Search This Blog

Monday, May 30, 2011

பாண்டிச் செல்வி

அது ஒரு மென்பொருள் ஆய்வகம் , அன்று வளாகத்தேர்வில் தேர்வாகிவந்த புதியவர்களால் வண்ணமயமாகியிருந்தது.
ஒரிருவருடம் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள் புதியவர்களுக்கு பயிற்சியளிக்க பணிக்கப்பட்டிருந்தனர். இப்படித்தான் அகிலனிடம் வந்துசேர்ந்தாள் செல்வி.
அகிலன்..ஐந்துஇலக்கத்தின் உச்சத்தில் சம்பளம்வாங்கும் இன்றையதலைமுறை. தோற்றப்பொலிவும் காந்தப்பேச்சும் என யாரையும் கவர்ந்துவிடுவான்.
ஒருவாரம் கடந்தபின்னும் செல்வியிடம் அவன் வித்தைகள் எதுவும் எடுபடவில்லை. அந்தவார இறுதியில் புதியவர்களுக்கான வரவேற்பு விருந்து..மாமல்லபுரம் கடற்கரை கேளிக்கைவிடுதியில் .  இரண்டிரண்டாய் ..கூட்டங்கூட்டமாய் என பேச்சு சுவாரசியமாய்  ஓடிக்கொண்டிருந்தது.தோழிகளுடன் செல்வியும் பேசிக்கொண்டிருந்தாள். அவளைக்கவனித்த அகிலனுக்கு, அவளிடமிருந்து  கண்ணை எடுக்கவே மனமில்லை  . அந்த மாநிறமும் திராவிடமுகமும் அவனைக்கட்டியிழுத்தது. 
"செல்வி வாயேன்..கடற்கரைப்பக்கம் போய்டுவருவோம் " , என்று அவளை அழைத்துப்போனான். வேலை..படிப்பு நண்பர்கள்..என்று ஏதேதோ பேசினாலும் அகிலன் மனம் பேச்சில்ஒட்டவில்லை. மெதுவாக அவள் இடையில் கைபோட்டுவளைத்தான். தீப்பட்டதுபோல உதறிஎழுந்தவள் ஆவேசமாய்  , " ஏய் என்னனு நெனைச்ச என்னை ? , நான் மதுரைக்காரியாக்கும் ..போன நிமிசத்துவரைக்கும் கையில கருக்கருவா புடிச்சி புல்லறுத்துக்கிட்டிருந்தவ . இதெல்லாம் எங்கிட்ட வச்சிக்காத ஆஞ்சிப்புடுவேன்ஆஞ்சி " , என்று கத்திச்செல்ல.. ஆடிப்போனான் அகிலன்.
"கடவுளே..என்னா பொண்ணுடா இவ , கட்டினா இவளைத்தான் கட்டணும் " ..உறுதிகொண்ட அகிலன் வேகமாய் அவளைத்தொடர்ந்து ஓடினான் ...செல்வி செல்வி என்று கத்தியவாறே...!
 
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் 
திண்மை உண்டாகப் பெறின்.
 
கற்பெனும் திண்மை மெய்க்காதலையும் பெற்றுத்தரும்.
 
                    நட்புடன்..யாழினி..  

No comments:

Post a Comment