Search This Blog

Friday, May 20, 2011

வாக்குறுதி

பயங்கரமான புலியொன்று தன்னை நோக்கி பாய்ந்தோடி வருவதைக் கண்ட ஒரு மனிதன் மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.அங்குள்ள ஒரு குரங்கைப் பார்த்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். அவ்வாறே செய்வதாகக் குரங்கு வாக்களித்தது.சிறிது நேரத்திற்கெல்லாம் குரங்கு தூங்கிவிட்டது.
 
கீழே பசியால் தவித்த புலி அந்த மனிதனைப் பார்த்து "குரங்கை நீ கீழே தள்ளிவிட்டாயானால் நான் அதைக் கொன்று பசியாறுவேன். பிறகு உனக்கு ஒன்றும் தீங்கிழைக்கமாட்டேன்" என்றது. எப்படியாவது தன்னைக் காத்துக் கொண்டால் போதுமென்று நினைத்த அந்த மனிதன் குரங்கைக் கீழே தள்ளிவிட்டான். புலி அதைத் தனது வாயால் கவ்வியதாயினும் அதைத் தின்னவில்லை. அது மனித மாமிசத்தையே விரும்பியது. எனவே அது குரங்கிடம்,"எனக்கு வேண்டியது மனித மாமிசம்; நீ மரத்தின் மீதேறி அந்த மனிதனைக் கீழே தள்ளி விடுவாயானால் உன்னை விட்டுவிடுகிறேன்" என்று சொல்லித் தன் வாயினின்று குரங்கை விடுவித்தது. குரங்கு உடனே மரத்தின்மீது ஏறிக் கொண்டது.
 
ஆனால் புலி விரும்பியதுபோல் அது செய்யவில்லை. அந்த மனிதனுக்கு ஏற்கனவே தான் பாதுகாப்பு தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டதால் அவனைக் கீழே தள்ள முடியாதென்று சொல்லிவிட்டது. குரங்கு தனக்கு அந்த மனிதன் செய்த துரோகத்தைக் கண்ட பிறகும் தனது வாக்குறுதியை கைவிட மறுத்துவிட்டது.
--வானதி திருநாவுக்கரசு தொகுத்த "உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள்" என்னும் நூலிலிருந்து. 
 கோ. வரதராஜன்  

No comments:

Post a Comment