Search This Blog

Sunday, May 15, 2011

இந்து மத வரலாற்று தொடர்-1 !!! கடவுள்உருவாக்கிய மதம் !!!!

இந்து மத வரலாற்று தொடர்-1 !!! கடவுள்உருவாக்கிய மதம் !!!!

by Keyem Dharmalingam on Saturday, 14 May 2011 at 00:10
இந்து மத வரலாற்று தொடர் 1
கடவுள் உருவாக்கிய மதம்.

ன்பை நிலை நாட்டுவதற்கு உருவானது தான் மதங்களாகும். 
 எந்த மதமும் வன்கொடுமையை வலியுறுத்தவில்லை.

ஆனால் மதங்களின் பெயரால் தான் வன்முறைகள் இன்று பரவலாக நடந்து வருகிறது.  அதற்கு காரணம் என்ன?  அன்பை போதிக்கும் மதங்களால் அராஜகங்கள் நிகழ்வது ஏன்?  என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் கிடைக்கும் பதில் ஒன்றுதான்.  மதங்களை தவறுதலாக புரிந்து கொள்வதும் என்மதம் தான் உயர்ந்தது என்று மற்ற மதங்களை ஊதாசினப்படுத்தும் மனப்போக்கும் தான் மத வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்ற பதில் கிடைக்கும். மத வெறியையும் மத அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று மக்களை நேசிக்கும் மனித நேயமிக்க சிந்தனையாளர்கள் பலரும் தங்களது அறிவாற்றலைக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.  அவர்களின் சிந்தனைக்கு உரமாகவும் சீர்திருத்தத்திற்கு வழியாகவும் எனது குருஜிக்கு தோன்றிய யோசனையின் விளைவுதான் இந்த தொடர் பதிவாகும். குருஜியின் பதிவினை மீள் பதிவு செய்துள்ளேன், குருஜியின் அருளாசியுடன்.

மதப்பிரச்சாரம் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.  ஆனால் அந்த பிரச்சாரம் எந்த நோக்கில் அமைந்திருக்கிறது என்றால் ஒன்றை தாக்கியும் இன்னொன்றை போற்றியும் தான் அமைந்திருக்கிறது.  இதில் தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் முளைவிடுகின்றன.  எனவே அந்த மதப்பிரச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதில் இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பொதுவாக இன்றைய மதப்பிரச்சாரம் என்பது சுய மதத்தினரிடம் அல்லாமல் மாற்று மதத்தினரிடம் தான் அதிகப்படியாக நடத்தப்படுகிறது. எனவே காழ்புணர்ச்சி அற்ற வகையிலும் சுய மதத்தினரே தங்களது மதக் கருத்துகளை நன்கு புரிந்துணரும் வகையிலும் நமது நோக்கம் அமைந்திருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களில் புகுந்திருக்கும் வெறியுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.  ஆகவே அந்தந்த மத அறிஞர்கள் தங்கள் மக்களுக்கு தம்தமது மதக்கருத்துகளை புரியும் வண்ணம் போதித்து மாற்று மதத்தினரையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களின் மீது பதிந்திருக்கும் வன்முறை என்ற கொடிய பாவம் கழுவப்படும்.

 சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒரு அன்பரை நான் சந்திக்க நேட்டது.  அவர் பல விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடைசியாக மதசம்பந்தப்பட்ட சில கேள்விகளை என்னிடம் கேட்டார்.  அந்த கேள்விகளில் மிகவும் முக்கியமானது இந்துக்களாகிய நீங்கள் சிலைகளை வழிபடுவது ஏன்?  பல கடவுள்களை நம்புவது ஏன்?  என்பதாகும்.  அவருக்கு நான் இந்துக்கள் உருவ வழிபாட்டை கடைபிடிப்பதன் காரணத்தையும் கடவுள் கொள்கைகளையும் விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.  அந்த விளக்கங்களில் அவர் எந்த வகையிலும் திருப்தி அடையவில்லை.  பொத்தாம் பொதுவாக கல்லை வணங்குவது தவறு என்பதில் பிடிவாதமாக இருந்தாரே தவிர நான் சொன்ன கருத்துகளை புரிந்து கொள்ள எந்த முயற்சியுமே எடுக்காமல் கண்மூடித்தனமாக தான் பேசுவதையே பிடித்துக் கொண்டு நின்றார்.  இத்தகைய பிடிவாதக் காரர்களிடம் வாதம் செய்வது என்பது மலையின் முன்னால் பேசுவதற்கு ஒப்பானதாகும்.  நமது பேச்சு நம் காதில் விழுமே தவிர மலையை எந்த வகையிலும் பாதிக்காது அதனால் அவரிடம் வேறு சில காரியங்களை பேசி அனுப்பி வைத்து விட்டேன்.  இப்படி மற்றவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்காதவாறு பல மனிதர்கள் உருவாக்கப்பட்டு நடமாட விடப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்கள் மற்றவர்களின் கருத்துகளை மட்டுமல்ல மன உணர்வுகளையும் புரிந்து கொள்வது இல்லை.

சரி ஒரு இஸ்லாமியன் இந்து மதத்தை புரிந்து கொண்டு விடுவதினால் பல நன்மைகள் உண்டு என்றாலும் கூட புரிந்து கொள்ளாமல் போவதனால் பெரும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை.  ஆனால் ஒரு இந்து தனது மதத்தை தெரிந்து கொள்ளாமல் போவதனால் நிச்சயம் பல பாதிப்புகள் ஏற்பட்டே தீரும் அந்த பாதிப்புகள் நமது நாட்டின் ஆத்மாவை அழிப்பதாகவே அமைந்து விடும். மிக வேதனையான ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் எத்தனை பேருக்கு தங்களது மதத்தைப் பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறது.  என்னால் சர்வ நிச்சயமாக அறுதியிட்டு கூறமுடியும் நம்மில் நூற்றுக்கு பத்து பேருக்கு கூட நம் மதத்தைப் பற்றி துளி அளவும் ஞானமில்லை என்று.  சரி நம்மவர்கள் ஞானம் இல்லாமல் போனதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா என்று கேட்டால் நிச்சயம் அவர்களை மட்டுமே குற்றவாளிகள் என்று கூறி விட முடியாது.

சமயத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய ஆச்சாயர்களே தங்களது பணிகளை திறம்பட செய்யாத குற்றவாளிகள் என்று கருத வேண்டும். புவியியல், பொறியியல் என்று படிப்பதனால் வேலை கிடைக்கிறது.  வருவாய் வருகிறது.  வயறும் நிறைகிறது.  மதத்தை பற்றிய அறிவை பெறுவதினால் என்ன கிடைத்து விடப்போகிறது உலக வாழ்க்கைக்கு உதவாத மத அறிவு தேவையே இல்லை.  என்று சிலர் நினைக்கிறார்கள் இவர்கள் நிச்சயமாக புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.  ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆகாரம் மட்டுமே போதுமானது என்றால் மனிதனையும், மிருகத்தையும் சமமான தரத்திலேயே வைத்துவிடலாம்.  மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்தி உயர்த்தி காட்டுவது பகுத்தறிவோடு கூடிய பண்பாட்டு செறிவாகும்.

பண்பாடு தெரியாத எந்த மனிதனும் அமைதியாக வாழ்ந்து விடமுடியாது.  மதம் என்பதும் மனிதனை பண்படுத்தும் பண்பாடு தான்.  இன்னும் சொல்வதென்றால் மதத்திலிருந்து தான் பண்பாடே தோன்றியது எனலாம். கடிவாளம் இல்லாத குதிரை நாலா திசையும் ஓடி ஆடி வீணாக அலைவது போல் ஒழுக்க நெறியில்லாத மனிதனும் தனது வாழ்நாளை வீனாக்கி கொள்கிறான்.  எனவே மனிதன் தான் அமைதியாக வாழவேண்டும் என்ற சுயநல காரணத்திற்காவது மத அறிவை பெற்றே ஆகவேண்டும்.  அப்படி பெற மறுத்தால் காற்று போன போக்கில் காற்றாடி பறந்து கிழிந்து கிடப்பது போல் நமது வாழ்க்கையும் கிழிந்து போய்விடும்.

