத்துக் கொடுக்க, புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள் ரூபிணி.
சிவகாமி அம்மா, கணவருடன் அமர்ந்திருக்க, ஒவ்வொரு குடும்பமாக, குழந்தைகளுடன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, ரூபிணியும் எழுந்து சென்று, அவர்கள் காலில் விழுந்தாள்.
""தீர்க்க சுமங்கலியா இரும்மா!'' என்று வாழ்த்தி, அவளுக்கு குங்குமம் வைத்தாள் சிவகாமி.
""ரூபிணி... அம்மாவோடு பேசிட்டு இருங்க. பத்து நிமிஷத்தில் சாப்பாடு ரெடியாயிடும்; வந்து கூப்பிடறேன்.''
சிவகாமி அம்மாவின் மகள் அன்புடன் சொல்ல, ""இருக்கட்டும்மா... ஒண்ணும் அவசரமில்லை.'' என்றவள், சிவகாமி அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
எல்லாரும் அடுத்த அறைக்கு சென்றுவிட, ரூபிணியும், சிவகாமி அம்மாவும் தனித்து விடப்பட்டனர்.
""அம்மா... உங்க குடும்பத்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடுறத பார்க்கிறதுக்கு நிறைவா இருக்கு.''
""ஆமாம்மா... என் மகன்கள், மருமகள்கள் எல்லாரும் பிறந்தநாளை கொண்டாடணும்ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. இரண்டு நாள் முன்னதாகவே வந்துட்டாங்க. எல்லாரும் சேர்ந்து குலதெய்வம் கோவிலுக்குப் போய், பொங்கல் வச்சு, சாமி கும்பிட்டு வந்தோம். இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போவாங்க.''
""உங்க நல்ல மனசுக்கு, மூன்று மருமகள்களும், நல்ல குணமுள்ளவங்களாக உங்களுக்கு அமைஞ்சுட்டாங்க. உங்ககிட்டே எவ்வளவு அன்பா, பிரியமா நடந்துக்கறாங்க. இதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்.''
அவள் குரலில், தன் குடும்பம் அப்படி இல்லை என்ற தாபம் தெரிந்தது.
""ரூபிணி... உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா... ஒரு குடும்பத்துக்குள் வர்ற எல்லா பெண்களுமே அடிப்படையில் நல்லவங்கதான்மா. சந்தோஷமாக புகுந்த வீட்டில் வாழணுங்கிற எண்ணத்தோடு தான் அடியெடுத்து வைக்கிறாங்க. அவங்க குணம், பழக்க வழக்கங்கள் எல்லாத்திலும் நிறை, குறை இருக்கத்தான் செய்யும்; அதை, பெரிசு படுத்தாம போறதுதான் குடும்பம்.''
சிவகாமி அம்மாள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பார்த்தாள் ரூபிணி.
""இப்பவும், என் மருமகள்கள் மூன்று பேரும், மூன்று விதமாகத்தான் இருக்காங்க. பெரியவளுக்கு நல்லா சமைக்கதத் தெரியும்; கொஞ்சமும் சுத்தம் பத்தாது. சின்னவ கை வேலைப்பாட்டில் திறமைசாலி; குடும்பப் பொறுப்பு குறைச்சல். நடு மருமகளுக்கு சமையலே சரியா வராது; பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதுவாள்.
""வீட்டுக்கு வந்த மருமகள்களை, அவங்க நிறை, குறைகளோடு அப்படியே நான் ஏத்துக்கிட்டேன். குறைகளை சொல்லிக் காட்ட மாட்டேன். காலப்போக்கில் அவங்களே திருத்திப்பாங்கங்கற நம்பிக்கை இருக்கு.
""ஒருத்தரை பத்தி ஒருத்தர்கிட்டே எந்த குறையும் சொல்ல மாட்டேன். அப்படியே சொன்னாலும், என் மருமகள்கிட்ட பார்த்த நல்ல விஷயங்களைப் பத்தி தான் பேசுவேன். அவங்களும் என்னை இன்னொரு தாயாகத்தான் பார்க்கிறாங்க. என் பிள்ளைங்க மேலலேயும், சிறு வயதிலிருந்த அதே பரிவோடும், பாசத்தோடும் இருக்கேன்.
""நான் இப்படி இருக்கிறதாலே தான் என் குடும்பம், தீவுகளாக மாறாமல் இணைஞ்சிருக்கு. நாள், கிழமைன்னா ஒரு கூரையின் கீழ் ஒண்ணா சேருகிறோம். சந்தோஷமாக ஒருத்தரோடு ஒருத்தர் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கிறோம். இந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது ரூபிணி...
""அண்ணன், தம்பின்னு பிறந்துட்டா மட்டும் பத்தாது; கடைசி வரை, அந்த உறவுகளோடு இணக்கமாக சேர்ந்து வாழணும். ஆளுக்கொரு இடத்தில் இருக்காங்க. அது, அப்படியே விலகி போயிடாம, என் அன்பால அவங்களை இணைச்சு வச்சிருக்கேன்.
""நானும், நாலு பிள்ளைகளைப் பெத்தேன்னு சொல்றதில் நிறைவு இல்லை; கடைசி வரை அந்தப் பிள்ளைகள் ஒத்துமையாக வாழ, நான் உறுதுணையாக இருந்தேன்னு சொல்றேன் பாரு... அதுதான்மா பெத்தவங்களுக்கு பெருமை!
""இத்தனை சொந்த பந்தங்களோடு பிறந்துட்டு, தன் வீடு, தன் குடும்பம்ன்னு, தனி, தனி தீவாக வாழறதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகுது. என் காலத்துக்குப் பிறகும், என் பிள்ளைகள் ஒத்துமையாக இருப்பாங்கங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு!''
சிவகாமி சொல்லி முடிக்க, ரூபிணிக்கு எந்தவித தொடர்புமில்லாமல், நான்கு திசைகளில் வாழும் தன் கணவனின் சகோதரர்களும், குறைகளையே பேசிக் கொண்டிருக்கும் தன் மாமியாரும் ஞாபகத்துக்கு வர, எதையோ ஒன்றை இழந்த துக்கம் நெஞ்சில் மரமாய் இறங்கியது.
***

Thanks & Regards

G.Selvaraj

No comments:

Post a Comment