 நமது ஜனங்கள் மத அறிவை பெறாமல் இருப்பதற்கு அவர்களின் அசட்டை மட்டும் காரணமல்ல ஆச்சாயர்களின் கவனக் குறைவும் காரணம் என்று முன்பே சொன்னேன்.  அது நான் வேடிக்கைகாக கூறியது அல்ல வேதனையோடு கூறியது ஆகும்.  நமது ஜீயர்களும், சங்கராச்சாயர்களும்  பட்டர்களும் தங்களது பார்வைகளை விசாலப்படுத்தாமல் ஒரு சிறு குழுக்களின் மீது கவனம் செலுத்தி பெருவாரியான ஜனங்களை தங்களது ஞானத்தால் வழிநடத்தாமல் போனதே மிகப்பெய குற்றமாகும்.  மடாதிபதிகள் என்பவர்கள் மக்களின் பணியாளர்களே தவிர இறைவனின் அவதாரங்கள் அல்ல.  இவர்கள் தங்களை அவதார புருஷர்களாக கருதிகொண்டதனால் ஏற்பட்ட சோகமே நம்மக்களின் தோல்விகளாகும்.  மன்னர்களின் மானியங்களை திருமடங்களின் கருவறைக்குள் பாதுகாத்து வைக்கும் சிறத்தையை விட்டுவிட்டு மதக்கருத்துகளை மன்னவனுக்கு மாடு மேய்க்கும் சின்னவனுக்கும் சொல்லியிருப்பார்களே யென்றால் இன்றைய அவல நிலை ஏற்பட்டிருக்காது.

கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மத அமைப்புகளில் ஒரு நடைமுறை இருக்கிறது.  அது என்ன வென்றால் தங்களது மதத்தைச் சார்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை மதக்கல்வி  அளிப்பது ஆகும்.  அந்த நடைமுறை நமது இந்து மதத்தில் எந்த பகுதியிலும் இல்லை அதனால் தான் நம் மதத்தின் புனித நூல் எது என்று கூட அறியாத பலர் இன்றும் இருக்கிறார்கள்.  இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் வருங்காலத்தில் நம் மதத்தின் அறிவுக் கருவூலங்கள் எது என்பதே தெரியாத வன்னம் அழிந்து போகக் கூடிய துயர நிலை ஏற்பட்டுவிடும்.  இதை மாற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தே ஆகவேண்டும்.

சிலர் கேட்கலாம் நமது நாடு முழுவதும் இந்து கோவில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  திருப்பதி, சபரிமலை, வைஷ்ணவி, காசி போன்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நகரங்கள் மட்டுமல்லாது கிராமபுறங்களில் கூட ஆன்மீக கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் போன்றவைகள் அதிகத்திருக்கிறது.  நிலைமை இத்தகைய வளர்சி பாதையில் செல்லும் பொழுது மத அறிவு வளர்ந்து தானே இருக்க வேண்டும்.  நூற்றுக்கு பத்துபேருக்கு கூட மத ஞானம் இல்லை என்பது எந்த வகையில் சரியாகும் என்று. இவர்கள் கேட்பதில் தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை.  ஆனால் இவைகளால் மட்டுமே மதஞானம் பெருகி உள்ளது என்று கூறி விட இயலாது.  ஆலயங்களுக்கு செல்வதும் யாத்திரைகள் மேற்கொள்வதும் கருத்தரங்கங்களை கேட்பதும் ஒரு மனிதனின் சமய அறிவை பெருக்கிவிடும் என்றால் பட்டி தொட்டியெங்கும் பகவத் கீதை பரவியிறுக்கும் பெருவாயான கிறிஸ்துவர்கள் கையில் பைபுளை வைத்துக் கொள்வது கௌரவம் என்று கருதுவது போலானது பகவத் கீதையை வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும். ஆனால் நிலைமை என்னவென்று நமக்கு தெரியும் மக்கள் இன்று அலகு குத்துவதும், காவடி எடுப்பதும் நெருப்பில் நடப்பதும் தான் சமய வாழ்க்கை என்று கருதும் அறியாமை நிலை மாறியிருக்கும்.

பல கிராமங்களில் சில காட்சிகளை நேரடியாகவே நான் பார்த்திருக்கிறேன் கிறிஸ்துவ மத போதகர்கள் நம் மக்களை பார்த்து நீங்கள் கல்லையும், மண்ணையும் வணங்குகிறீர்கள் அது சாத்தானின் வழிபாடாகும் என்று கேலியும் கிண்டலுமாக பேசுகின்ற பொழுது  நம் மக்களில் பலர் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும் கோபத்தால் துடிப்பதையும் பார்த்து இருக்கிறேன்.  அவர்களிடம் மட்டும் சரியான சமய அறிவு இருந்திருந்தால் கேலி செய்யும் பாதிரிகளை பார்த்து கத்தோலிக்க ஆலயங்களிலிருக்கும் சிலைகள் மட்டும் கடவுளா, முதலில் உங்களது சிலை வழிபாடுகளை நிறுத்தி விட்டு எங்களை பற்றி பேசுங்கள் என்று காரசாரமாக பதில் சொல்லியிருப்பார்கள்.  ஆனால் பாவம் அவர்கள் அப்படி பயிற்றுவிக்கப்படவில்யே நமது மடாதிபதிகள் அவர்களை பல்லாக்கு தூக்குபவர்களாகத்தானே வைத்திருக்கிறார்கள்.


இந்த மாதிரியான சிந்தனைகள் எனக்குள் எழுந்து கொண்டு இருந்த பொழுது எனது சீடர்களில் ஒருவரான சிவானந்தத்தின் குழந்தை சிவசங்கரி என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். குருஜி இந்து மதம்னா என்ன”?  என்பதே அந்த கேள்வியாகும்.  இது சாதாரணமான ஒரு குழந்தையின் விளையாட்டு தனமான கேள்வியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த கேள்வியை என்னால் விளையாட்டு தனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  காரணம் நமது மதத்தை பற்றிய அறிவு மக்களிடம் இல்லை, மதவல்லுநர்கள் அதை மக்களுக்கு தரவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. இந்து மதம் என்றால் என்ன என்று மக்கள் அறிந்து கொள்ள இதுவரை நாம் செய்தது என்ன என்றெல்லாம் எனக்குள் எத்தனையோ கேள்விகள் எழும்பியது.

மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லுவது மிக எளியது.  ஆனால் அப்படி குற்றம் கண்டுபிடிப்பதில் மட்டுமே ஒருவனின் சமூகப்பணி முடிந்து விடுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.  குறைகளை பற்றி பேசிக்கொண்டிராமல் அவைகளை நிறைகளாக்க முயற்சிப்பவனே சிறந்த மனிதன் என்று எப்போதுமே நான் கருதுவது உண்டு.  அதனால் என்னால் முடிந்த வரை நமது மதத்தை பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொல்வது என்று முடிவு செய்ததின் விளைவே இந்த பதிவாகும் .

எந்த ஒரு புத்தகத்தையும் எழுதுவதற்கு முன்னால் அதை எப்படி ஆரம்பிப்பது என்பது சிக்கலான ஒரு விஷயமாகும் அந்த சிக்கலை நிவர்த்தி செய்து விட்டோம் என்றால் எந்த சிக்கலையும் எதிர்கொண்டு சமாளித்து விடலாம்.  எனவே இந்த தொடரை குழந்தை சிவசங்கரி கேட்ட இந்து மதம் என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

No comments:

Post a Comment